வடகாடு விவகாரம்! white collar job செய்யும் கலெக்டர், எஸ்பி! நீதிபதி கண்டனம்


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நடந்த சம்பவத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆட்சியரும் காவல் துறை ஆணையரும் ஒயிட் காலர் வேலை பார்ப்பதாகவும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

வடகாடு கிராமத்தில் பட்டியலினத்தவர்களுக்கு கோயில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம் தரப்பில் வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில் வடகாடு மோதல் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நலத் துறை ஆணையம், தமிழக ஆதி திராவிட நலத்துறையின் உறுப்பினர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ஆகியோரை கொண்ட குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வடகாடு மாரியம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபடுவதை உறுதிப்படுத்தவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளைக் கொண்டு அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மனுதாக்கல் செய்யவும், திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் இன்றைய தினம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மனுதாக்கல் செய்யவும், திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் இன்றைய தினம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா, காவல் துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் ஆஜராகினார். அரசு தரப்பில், மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.8.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்கப்படும்.

அமைதி பேச்சு வார்த்தைக்குப் பிறகு அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கோயிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் கோயிலுக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதே பிரச்சினை. தற்போது அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. போதிய காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. வருவாய்த் துறையினர் வொயிட் காலர் வேலைதான் செய்கிறார்கள். கலவரம் நடந்த அன்று, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை? மே 4 முதல் 7-ம் தேதி வரை கோயில் மற்றும் பிரச்சினை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Share on:

செஞ்சி ஒரே மையத்தில் பிளஸ் 2 தேர்வெழுதிய 167 பேர் வேதியியலில் சென்டம்.. வினாத்தாள் கசிவா?


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்நிலையில் செஞ்சி ஒன்றியத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவிகள் மிகவும் கடினமான வேதியியல் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சென்டம் வாங்கியிருப்பதால், வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. மொத்தம் 7,92,494 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்.. இதில் மாணவிகள் 96.70 சதவீதம், மாணவர்கள் 93.16 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வு மையமாகவும் உள்ளது. அங்கு இந்த வருடம் 414 மாணவிகள், 210 மாணவர்கள் உள்பட 624 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இதில் 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர்.

வேதியல் மிகவும் கடினமான பாடம். பொறியியல் கட் ஆஃப்க்கு அந்த மதிப்பெண் மிகவும் முக்கியமானது. அதில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 167 மாணவர்கள் தேர்ச்சியாகியிருப்பதால் வினாத்தாள் கசிந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஒரு மையத்தில் மட்டுமல்ல, செஞ்சி ஒன்றியத்தில் உள்ள பல மையங்களில் பல மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சென்டம் எடுத்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த மேலும் பலர் 100 க்கு 99 மதிப்பெண் எடுத்துள்ளனர். பல மாணவர்கள் 90க்கும் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். இது கல்வித்துறை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில் செஞ்சி பகுதியில் மட்டும் மாணவர்கள் எப்படி சென்டம் எடுத்தார்கள் என்று விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
Share on:

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு…


பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான், நமது நாட்டு ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன். அறிவுப்பூர்வமாக செயல்பட்ட இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டு உள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனத் தெரிவித்து உள்ளார்.

இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், போர் நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Share on:

தமிழகத்தின் வாக்கு சாவடிகள் என்னென்ன? 38 மாவட்டங்களில் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?


இந்தியாவில் இருபத்தைந்து மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாடு, தனித்துவமான நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளது. மாநில நிர்வாகம் சிறப்பாக செயல்பட, தமிழ்நாடு பல்வேறு நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது நிலை மாவட்டம் ஆகும். தற்போது தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மாவட்ட ஆட்சியரால் நிர்வகிக்கப்படுகிறது. மாவட்டங்கள் மேலும் வட்டங்களுக்கு பிரிக்கப்பட்டுள்ளன.

இவை தாசில்தார்களின் மேலாண்மையில் செயல்படுகின்றன. நகர்ப்புற வளர்ச்சிக்காக, மாநிலம் பல நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிநீர், சாலை மேம்பாடு, கழிவுநீர் மேலாண்மை போன்ற பணிகள் நடைபெறுகின்றன. தேர்தலின்போது, மக்கள் தங்களது ஜனநாயக உரிமையைச் செலுத்த ஓட்டு வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்காக அமைக்கப்படுகிறது. இவ்வாறு பல அடுக்குகளாக உள்ள நிர்வாக அமைப்பு, தமிழக மக்களின் நலன்களை மேம்படுத்துவதிலும், ஒழுங்கான நிர்வாகத்திற்கும் வழிவகுக்கிறது.

மாவட்டங்கள் (38 Districts) தமிழ்நாடு தற்போதைய கணக்கீட்டின்படி 38 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும்,…
Share on:

Continue Reading

Tamil Nadu SSLC, PLUS 2 exam result 2025: பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?


தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 11, ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதன் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.

அது போல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 30 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு மே 6ஆம் தேதியும் 2023 ஆம் ஆண்டு மே 8ஆம் தேதியும் இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மே 6ஆம் தேதி வாக்கில் முடிவுகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கட் ஆஃப் மதிப்பெண்களை வைத்து கல்லூரியில் சேர மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.

தாங்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து அரசு கல்லூரியா இல்லை தனியார் கல்லூரியில் டொனேஷன் கொடுத்து சேர்வதா என்பதை முடிவு செய்வர். எனவே மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை பெற DGE TN என்ற இணையத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

tnresults.nic.in or dge.tn.gov.in. ஆகிய வெப்சைட்டுகளில் செக் செய்ய வேண்டும். அதில் “TN HSE +2 Result 2025” அல்லது “TN SSLC Result 2025” என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ஒரு பேஜ் ஓபனாகும், அதில் தேர்வு எண்ணையும் உங்கள் பிறந்த தேதியையும் கொடுக்க வேண்டும்.

அப்போது உங்களுடைய மதிப்பெண்கள் ஸ்கிரீனில் தெரியும். அதை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். பிறகு பள்ளியில் ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும். அதை வைத்து கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

தாக்குதலுக்கு ரெடியான இந்தியா? அவசர அவசரமாக.. பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை அனுப்பிய துருக்கி?


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு போர் உபகரணங்களை கொத்து கொத்தாக துருக்கி அனுப்பி உள்ளது. துருக்கிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ், ராணுவ போக்குவரத்து விமானம் உட்பட பல போர் உபகரணங்கள் நேற்று கராச்சிக்கு அனுப்பப்பட்டது.

துருக்கியின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். ஆறு துருக்கிய C-130 விமானங்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இராணுவத் தளத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு விமானங்கள் மட்டுமன்றி தோட்டாக்கள், கவச உடைகள், ஆயுதங்கள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று கொத்து கொத்தாக அனுப்பப்பட்டு உள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் எந்தெந்த நாடுகள் இந்தியாவை ஆதரிக்கும், பாகிஸ்தானை ஆதரிக்கும், நடுநிலையாக இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள்:

அமெரிக்கா – முக்கியமாக மொத்த QUAD கூட்டாண்மை வழியாக அமெரிக்கா ஆதரிக்கும்

பிரான்ஸ் – வலுவான உறவு (எ.கா., ரஃபேல் ஜெட்)

ரஷ்யா – பாரம்பரியமாக நெருங்கிய நட்பு நாடு (சீனாவுடன் ரஷ்யா நட்பில் இருந்தாலும், இந்தியாவுடன் இன்னும் நெருக்கமாக உள்ளது).

ஆஸ்திரேலியா – QUAD கூட்டாளி

ஜப்பான் – QUAD கூட்டாளி

யுனைடெட் கிங்டம் – வரலாற்று உறவு உள்ளது., இந்திய புலம்பெயர்ந்தோர் செல்வாக்கு உள்ளது.

இஸ்ரேல் – வலுவான உறவு. இரண்டு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு.

வியட்நாம் – சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா – ஆச்சரியப்படும் விதமாக, இந்தியாவுடன் நெருக்கமான உறவு கொண்டது.

பூட்டான், நேபாளம் (நடுநிலை ஆனால் இந்தியாவை நோக்கி சற்று சாய்ந்திருக்கலாம்)

பங்களாதேஷ் – இந்தியாவுடனான உறவு பாகிஸ்தான் எதிர்ப்பால் மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ஏறக்குறைய 10-12 நாடுகள் இந்தியாவை தீவிரமாக அல்லது இராஜதந்திர ரீதியாக ஆதரிக்கலாம்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள்:

சீனா – வலுவான நட்பு. முக்கிய உள்கட்டமைப்பு முதலீடுகள் (CPEC) அதிகம்.

துருக்கி – காஷ்மீர் பிரச்சனைகளில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுக்கும் முக்கிய ஆதரவாளர்.

மலேசியா (அரசாங்கத்தைப் பொறுத்து) – காஷ்மீர் மீதான சில வரலாற்று ஆதரவு காரணமாக பாகிஸ்தான் பக்கம் சாயலாம்.

கத்தார் – பாகிஸ்தான் உடன் இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது.

ஈரான் (ஒருவேளை நடுநிலையாக இருக்கலாம், ஆனால் பாகிஸ்தான் பக்கம் சிறிது அனுதாபம் உள்ளது). எனவே தோராயமாக 3-5 நாடுகள் பாகிஸ்தானை தீவிரமாக அல்லது இராஜதந்திர ரீதியாக ஆதரிக்கலாம்.

நடுநிலையாக இருக்க வாய்ப்புள்ள நாடுகள்:

ஐரோப்பிய ஒன்றியம் (பிரான்ஸ், இங்கிலாந்து தவிர, மற்ற நாடுகள் இந்தியா பக்கம் செல்லலாம்).

ஆசிய நாடுகள் (இந்தோனேசியா, தாய்லாந்து போன்றவை நடுநிலையாக இருக்கலாம்).

ஆப்பிரிக்க நாடுகள் தென் அமெரிக்க நாடுகள் (பிரேசில், அர்ஜென்டினா போன்றவை)
Share on:

அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்! “ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரியுங்கள்”-உயர்நீதிமன்றம்


அமைச்சர் ஐ பெரியசாமி அவரின் மனைவி, மகன்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர், அவரின் மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கில் இருந்து விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளிட்டோர் தரப்பில் தங்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை கூறிய குற்றச்சாட்டுகள் முகாந்திரம் இல்லாதவை, சொத்துக்களை முறையாக கணக்கீடு செய்யாமல் தங்களுக்கு எதிரான வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே வழக்கிலிருந்து விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு தரப்பில் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கை நகல்களை விளக்கி வாதிடப்பட்டது. விசாரணை நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார் மற்றும் பிரபு ஆகியோரை விடுவித்து உத்தரவை ரத்து செய்வதாகவும், குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை தினந்தோறும் நடத்தி ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மீது வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
Share on:

வரும் திங்கட்கிழமை (28ம் தேதி)க்குள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா? அல்லது ஜமீனை ரத்து செய்வதா? – செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு!


எதற்காக செந்தில் பாலாஜி இப்படி அடம் பிடிக்கிறார்? அவர் அமைச்சர் பதவிக்கு உச்சநீதிமன்றத்தால் இவ்வளவு நெருக்கடிகள் இருக்கிற போதே அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் சோதனை நடத்தில் அதில் முறைகேடு நடந்துள்ளது அதிலும் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

2006 முதல் இன்று வரை செந்தில்பாலாஜி உட்பட மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் வரை தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் அதில் மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்போதைய அமலாக்கத்துறை நடவடிக்கைகளும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளும் ஒருங்கிணையும்பொழுது திமுக அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சிக்கலாக அமையும்.

எப்படி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் “தான் பெற்ற லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன்” என்று தெரிவித்தாரோ அதேபோல நேற்று சட்டமன்றத்திலும் “பாட்டிலுக்கு 10ரூ அதிகம் பெறுவது 2011ல் இருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது” என்று இவரே சட்டமன்ற பதிவேடுகளில் உறுதிபட தெரிவித்திருக்கிறார். போதாதற்கு இந்தியாவை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டவர் டாஸ்மாக்கில் மது வாங்க சென்று MRP இல்லையா என்று கேட்க, அவரிடமும் MRPயை விட ₹20 அதிகம் கேட்டு முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது.

இப்படி நடக்கிற கொள்ளையில் பணம் இவர் கைக்கு செல்கிறது, இவரிடம் இருந்து ஆட்சி மேலிடத்திற்கு செல்கிறது என்பது தான் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. நடைபெறுகிற சூழ்நிலைகள் செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையப்போவதாக தெரியவில்லை.

முதல்வர் ஸ்டாலின் அவர்களும் செந்தில் பாலாஜியை காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் செந்தில் பாலாஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி, அரவிந்த் கெஜ்ரிவாலை போல தனக்கும், தனது குடும்பத்துக்கும், திமுக கட்சிக்கும் அதிக சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
Share on:

இன்னைக்கு டாஸ்மாக்.. நாளைக்கு வேற டிபார்ட்மெண்ட்! குறிவைக்கும் அமலாக்கத்துறை.. 23ஆம் தேதி கிளைமாக்ஸ்


டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.

இந்த நிலையில், நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது.

இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை வரை சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்க துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் ஆகியோர் வாதிட்டனர். அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை எனவும் வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினர். அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் 2021 வரை ஆண்டு முறைகேடு கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன் எனவும் அரசுத்தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையும் குறிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா? எனவும் அரசுத் தரப்பில் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததாகவும், முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம் எனவும் கூறினார்.

டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளதாகவும், சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தியதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ்சிங் இன்று பதில் வாதம் செய்தார்.. அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை என்றும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களை முடிவடைந்ததையடுத்து வரும் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Share on:

துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் பண்றதுக்கு இல்ல.. காலுக்கு கீழ சுடுங்க! போலீசை விளாசிய நீதிபதி.!


பிரபல ரவுடி வெள்ளை காளி போலீஸாரால் சுட்டு கொலை செய்யப்பட உள்ளார் எனவும், அவரின் வழக்கு விசாரணையை வீடியோ கான்ஃபரன்ஸில் நடத்த உத்தரவிட கோரி சகோதரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சமீப காலமாக என்கவுண்டர் அதிகரித்து உள்ளது”எத்தனை என்கவுண்டர்கள் சமீபமாக நடைபெற்றுள்ளன? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர் எனவும், சுட்டுப்பிடியுங்கள் காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள். காவல்துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும்தான் துப்பாக்கி வழங்கப்படுள்ளது எனவும் கூறியுள்ளார்.

திருச்சி சேர்ந்த சத்யஜோதி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது சகோதரர் வெள்ளைக்காளி என்ற காளிமுத்து சென்னை புழல் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த மாதம் கிளாமர் காளி என்ற ரவுடி மதுரையில் கொலை செய்யப்பட்டார்.

இதில் எனது சகோதரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. ஆனால் உள்நோக்கத்துடன் அந்த கொலையில் எனது சகோதரரையும் தொடர்புபடுத்தி, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் என்ற நபர் சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் எனது சகோதரரையும் இந்த வழக்கில் தொடர்பு படுத்தி அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை காரணம் காட்டி அவரை என்கவுண்டர் செய்வதற்கானக் வாய்ப்பு உள்ளது. ஆகவே எனது சகோதரரிடம் நடத்தப்படும் விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடத்தவும், அனைத்து விசாரணைகளையும் வீடியோ பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்தேன். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “விசாரணை எனும் பெயரில் அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்யப்படும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, சமீப காலமாக என்கவுண்டர் அதிகரித்து உள்ளது. எத்தனை என்கவுண்டர்கள் சமீபமாக நடைபெற்றுள்ளன? காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர்.

சுட்டுப்பிடியுங்கள் காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள். காவல்துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும்தான் துப்பாக்கி வழங்கப்படுள்ளது.” என கருத்து தெரிவித்தார். அரசுத்தரப்பில், ” 2 காவல்துறையினர் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Share on: