தலித்தாக பிறந்தவர் புல்லட் ஓட்டக்கூடாதாம்.. மாணவன் கையை வெட்டிய மாற்று சாதியினர்.. சிவகங்கை கொடூரம்


சிவகங்கை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய பட்டியலின மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி 3 பேர் கையை வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவரின் புல்லட் வாகனத்தை அடித்து உடைத்து சூறையாடி இருக்கின்றனர்.

சாதி வெறியால் புல்லட் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவரின் கையை வெட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளக்காடாவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் – செல்லம்மா தம்பதியினர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அய்யாசாமி என்ற மகன் இருக்கிறார். இவர் சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததன் காரணமாக, அவரின் தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உழைப்பால் பொருளாதார ரீதியாக ஓர் அளவிற்கு முன்னேறிய பூமிநாதன், கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கி இருக்கிறார். இது அங்கிருந்த சில முன்னேறிய சாதி இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை.

இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்த நிலையில், புல்லட் வாகனம் வாங்கியதால் கூடுதல் விரக்தியடைந்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பூமிநாதனின் புல்லட் வாகனத்தை 2 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உடைத்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பூமிநாதன் மற்றும் அய்யாசாமி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நேற்று கல்லூரியை முடித்து அய்யாசாமி புல்லட் வாகனத்தில் வீட்டை நோக்கி வந்து இருக்கிறார். அப்போது 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி அய்யாசாமியின் கையை வெட்டி இருக்கின்றனர்.

அங்கிருந்து தப்பியோடிய அய்யாசாமி, விரைவாக பெற்றோரிடம் சென்றுள்ளார். அதன்பின் அவருக்கு உடனடியாக மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அய்யாசாமிக்கு வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனிடையே அய்யாசாமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள், வீட்டை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதி ஈஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
Share on: