
மதுரை ரயில் விபத்து சம்பவம் நடந்த போது தப்பியோடிய சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 17ஆம் தேதி புறப்பட்ட இந்த ரயிலில் பயணித்த இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்றுள்ளனர்.
மதுரையில் அதிகாலை 3.45 மணிக்கு இந்த ரயில் வந்தது. இவர்கள் சென்னை செல்வதற்காக இணைப்பு ரயிலில் அட்டாச் செய்ய மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் சுற்றுலா ரயிலை நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது அதிகாலை 4.30 மணிக்கு டீ போடுவதற்காக சிலிண்டரை ஆன் செய்து கேஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது சிலிண்டரில் இருந்த வாயு லீக்காகி தீப்பிடித்ததில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துவிட்டனர்.
ரயிலில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் எப்படி ரயிலில் சிலிண்டர் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
ரயில் பெட்டியில் இன்று மீண்டும் சோதனை செய்த போது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ரயில் பெட்டிகள் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. தீவிபத்து நடந்த போது ரயிலில் இருந்த சுற்றுலா ஏற்பாடு செய்த 5 ஊழியர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அந்த ஊழியர்களை கண்டுபிடித்த போலீஸார் அவர்களிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.