இனி சட்டவிரோதமாக பேனர் வைத்தால் பெரும் சிக்கல்..


சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்திருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

சென்னையில் சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பர பலகை விழுந்து இளம்பெண் பலியானது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, விதிகளை மீறி விளம்பர பலகைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

அப்போது டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துகுமார் ஆஜராகி, சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அரசு தரப்பில் கூறப்படுவதை பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Share on: