
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் கட்சி எது?

தேர்தலின் போது மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தான். எந்த கட்சி எதை வைத்து பிரச்சாரம் செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வம் அரசியல் விமர்சகர்களிடமும், ஆர்வலர்களிடமும் மேலோங்கி வருகிறது. அந்த வகையில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல்களை முன்னெடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேபோல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தும், அதில் தி.மு.க. அமைச்சர்கள் செய்த ஊழல்கள் குறித்தும் பிரச்சாரத்தில் ஈடுபடும். பா.ஜ.க.வை பொறுத்தவரை தி.மு.க.வை விமர்சிக்கும் ஆனால் அ.தி.மு.க.வை விமர்சித்து வாக்குகள் சேகரிக்குமா என்பதில் சந்தேகம் தான். ஏனெனில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளது. அ.தி.மு.க. வாக்கு சேகரிப்பின் போது தி.மு.க.வை மட்டும் விமர்சிக்காமல், பா.ஜ.க. மற்றும் மத்திய அரசின் மீதான மக்களின் எதிர்மறையான விமர்சனங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் பட்சத்தில் அ.தி.மு.க. மக்கள் ஆதரவை பெறும். மாறாக பா.ஜ.க.வை ஆதரித்தால் மக்கள் ஆதரவை இழப்பதோடு தேர்தலில் தோல்வியையும் சந்திக்கக் கூடும்.
விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு விடை கொடுக்குமா தி.மு.க. அரசு?

கடந்த நவம்பர் மாதம் நடந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்ட ரகங்களுக்கு கூலி உயர்வு அளிப்பது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை கிடப்பிலேயே போட்டுள்ளனர் ஜவுளி உரிமையாளர்கள். இதனால் விரக்தியடைந்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி வீதம் இதுவரை ரூ.1500 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக பாதிப்பை தொடர்ந்து ஜவுளி உரிமையாளர்கள், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதில் 12% வரை மட்டுமே கூலி உயர்வு வழங்கப்படும் என கூறியதால், அதிருப்தியடைந்த விசைத்தறி உரிமையாளர்கள் 20% கூலி உயர்வு வழங்கினால் மட்டுமே வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக கூறியுள்ளனர். இதனால் தற்போது நடந்த 25-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதில் தமிழக அரசு தலையிட்டு விசைத்தறி உரிமையாளர்கள் கோரும் 20% கூலி உயர்வை ஏன் பெற்றுத்தர முயற்சிக்க கூடாது?
மத்திய அரசின் பட்ஜெட் மக்கள் கஜானாவை நிரப்பவா அல்லது தனது கஜனாவை நிரப்பிக் கொள்ளவா?

தி.மு.க. அரசின் அலட்சியத்தால் 2 சிறுவர்களின் உயிர் பறிபோனது – முதல்வரின் செயல்பாடுகள் வார்த்தைகளாக மட்டுமே உள்ளது

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட். கணிசமாக குறைந்த மாணவர்கள் சேர்க்கை. விழிக்குமா தி.மு.க. அரசு?

அ.தி.மு.க. ஆட்சியின் போது கோரப்பட்ட நீட் விலக்கிற்கு மத்திய அரசு செவி மடுக்கவில்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த பயனும் இல்லை. தி.மு.க. தேர்தலின் போது ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும், அதற்கான சூட்சமம் எங்களிடம் உள்ளது எனவும் வாக்குறுதிகளை உதிர்த்தது. ஆனால் இன்று வரை அந்த சூட்சமம் வெளிவரவில்லை. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னரிடம் ஒப்புதல் வாங்கும் முயற்சி இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் தமிழ்வழி பயின்ற மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் விகிதம் 14.88 லிருந்து 1.99 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் இருந்து ஒரு மாணவர் கூட மருத்துவராக முடியாது. தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து கொண்டிருப்பது மத்திய அரசின் கண்களுக்கு தென்படவில்லை என்பது வேதனையாக உள்ளது. தமிழக அரசு, மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை வீதத்தை அதிகரிக்க, பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.
நெடுஞ்சாலை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை – மத்திய அரசு சாடல்!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில், தமிழகத்தில் உயர் மேம்பால பணிகள், ஆறு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை பணிகள் மத்திய அரசின் நிதி உதவியோடு நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் தமிழகத்தில் 1,149 கி.மீ. நீளத்திற்கு 23 சாலைகள் அமைக்க மத்திய போக்குவரத்து அமைச்சகம் சார்பில், ரூ.37 ஆயிரத்து 359 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இவற்றில் அதிகபட்சமாக திருச்சி – சிதம்பரம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி ரூ.2,550 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை உள்பட பல மாவட்டங்களிலும் சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றுள் சில பணிகள் ஆமை வேகத்திலும், சில பணிகள் பாதியிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்காரி, தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்விற்கு மண் போன்ற கட்டுமான பொருட்கள் கிடைக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே காரணமாக கூறப்படுகிறது. சாலை அமைக்கும் பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி சாலை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு, பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்கள் சரிவர கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் மத்திய, மாநில அரசுகள்! உரிமைகள் மீட்கப்படுமா?

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனம் மீனவப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்றனர். இன்று மீண்டும் நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த 11 மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடற்கொள்ளையர்களின் தொடர் அட்டகாசத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படாமல், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போதுமான நடவடிக்கை எடுக்க மத்தியஅரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
களங்கத்தை துடைக்க ரெய்டை யுக்தியாக பயன்படுத்தும் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் நலப்பணித்திட்டங்கள் என்று எதையும் தொடங்கவில்லை. தன் ஆட்சிக்கு அவப்பெயர் வரும் போதெல்லாம், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ரெய்டு ஏவி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் முதல்வர். இதனால் மக்களும் திசை திரும்பி விடுகிறார்கள். இதை ஒரு யுக்தியாக கொண்டு ஸ்டாலின், மாதம் ஒரு வருமான வரி சோதனையை முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து நடத்தி வருகிறார்.
வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை முழுமையாக நிவாரணம் போய் சேரவில்லை. பருவமழையின் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் சென்னை ஸ்தம்பித்து போனது. இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.5000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று நிர்பந்தித்தது. தற்போது ஆட்சியில் அமர்ந்த பின்பு பொங்கல் பரிசுத்தொகை வழங்கவில்லை. நிதி நெருக்கடியை காரணமாக சொன்னது. ஆனால் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. சரி பொங்கல் பரிசாவது தரமானதாக இருந்ததா? என்றால், அதுவும் இல்லை. இவை எல்லாம் மக்களுக்கு தி.மு.க. ஆட்சியின் மீது பெரும் ஏமாற்றத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சியின் போது களங்கம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ரெய்டு என்ற ஆயுதத்தை தனது யுக்தியாக பயன்படுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்.
தொடரும் விவசாயிகளின் தற்கொலை முடிவுக்கு வருமா? மரண வாக்குமூலம்! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

கந்துவட்டி கொடுமையால் தங்கவேல் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கந்துவட்டி கொடுமையால் நடக்கும், விவசாயிகளின் தொடர் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. விவசாயியின் மரண வாக்குமூலத்தின் படி, அதற்கு காரணமான கூட்டுறவு வங்கி அலுவலர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இதுபோல் துயர சம்பவம் நிகழாமல் இருக்க, தனியாரிடம் கடன் பெற்ற விவசாயிகளின் விவரங்களை சேகரிக்க வேண்டும். அவர்கள் பெற்ற தொகையை கூட்டுறவு வங்கிகளே ஏற்க வேண்டும். வரும் காலங்களில் கூட்டுறவு வங்கிகளில் மட்டும் விவசாயிகள் கடன் பெறும் வகையில், அதிக கடன் தொகை வழங்க வேண்டும்.
குழுவில் இணைய