
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரன் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் என்பவரின் தாய் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து கருணை அடிப்படையில் தமக்கு அந்த வேலையை வழங்கக்கோரி விக்ரம் மனு அளித்தார்.
கருணை அடிப்படையில் பெண் வாரிசிகளுக்கு மட்டுமே அங்கன்வாடி ஊழியர் வேலை வழங்க முடியும் எனக்கூறி விக்ரமின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விக்ரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், பெண் வாரிசுகளுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்ற அரசானையை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தனக்கு வேலை மறுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கருணை அடிப்படையில் விக்ரமுக்கு வேலை வழங்குவது குறித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி விக்ரம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏப்ரல் ஒன்றாம் தேதி நேரில் ஆஜராகுமாறு சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரனுக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.