அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல், முறைகேடு.. என்னதான் செய்றீங்க? தமிழக அரசிடம் கேட்ட சென்னை ஐகோர்ட்!
தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர் சிறையில் பார்த்த வேலைக்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் 14 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறை கூறியது தொடர்பாக செய்தித் தாள்களில் வெளியான செய்தியை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது எனக் கூறிய நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். மேலும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அறிக்கையை தாக்கல் செய்தார்.
அறிக்கையை பார்த்த நீதிபதிகள், முறைகேடு தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கை வெளியான நிலையில் கடந்த 13 ஆம் தேதி தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் இவ்வளவு நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? இது போன்ற புகார்களை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்கிறதா? எனக் கேள்வி எழுப்பினர். தவறு இழைத்த அதிகாரிகள் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டு ஓய்வு பெற அனுமதிக்கக்கூடாது எனவும், இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினர்.
இதற்கு பதில் அளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், 2022 ஆம் ஆண்டு மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை வெளியானதில் இருந்து, அதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, அதன்பின்னர் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஊழல் புகார்களை அரசு தீவிரமாக கருதுவதாகவும் உறுதி தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.