மது அருந்தியவர்களை தட்டிகேட்ட 4 பேர் கொடூர கொலை.. நடந்தது என்ன?


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். 47 வயதான இவர் அருகிலுள்ள பகுதியில் அரிசிக் கடை நடத்தி வந்தார். அவருக்கு அதே ஊரில் சொந்தமாக கிணறு ஒன்று உள்ளது. சம்பவம் நடந்த நேற்று இரவு சிலர் கிணற்றின் அருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த செந்தில்குமார் அவர்களிடம் சென்று, இங்கு ஏன் மது அருந்திக்கொண்டிருக்கிறீர்கள், வேறு எங்காவது சென்று குடிக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.

இதில் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. குடிபோதையில் இருந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த செந்தில் குமார் தம்பி மோகன் ராஜ், தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டினர். கை, கால்கள், முகத்தில் பலத்த வெட்டுகாயம் அடைந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மோகன் ராஜ் மாதப்பூர் பாஜக கிளைத் தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தம் கேட்டு ஊர் மக்கள் ஓடி வருவதற்குள் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ஊர் மக்கள் வந்து பார்த்தபோது நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யக் கோரி அரசு மருத்துவமனை முன்பு திரண்ட பாஜகவினரும், ஊர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் ஐஜி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. செந்தில் குமாரிடம் தூத்துக்குடியைச் சேர்ந்த குட்டி (எ) வெங்கடேசன் என்பவர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணப் பிரச்னை ஏற்பட்டதால் வெங்கடேசனை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.இதில் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

செந்தில் குமார் மீது ஆத்திரத்தில் இருந்த வெங்கடேசன், சில நபர்களுடன் சேர்ந்து வேண்டுமென்ற செந்தில் குமார் இடத்தில் அமர்ந்து மது அருந்தி பிரச்னை செய்துள்ளார். அதனை கண்டித்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர். வெங்கடேசனை பிடித்துவைத்துள்ள போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது,இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Share on: