தடதடக்கும் தாம்பரம்.. ஒரே நாளில் பெண் காவலர் உள்ளிட்ட 8 பேரிடம் செயின் பறிப்பு


தாம்பரம் அருகே ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு தாம்பரத்தில் நேற்று ஒரே நாளில் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்திரா என்ற பெண் காவலர் நேற்று இரவு 9.40 மணியளவில் தன் பணியை முடித்துவிட்டு முடிச்சூரில் உள்ள தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தேவராஜா சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்நோக்கி இரண்டு இளைஞர்கள் சென்றனர். ஒரு இளைஞர் நடந்தும், மற்றொரு இளைஞர் பைக்கிலும் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

இந்திரா வீட்டுக் கதவை திறந்து கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் தாமதமானது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இளைஞர்கள் இந்திராவின் ஐந்து சவரன் தங்க செயினை பறித்து நொடிப் பொழுதில் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த காவலர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதேபோல தாம்பரம் ரயில்வே மைதானத்தில் பொருட்காட்சியை பார்வையிட வந்த ஒரு பெண்ணிடமும் தங்க செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில் செயின் பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.

இதுகுறித்து எட்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் தாம்பரம் சுற்றுவட்டார பகுதி பெண்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாம்பரம் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்துக்குட்பட்ட காவலர்கள் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில் அனைத்து காவலர்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாலை வரை அந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அதில் தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து காவல்நிலைய காவலர்களும் கலந்து கொண்டனர். அதை நன்கறிந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தெரிந்து கொள்ளையர்கள் பைக்கை சாலையோரமாக நிறுத்தி சென்றது தெரியவந்துள்ளது.

காவலர்கள் அந்த பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் கல்லூரி பொறியாளரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share on:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நிறைவடைந்த வேட்பு மனுத்தாக்கல்.. மொத்த எண்ணிக்கை எவ்வளவு?


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தமாக 65 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கவுள்ளது.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், 2023ஆம் ஆண்டு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்ற நிலையில், கடந்த ஆண்டு திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விசி சந்திரகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. பின்னர் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி வேட்பாளராக அறிவித்தார்.

இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 65 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கவுள்ளது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாக வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தமாக 93 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதில் 6 பேர் திரும்ப பெற்ற நிலையில், 38 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மொத்தமாக 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
Share on:

சட்டமன்ற விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய முக்கிய கருத்துக்கள்- லிஸ்ட் போட்டு அடித்த கே.சி.பி


1.) “மக்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே விடியல் ஆட்சியின் சாட்சி” என முதல்வர் கூறுவதை கேட்டால் “துன்பம் வரும் வேளையில் சிரி” என்று கூறும் வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது.

“விடியலின் அடையாளம் எது தெரியுமா நான் செல்கிற இடமெல்லாம் கூடுகிற மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி தான்.” எனக்கூறுகிறார் முதல்வர். ஆனால் அவர் செல்லுகிற இடமெல்லாம் மக்கள் தானாக கூடுவதில்லை. திமுகவினர் பணம் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள், அதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி தான் என்பது முதல்வருக்கு எப்பொழுது தெரிய போகிறது.

2.) “பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி” என்றீர்களே அலங்கோல ஆட்சிக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?

“மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்கு ஸ்டாலின் பஸ் என்றே பெயர் வைத்துவிட்டார்கள்” என்று கூறுகிறீர்கள். அதேபோல் ஸ்டாலின் டாஸ்மாக் பட்டி தொட்டி எங்கும் பரவி இருக்கிறதே, ஸ்டாலின் ஆட்சியில் கஞ்சா, குட்கா, Cool Lip போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் தமிழகம் முழுவதும் சர்வ சாதாரணமாக உள்ளது பள்ளிகள் வரை பரவியுள்ளது. அதை தடுக்க வேண்டியது ஸ்டாலின் நிர்வகிக்கிற காவல்துறையின் கடமை தானே.

3.) “மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுக்கிற புதுமை பெண் திட்டத்தின் மூலமாக கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 30% அதிகரித்து இருக்கிறது” என்று கூறுகிறீர்கள். மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பது வரவேற்க தகுந்த திட்டம் தான். ஆனால் அதற்காக தவறான தரவுகளை வெளியிடக் கூடாது. கடந்த 5 ஆண்டுகள் பெண்கள் கல்லூரியில் சேர்ந்த விகிதத்தை பட்டியலாக வெளியிட்டு எப்படி 30% அதிகரித்துள்ளது என்பதை காட்டுங்கள். மேலோட்டமாக பார்த்தால் இது தவறான தகவல் போல் தெரிகிறது.

4.) “இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது” இப்படி ஒரு பொய்யை சொல்வதற்கு உங்கள் மனம் துளியும் உருத்த வில்லையா? தமிழகத்தில் அதிகப்படியிலான பெண்கள் வன்கொடுமை, சட்ட ஒழுங்கு சீர்கேடு உங்கள் ஆட்சியில் தான் ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்க வாய் கூசாமல் எப்படி உங்களால் இப்படி சொல்ல முடிகிறது?

5.) “வரம்புகளுக்கு உட்பட்டு தான் தமிழ்நாடு அரசு கடன் வாங்கி உள்ளது” என்று கூறுகிறீர்கள் ஆனால் கடன் வாங்கப்பட்ட பணம் எங்கு செலவு செய்யப்பட்டுள்ளது? அதனால் மக்கள் பலனைடைந்துள்ளார்களா அல்லது உங்கள் அமைச்சர்கள் பலனைடைந்துள்ளார்களா?

6.) “டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு வழிவகுத்தது அதிமுக தான்” என சொல்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் தான் இப்படியே அடுத்தவர்கள் செய்த தவற்றை சொல்லி உங்கள் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிப்பீர்கள்? நீங்கள் தானே இன்றைக்கு ஆளும் கட்சி. எடப்பாடி பழனிசாமியின் பலவீனத்தால் தான் நீங்கள் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறீர்கள் உங்கள் பலத்தில் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

7.) ” தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.” என்று சொல்கிறீர்கள். நீங்கள் தமிழகத்தில் இன்று வரை ஆட்சிப் பொறுப்பேற்று 1321 நாட்கள் தான் ஆகிறது. அதிலேயே 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக சொல்கிறீர்கள். அப்படி என்றால் ஒரு நாளுக்கு சராசரியாக 75 போராட்டங்களை நீங்கள் அனுமதித்திருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் அனுமதிக்காத போராட்டங்கள் ஏராளம். இந்த ஒரு உண்மையே உங்கள் ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளுக்கும், அவலங்களுக்கும் சாட்சி என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை. மக்கள் என்ன மகிழ்ச்சி வெள்ளத்திலா போராட்டம் நடத்துகிறார்கள்? தங்கள் எதிர்ப்பை இந்த அரசாங்கத்திற்கு தெரிவிக்கத்தானே போராட்டம் நடத்துகிறார்கள்.
Share on:

போலீஸ் ஸ்டேசனிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! கல்வீசி தாக்கியதில் போலீஸ் காயம்! பரபரத்த தேனி.


தேனியில் போதைப் பொருள் நுண்ணறிவு காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து ஏர்கன், 24 செல்போன்கள், கஞ்சா ஆயில் உட்பட ஏராளமான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிர்ச்சியாக கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்லும் போது பிடிக்க முயன்ற முதல் நிலை காவலர் மீது கல்வீசி தாக்கப்பட்டதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் தேனி சமதர்மபுரத்தில் போதைப் பொருள் நுண்ணறிவு காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, செல்போன்கள், வாகனங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று காவலர்கள் வழக்கமான ரோந்து பணிக்கு சென்றிருந்த நிலையில் காவல் நிலையம் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் இரண்டு கொள்ளையர்கள் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த இரவு காவல் பணியில் இருந்த முதல் நிலைக் காவலர் முருகேசன் என்பவர் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து அவர்களை சோதித்த போது, அவர்களிடம் ஏர்கன், செல்போன்கள் என ஏராளமான பொருட்கள் இருந்ததால் விசாரணைக்காக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். அப்போது இரண்டு பேரும் அவரை தள்ளி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். இதனையடுத்து கொள்ளையர்களை காவலர் பிடிக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிய நிலையில், பின்னால் துரத்திச் சென்று பிடிக்க முயன்ற போது, இருவரும் சேர்ந்து முருகேசன் மீது கல் வீசி தாக்கியதில் முருகேசனின் தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் என்பவரிடம் முருகேசன் நடந்ததை கூறிய போது, இருவரும் சேர்ந்து துரத்தியதில் கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார்.

இதனைத் தொடர்ந்து கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில், அவன் பெயர் நிதீஷ் குமார் (23) என்பதும் பண்ணைப்புரம் வடக்குத் தெருவை சேர்ந்தவன் என்பதும், அவனுடன் சேர்ந்து கொள்ளையடித்த மற்றொருவன் கோம்பையைச் சேர்ந்த உதயகுமார் (24) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து 24 செல்போன்கள், ஒரு ஏர்கன், இரண்டு கேமராக்கள், மைக் கேமரா ஒன்று, ஒரு பைனாக்குலர், வெள்ளை பவுடர், கஞ்சா ஆயில் 650 ML, 50 கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உதயகுமார் தப்பி ஓடிய நிலையில், நிதிஷ்குமாரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த முருகேசன் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக பிடிபட்ட குற்றவாளி நிதீஷ்குமார் தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து ஏர்கன் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்ததுடன், போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர்.
Share on:

இந்தி தேசிய மொழி அல்ல.. அது அலுவல் மொழி தான்.. சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு!


இந்தியாவில் இந்தி தேசிய மொழி அல்ல என்றும், அது அலுவல் மொழி மட்டுமே என்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஸ்வின், இனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். ஃபேர்வெல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கூட அளிக்கப்படாமல் அஸ்வின் ஓய்வு பெற்றது தமிழக ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் ஐபிஎல் போட்டியில் மறக்க முடியாத ஃபேர்வெல்லை கொடுப்போம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரர் அஸ்வின் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகள், 3,503 ரன்களை விளாசியுள்ள அஸ்வின், ஒருநாள் கிரிக்கெட்டுஇல் 156 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஸ்ரீகாந்த், முரளி விஜய் ஆகியோருக்கு பின் தமிழ்நாட்டில் இருந்து அஸ்வினால் மட்டுமே இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடிந்தது.

அதேபோல் சர்வதேச அளவில் அறிவுப்பூர்வமான கிரிக்கெட் வீரர்களில் அஸ்வினுக்கு நிகர் அஸ்வின் மட்டும் தான். அந்த அளவிற்கு ஒவ்வொரு மைதானம், ஒவ்வொரு பேட்ஸ்மேன், கிரிக்கெட்டின் வரலாறு, கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான தகவல் என்று அனைவரும் வியக்கும் அளவிற்கு தகவலை வைத்திருப்பவர். இதனால் அஸ்வின் விரைவில் பயிற்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓய்வுக்கு பின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வரும் அஸ்வின், சில தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இன்று காஞ்சிபுரத்தில் உள்ல ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 23ஆம் ஆண்டு பட்டமளிப்பு நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

அதன்பின் அஸ்வின் பேசுகையில், மாணவர்களை பார்த்து ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி என்று கேள்வி கேட்டார். அதற்கு ஆங்கிலத்திற்கு ஓரளவிற்கு சத்தம் வந்தது. பின்னர் தமிழ் மொழி என்று கேட்ட போது அரங்கமே அதிர்ந்தது. இறுதியாக இந்தி என்று கேட்ட போது, எந்த சத்தமும் வரவில்லை. அப்போது அஸ்வின், இந்தி நமது தேசிய மொழி அல்ல.. அது வெறும் அலுவல் மொழி மட்டும் தான்.

இதனை பகிர்ந்து கொள்ள நினைத்தேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அஸ்வின், நான் கேப்டனாக இல்லாததற்கும் பொறியியல் தான் காரணம் என்று கூறினார். அதேபோல் என்னை பார்த்து யாராவது நீ அந்த விஷயத்திற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறினால், நான் அதை மட்டுமே செய்வேன். கேப்டன்சி விஷயத்தில் யாரும் இதுவரை என்னை பார்த்து அப்படி சொல்லவில்லை என்று தெரிவித்தார்.
Share on:

டங்ஸ்டன் எதிர்ப்பு விஸ்வரூபம்- 20 கிமீ நடந்து சென்று மதுரையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள்!


மேலூர் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 கிமீ நடந்து சென்று மதுரை கோரிப்பாளையம்- தமுக்கம் மைதானம் சாலையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலூர் நரசிங்கப்பட்டியில் இருந்து நடைபயணமாக சென்று ஆயிரக்கனக்கான மக்கள் மதுரையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட இடங்களில் மலைப் பகுதிகளை அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஏலம் விடும் வரையில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என மத்திய அரசு குற்றம்சாட்டி இருந்தது. இந்த நிலையில் டஸ்ங்டன் சுரங்க ஏலத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனாலும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக மத்திய அரசு கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அரிட்டாபட்டி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மேலூரில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

அத்துடன் நரசிங்கப்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுமார் 20 கிமீ நடந்து மதுரை மாநகரை வந்தடைந்தனர். மதுரையில் தமுக்கம் சாலையில் தலைமை தபால் நிலையம் முன்பாக அமர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்; டங்ஸ்டன் சுரங்க அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை நடத்தியதால் மதுரையிலும் பதற்றம் உருவானது. மதுரையின் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 4 மாவட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் இந்தப் போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
Share on:

சென்னையிலும் நுழைந்தது HMPV வைரஸ்- 2 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி! நாடு முழுவதும் 5 பேர் பாதிப்பு!


உலகை அச்சுறுத்தி வரும் சீனாவின் HMPV வைரஸ் சென்னையில் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் 2 , குஜராத்தில் 1 குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளையே பெரும் துயரத்துக்குள்ளாக்கியது. பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக் கூடிய ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் HMPV என்ற புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளாமலேயே குழந்தைகளைத் தாக்கக் கூடியதாக இருக்கிறது HMPV வைரஸ்.

இந்தியாவிலும் HMPV வைரஸ் பாதிப்பு தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் முதலில் கர்நாடகா மாநிலத்தில் 3 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து 8 மாத குழந்தைக்கும் கண்டறியப்பட்டது. இதேபோல குஜராத்தில் ஒரு குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில் சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புடன் வந்த 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த HMPV வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளைப் போல முதியவர்களையும் HMPV வைரஸ் தாக்கக் கூடியது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Share on:

2000 ஆண்டு பழமைவாய்ந்த பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா? சங்க இலக்கியம் சொல்வது என்ன?


தை பொங்கல் (ஜனவரி 14) தமிழகத்தில் முக்கியமாகக் கொண்டாடப்படுவது மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளில் மகர சங்கராந்தி எனும் பெயரில் அறுவடைப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான பெயர்கள் மாநிலங்களின் மொழி, மரபுகள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கின்றன.

திருக்குறளின் பல குறள்கள் தைப்பொங்கல் திருவிழா குறித்து நேரடியாக குறிப்பிடவில்லை, ஆனால் திருக்குறளின் பல குறள்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், நன்றி உணர்வையும், சமுதாயத்தின் நலனுக்காக உற்சவங்களை கொண்டாடுவதன் பண்பையும் எடுத்துரைக்கின்றன. தைப் பொங்கல் என்பது நன்றி செலுத்தும் திருவிழாவாகும், குறிப்பாக விவசாயத்திற்கு, பூமிக்கு, சூரியனுக்கு, மற்றும் பசுமாடுகளுக்கு.

விவசாயத்தின் முக்கியத்துவம்:

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.

விளக்கம்: உழுதுண்டு வாழ்பவர்கள் உலகத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவர்களே பிறருக்கும் உணவளிக்கின்றனர்.

நன்றி உணர்வு: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

விளக்கம்: நன்றி மறக்காமல் இருப்பது மானுடத்தின் உயர்ந்த பண்பு. தைப்பொங்கல் விழாவில், விவசாயத்தின் மகிமையை பாராட்டி, நன்றி செலுத்தும் பண்பாடு வாழ்வியல் நெறியாகக் கொண்டாடப்படுகிறது. இது திருக்குறளின் சிந்தனையுடன் தத்ரூபமாகக் கூடி வருகிறது.

பொங்கலின் வரலாற்றுப் பின்னணி: பொங்கல் பண்டிகையின் வரலாறு 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணிக்கப்படுகிறது. இது தமிழர்களின் விவசாயச் சமூகத்தில் முக்கியமான பங்கு வகித்து வந்துள்ளது. சங்க காலத்தில் இருந்து இயற்கையை வணங்கும் பழக்கவழக்கங்கள் முக்கியமாகக் காணப்பட்டு, அந்த மண்ணின் மக்களின் வாழ்க்கை முறையை உருவாக்கியவை.

இந்த பண்டிகை, குறிப்பாக சூரியனின் போற்றுதலுக்கும் விவசாயத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பதால், தமிழர்களின் தெய்வீக, சமூக, பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் “தையித் திங்கள் தங்கயம் படியும்” என்று நற்றிணையும் “தையித் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் “”தைத் திங்கள் தங்கயம் போல்” என்று புறநானூறு “தையித் திங்கள் தங்கயம் போல” என்று ஐங்குறுநூறும், “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும், தொல்காப்பியமும் போன்ற பழமையான தமிழ் இலக்கியங்களில் பொங்கலின் முக்கியத்துவம் மற்றும் தொடர்புடைய சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இத்தகைய இலக்கியங்கள், தமிழ் சமூகத்தின் முதன்மை மரபுகளைப் பதிவு செய்யும்போது, பொங்கல் விவசாய மரபுகளுடன் முடிச்சுப் போடப்பட்ட ஒரு பண்டிகையாக முன்னிலைப்படுத்துகின்றன. பண்டிகையின் முக்கியத்துவம் பொங்கல் தமிழர்களின் பாரம்பரிய மற்றும் முக்கியமான அறுவடைப் பண்டிகையாகும்.

இது தமிழர் வாழ்க்கையின் நிலையான மரபுகள், விவசாயம் மற்றும் இயற்கையின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சூரியனை பிரதானமாக வணங்கி, விவசாயத்தின் மூலதனமாக கருதும் இயற்கையின் சக்திகளை போற்றுகிறது. இது நன்றி செலுத்தும் விழாவாக விளங்குகிறது.

குறிப்பாக விவசாயிகள் உழைப்பின் முக்கியத்துவத்தையும் உணவு உற்பத்திக்கான இயற்கையின் பங்களிப்பையும் செழிப்பையும் கொண்டாடுவதற்கு. பொங்கல் விழா உலகம் முழுவதும் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இதில், பொங்கல் உணவு (சர்க்கரை கரும்பு, பால், அரிசி போன்றவற்றால் செய்யப்படும் உணவு) மிக முக்கியமானதாகும். இந்த நாள் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்று திரட்டும் விசேஷ நாளாகவும் விளங்குகிறது.

பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவை போகி: பழைய பொருட்களை எரித்து, புதியதுக்கு வழி செய்யும் நாள். சூரிய பொங்கல்: சூரியனை வழிபட்டு, பொங்கல் சமைக்கும் நாள். மாட்டுப் பொங்கல்: மாடுகளை அலங்கரித்து, நன்றி செலுத்தும் நாள். காணும் பொங்கல்: உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்திப்பு நிகழும் நாள்.

தைப்பொங்கல் – ஓர் கவிதை ஆடியில் விதைத்த மண்ணின் கனவு, தை மாதம் வெகுளியெழும் நனவு. நெல்லின் முத்தரிசி மெல்ல நுகர, சூரியனைக் கண்டு நன்றி சொல்ல புறப்படுவார். புது பானையிலே பொங்கும் நெய்யுடன், சர்க்கரையும் பாலும் சேர்ந்து செய்யுடன். கழுவும் கரும்பு சுவையும் மஞ்சளின் நிறமும், புகழும் பசுவின் அருமை மக்களின் உறவுமாம். மழை தீர்க்கும் தாய் மண்ணின் வரமாம், அறுவடைக் கை நிறைய தமிழின் மரமாம். அவரையும் புடலையையும் படையலாய் வைக்கும், செந்நெற் சோறுடன் தமிழின் திருவிழா தைக்கும்.

கொதித்தெழும் பொங்கல் வாழ்க்கையின் பாடு, செழித்து மலர்க்கும் உழவரின் காதல் நீளாது. இயற்கை தாயின் பேரருள் பெருமை, தமிழனின் நெஞ்சில் நிலைக்கும் திருமை. வாழ்த்திடுவோம் சூரியனையும் மண்ணையும், கொண்டாடிடுவோம் கால்நடைகளின் புண்ணியத்தையும். தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் கோலோசை, தமிழனின் வாழ்வில் பொங்கல் விளக்கும் பிரகாசம்.

முடிவுரை: பொங்கல் பண்டிகை தமிழர்களின் கலாச்சாரச் செழுமையையும் பாரம்பரியத்தின் பெருமையையும் வெளிப்படுத்துகிறது. இது நம் நிலம், விவசாயம் மற்றும் இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் மகிழ்ச்சியான திருவிழாவாக மட்டுமின்றி, குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றிணைக்கும் அம்சமாகவும் திகழ்கிறது. பொங்கல் போன்ற விழாக்கள் தமிழர் வாழ்வியலின் அடையாளம் என்பதையும், அவற்றின் மூலம் எப்போதும் நம் பாரம்பரியத்தை பெருமிதத்துடன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றன.
Share on:

சதீஷுக்கு மரண தண்டனை! மொத்த குடும்பத்தை இழந்து நிற்கதியாய் சத்யாவின் சகோதரி! கோர்ட் முக்கிய உத்தரவு


சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு, தூக்கு தண்டனை விதித்தும் 35 ஆயிரம் அபராதம் விதித்தும் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், அபராத தொகை 35 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாயை பலியான சத்திய பிரியாவின் சகோதரிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசின் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் . இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதனால் அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இப்படித்தான் கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யபிரியா வந்தார்.

அப்போது அங்கு சதீஷும் வந்தார். ரயில் வரும் வரை காத்திருந்த சத்யபிரியாவிடம் போய் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். அதற்கு சத்யபிரியா என்னால் உன்னை காதலிக்க முடியாது. என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு” என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், சத்யபிரியாவை, தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.

சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு தொடர்பாக, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, சதீஷை குற்றவாளி என அறிவித்து டிசம்பர் 27ம் தேதி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தண்டனை விவரங்கள் குறித்த விசாரணைக்காக வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளி சதீஷ், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு, ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் தண்டனை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு வயதான பெற்றோர் இருப்பதாலும் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சதீஷ் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு குற்றவாளிக்கு தூக்கு தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராத தொகை 35 ஆயிரம் ரூபாயில் 25 ஆயிரம் ரூபாய் பலியான சத்திய பிரியாவின் சகோதரிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசின் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தீர்ப்பை உறுதி செய்வதற்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சத்யாவின் தாயாரும் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. சத்யாவின் தங்கையான 8 வயது சிறுமி பெற்றோர் இன்றி நிர்கதியாக நிற்கும் நிலையில் அவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on:

3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் டீம்.. ஐகோர்ட் உத்தரவுப்படி அண்ணா பல்கலை மாணவி வழக்கை விசாரிக்கும் குழு!


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறை, அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லக்ஷ்மி நாராயணன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “புகார்கள் பதிவு செய்யப்பட்டதும் எப்.ஐ.ஆர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பாலியல் வழக்கில் எப்படி எப்.ஐ.ஆர் கசிந்தது என சைபர் கிரைம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

எப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில், எஃப்.ஐ.ஆரை பார்வையிட்ட 14 பேர் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செல்போன் நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஒரு குற்றவாளி மட்டுமே இருப்பதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார். தொடர் விசாரணைக்குப் பின்னர்தான் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரத்த நீதிபதிகள், “யார் எப்.ஐ.ஆர் பதிவிறக்கம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வசதி இருந்தும் ஏன் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை? புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது. அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதில் என்ன சிரமம் உள்ளது.

மாறாக, பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரணை செய்வதில் தமிழக அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. குழுவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு இனி விசாரணை செய்யும்.” என உத்தரவிட்டனர்.

மேலும், “FIR பொதுவெளியில் கசிந்ததற்காக பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை குற்றத்தில் தொடர்புடையவர்களிடம்(காவல்துறை அதிகாரிகள் உட்பட) வசூலிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவியிடம் இருந்து கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் என ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்கக் கூடாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் பதிவு செய்யப்படும் எப்ஐஆர் வெளியாகாமல் இருப்பதை காவல்துறை ஆணையர் உறுதிபடுத்த வேண்டும்” என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட். அதேசமயம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், உடனடியாக குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
Share on: