சரத்குமாரின் முடிவிற்கு எதிராக கொந்தளித்த சமக தொண்டர்!


பாஜகவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைக்கும் சரத்குமாரின் முடிவிற்கு எதிராக விழா மேடையிலேயே சமக தொண்டர் ஒருவர், கொந்தளித்தார்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிடப்போகிறது.. அனேகமாக இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் உள்ளன.

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. பாமக, தேமுதிக இணையுமா இல்லையா என்பது இன்னமும் தெரியவில்லை. பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ பன்னீர்செல்வம் அணி, புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை இணைந்துள்ளன.

பொதுவாக சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது வழக்கம்.. இந்த தேர்தலில் வித்தியாசமாக சிறிய கட்சி ஒன்று பெரிய கட்சி உடன் இணைந்துள்ளது. கூட்டணியாக அல்ல.. கட்சி அப்படியே பாஜகவில் இணைந்துள்ளது. சமீபகாலத்தில் நடந்த பெரிய மாற்றம் இதுதான்..

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இன்று இணைத்தார். லோக்சபா தேர்தல் நேரத்தில் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்திருப்பது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு மத்தியில் ஒரு சமக தொண்டர் எழுந்து, நாட்டாமை தீர்ப்பை மாற்றுங்க என்பது போல், கொந்தளித்தார். பாஜகவில் சமகவை இணைக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கொந்தளித்து கோஷம் போட்டதை கண்ட மற்ற தொண்டர்கள் இவரை யார் உள்ளே விட்டது என்று கேள்வி எழுப்பி அவருடன் வாக்குவாதம் செய்தனர்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
Share on: