எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது!! அதிமுக உறுப்பினர் தேர்தல் ஆணையத்தில் மனு….

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என அதிமுக அடிப்படை உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்து தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என ராம்குமார் ஆதித்தன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தார்.

இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை எடுத்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம். ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடந்து முடிந்தது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

கடந்த வாரம் நடந்த வழக்கு விசாரணையில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் செல்லும்,மேலும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

எடப்பாடி பழனிச்சாமியை தவிர யாரும் போட்டியிடாத பொதுச்செயலாளர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார்.
அதன்பின் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி துரிதமாக பொறுப்பேற்று கொண்டார்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநீதிபதி தள்ளுபடி செய்த மனுவை எதிர்த்து இரு நீதிபதி அமர்வில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான விஷயங்களை ஏற்க கூடாது என அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் நேரடியாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட மனுவில்,அதிமுகவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வெளிவரும் வரை எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என ராம்குமார் ஆதித்தன் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவை முழுவதுமாக எடப்பாடி பழனிசாமி கைப்பற்றி விட்டதாக அனைவரும் எண்ணிக்கொண்டு இருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ,தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தொண்டர்களின் எழுச்சியை காட்டுவதாக அமைந்திருக்கிறது.

Share on: