* தி.மு.க-வினருடன் திரை மறைவு தொடர்பு வைத்திருப்பவர்களை கட்சியிலிருந்து நீக்கி, அதிமுக-வை கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஜெயலலிதா அம்மா இருந்த பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
* சட்டசபை தேர்தலின் போது சென்னை திருவல்லிக்கேணியில் உதய நிதியை எதிர்த்து போட்டியிட நடிகை குஷ்பு பாஜக-வில் சீட் கேட்டார். அதை பாஜக-விற்கு கொடுக்காமல் அந்த தொகுதியை கேட்காத பா.ம.க-வுக்கு கொடுத்து சுலப வெற்றியை அளித்தவுடன் அவர் மாநிலம் முழுவதும் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்ய மறைமுகமாக உதவியது யார்?
* பொன்முடி, எ.வ.வேலு ஆகியோருக்கு எதிராக அதிமுக சார்பில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி நெருக்கடி கொடுக்காமல் அப்போது வலுவில்லாத பா.ஜ.க-விடம் தள்ளிவிட்டு அவர்களுக்கு சுலப வெற்றியை பரிசளித்தது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-வின் கோட்டையாக இருந்த கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் பெயரளவிற்கு கூட போராடாமல் 100 சதவீத வெற்றியை திமுகவிற்கு அள்ளிக்கொடுத்ததன் பின்னணியை எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.
* அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் ஒரு பெட்டியில், “லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஒரு துரும்பை கூட கிள்ளிப் போட வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு ஆளும்கட்சியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அ.தி.மு.க-வினர் மீது நடவடிக்கை இல்லை” என்கிறார். இது எந்த வகையான ஒப்பந்தம்?
* இவற்றையெல்லாம் விட சட்டசபையில் ஆளும் தி.மு.க-வை மயிலிறகால் வருடுவது போல் EPS & Co பேசுவதும். முதல்வர் ஸ்டாலின் பெரிய மனதுடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஒதுக்குவதும் எப்படி நடக்கிறது?
* எதிலும் உறுதியான முடிவில்லை பாஜக – திமுக மோதல்களைச் சாதகமாக்கி, அரசியல் செய்வதிலும் தடுமாறுகிறார் எடப்பாடி பழனிசாமி. கிளாம்பாக்கம் சர்ச்சை, ஆளுநர்-சபாநாயகர் சர்ச்சை போன்ற கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் தவறவிடுகிறார் எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் அவரது குரல் வலுவாக ஒலிக்கவில்லை.
* கடந்த ஓராண்டாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆதரவாக EPS பேசாத மேடை இல்லை. ஆனால், அந்தத் திட்டத்துக்கு எதிராக, சட்டமன்றத்தில் திமுக தனித் தீர்மானம் கொண்டுவந்தபோது ஆணித்தரமாகத் தன் வாதத்தை EPS பேசியிருக்க வேண்டும். அதை செய்யவில்லை ஆளுநர்-சபாநாயகர் சர்ச்சையில் கூட ‘இது ஆளுநருக்கும் சபாநாயகருக்கு இடையேயுள்ள பிரச்சனை நாங்கள் இதுகுறித்து என்ன சொல்வது ஆளுநரையும் அரசையும்தான் கேட்க வேண்டும்’ எனப் பூசி மெழுகிவிட்டுக் கழண்டுகொண்டார். ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான பிரச்சனையில்தானே ஒரு எதிர்க்கட்சி அரசியல் செய்ய முடியும்.
* அதிமுக ஆட்சியின்போது, மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு அம்மாவின் பெயரைச் சூட்ட முடிவெடுக்கப்பட்டது. அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, அப்போதைய ஆளுநருக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது. ஆளுநராக ஆர்.என்.ரவி வந்த பிறகு, அந்த மசோதாவையும் சேர்த்து மொத்தம் பத்து மசோதாக்களைத் திருப்பியனுப்பியுள்ளார்.ஆளுநரைக் கண்டிக்குவிதமாக கடந்த ஆண்டு நவம்பரில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.செப்டம்பர் மாதமே பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு EPS அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார்.
* இரட்டை குதிரைச் சவாரி தலைகுப்புறத்தான் கவிழ்ந்துவிலும். அதுபோல ஆளுநர் விவகாரத்தில் ஆதரவுமில்லை… எதிர்ப்புமில்லை என EPS தயங்குவது கட்சியின் பின்பதையே பலவீனமாகும்.
* நாடாளுமன்றத்தில் MP-க்கள் நீக்கம் நடந்தபோது, மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடு விவகாரம் பற்றியெரிந்தபோது உறுதியாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் சரி, விவசாயிகள் போராட்டத்திலும் சரி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க தவறிவிட்டார் EPS.
* கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலானது. நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கு கருத்து தெரிவித்த நிலையில், அதிமுக மட்டும் எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டை 31 ஆண்டுகள் ஆண்ட ஒரு கட்சி மத்திய பட்ஜெட்டுக்கு கருத்து தெரிவிக்கவில்லை என்பது அரசியல்ரீதியாக
எவ்வளவு பெரிய பின்னடைவு? பட்ஜெட்டுக்கு ஆதரவாகக் கருத்து சொன்னால் ‘கூட்டணி முறிவு என்பது நாடகம்’ என திமுக வசை பாடும். பட்ஜெட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் டெல்லியின் அஸ்திரங்கள் பாயும் ‘நமக்கேன் வம்பு’ என்று அமைதியாகிவிட்டாரா EPS?
பஞ்சு மிட்டாய் கண்ணை பறிக்கும் நிறத்தில் இருக்க அதில் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தும் ரசாயனம் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். சோதனையில், ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
பஞ்சு மிட்டாய் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் உணவு பொருள். கடற்கரை தொடங்கி கடை வீதிகள் வரை இவற்றை பார்க்க முடியும். ஆனால் இந்த பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அதாவது, புதுச்சேரி கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் வடமாநில இளைஞர்கள் இந்த பஞ்சுமிட்டாயை விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் தீப்பெட்டி மற்றும் ஊதுவத்தி ஆகியவற்றில் கலக்கப்படும், ‘ரோடமின் பி’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இந்த ரசாயனம் நமது வயிற்றிற்குள் போனால் புற்றுநோயை ஏற்படுத்தும். பஞ்சு மிட்டாய் ரோஸ், சிவப்பு என கண்ணை பறிக்கும் நிறத்தில் இருப்பதற்காக நிறமிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், குறைந்த விலை என்பதால் ‘ரோடமின் பி’ போன்ற ஆபத்தான ரசாயனங்களை பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மட்டுமல்லாது புதுச்சேரி முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனையில் ஈடுபட்டுவருபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “புதுச்சேரியில் ஆய்வின் போது பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே பஞ்சுமிட்டாய் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. இனி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய வேண்டும் எனில் உணவு பாதுகாப்பு துறையின் தர சான்றிதழ் அவசியம் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. சில வியாபாரிகள் தமிழகத்திலிருந்து பொருட்களை வாங்கி வந்ததாக கூறியிருக்கிறார்கள். எனவே அங்கும் இதுபோன்று சோதனை நடைபெறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து கடந்த 8ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யும் வடமாநில தொழிலாளர்களிடமிருந்து பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பல்லாவரத்தில் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் ஆலையிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு சேகரிக்கப்பட்ட ரசாயனங்களும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களில் ஆபத்தான ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பஞ்சு மிட்டாய் விற்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று அதிரடியாக வாதங்களை வைத்துள்ளார் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரால் சுந்தரேசன். 30 கேஸில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரை ஜாமீனில் விட்டால் அவர் எந்த குற்றமும் செய்யமாட்டார் என எப்படி நம்புவது என கேள்வி எழுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு நேற்று வைத்த வாதங்களுக்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அவர், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறபு நீதிமன்றத்தில் உள்ளன. அந்த ஆதாரங்களை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத் துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் திருத்தப்படவில்லை என விளக்கினார்.
மேலும், முந்தைய ஜாமீன் மனு தள்ளுபடிக்கு பிறகு இந்த வழக்கில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார்.
ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்கக் கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.
தொடர்ந்து, வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020ஆம் ஆண்டில் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை, திருத்தவும் இல்லை. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களை மட்டுமே நம்பியுள்ளது எனக் குறிப்பிட்டார் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன்.
30 வழக்குகளில் சிக்கியுள்ளவரை ஜாமீனில் விட்டால்: மேலும், 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை துவங்க அமலாக்கத் துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை நிறைவு செய்தார்.
சென்னையில் மணல் ஒப்பந்தாரரான கரிகாலன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரிகாலன் வீட்டுக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை சீல் வைத்த நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று சீலை அகற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் செயலில் ஈடுபடுவதாக புகார்கள் சென்றன. இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மணல் ஒப்பந்தாரரார்கள், மணல் குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள், மண் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்கும், ரொக்கப்பணம், பறிமுதல் செய்யப்பட்டன.
குறிப்பாக கடந்த வாரம் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது இரண்டரை கோடி ரொக்கம் உள்பட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக சண்முக ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர் செல்வம், கரிகாலன் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின்போது ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. மேலும் சண்முக ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், கரிகாலன் உள்ளிட்டவரின் வங்கி கணக்குகளிலும் இருந்து ரூ.2.50 கோடி வரையிலான பணம் என்பது முடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் சென்னை நந்தனத்தில் உள்ள சிஐடி நகரில் மணல் ஒப்பந்ததாரரான கரிகாலன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அவரது உறவினர் அருண் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த முறை அமலாக்கத்துறை சோதனையின்போது கரிகாலன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். இதையடுத்து அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது. இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் சீல் அகற்றப்பட்டு இன்றைய சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் கரிகாலனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது, முந்தைய ரெய்டுகளில் சிக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இன்றைய சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இமாச்சல் பிரதேசத்தில் இறந்த வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து தாம்பரத்தை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கத்தில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்தது. இதையடுத்து அவரை 8 நாட்களாக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், போலீஸார், மீட்பு படையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் வெற்றியின் உடலை ஸ்கூபா டைவ் வீரர்கள் மீட்டனர். இத்தனை நாளாக வெற்றி உயிருடன் வருவார் என காத்திருந்த குடும்பத்தினருக்கு பேரிடியாக வந்தது இந்த செய்தி!
இதையடுத்து வெற்றியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு எம்பாமிங் செய்யப்பட்டு அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே தனது மகனை கண்டுபிடித்து கொடுத்தால் தான் வழங்குவதாக அறிவித்த ரூ 1 கோடி சன்மானத்தை ஸ்கூபா டைவிங் வீரர்களிடம் சைதை துரைசாமி வழங்கினார்.
இந்த நிலையில் வெற்றியின் உடல் இன்று காலை இமாச்சலில் இருந்து நாக்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டது. இதையடுத்து அங்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெற்றியின் உடல், அங்கிருந்து தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
பிறகு அங்கிருந்து சிஐடி நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீட்டில் வெற்றியின் உடல் வைக்கப்படுகிறது. அங்கு அரசியல் கட்சியினர், மனிதநேய அறக்கட்டளை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், அங்கு படித்துவிட்டு அதிகாரிகளாக இருப்பவர்கள் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையடுத்து அங்கிருந்து மாலை 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அஜித்தும் வெற்றியும் நண்பர்கள். அந்த வகையில் அஜித்திற்கு வெற்றியின் இழப்பு தாங்கிக் கொள்ள முடியாததாகிவிட்டது. இதையடுத்து அவர் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் வீட்டிற்கு சென்று அங்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்த ஆளுநர் ரவி அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே திடீரென சபையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசின் உரையை படிக்க மறுத்ததை அடுத்து சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்தார்.
மேலும் சட்டசபை தொடங்கும் முன்பே தேசிய கீதம் பாட வேண்டும் என்றும் அதேபோல் சட்டசபை முடியும் போதும் தேசிய கீதம் பாட வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனை அடுத்து ஆளுநர் உரையை ரவி புறக்கணித்த நிலையில் சட்டசபை அலுவல் முடிந்ததும் தேசிய கீதம் பாடப்பட்டது. ஆனால் தேசிய கீதம் இசைக்கும் முன்னரே ஆளுநர் ரவி திடீரென சபையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் இன்று அதிகாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததற்கான காரணத்தை தொழிற்சங்கத்தினர் விளக்கியுள்ளனர்.
இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்றிரவு கிளாம்பாக்கத்தில் குவிந்தனர். ஆனால் ஊருக்கு போக போதுமான பேருந்துகள் இல்லாததால் அவர்கள் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. “எங்கள் ஊருக்கு போகவே 5 மணி நேரம்தான் ஆகும். ஆனால் கிளாம்பாக்கத்தில் 6 மணி நேரம் காத்திருக்கிறோம்” என பயணிகள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.
விழா நாட்கள், தொடர் விடுமுறை, வார இறுதி போன்ற நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை சார்பில் அவ்வப்போது அறிவிப்பு வெளியாகிறது. ஆனால், இந்தமுறை போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து தொழிற்சங்கங்கள் விளக்கமளித்துள்ளன.
சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் இது குறித்து கூறியதாவது, “இந்த பிரச்னைக்குள் இரண்டு பிரதான சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று ஊழியர்கள் பற்றாக்குறை. மற்றொன்று பேருந்துகளின் குறைவான எண்ணிக்கை.
லாபமா? நஷ்டமா?: தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓடும்போது, போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற தவறான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. போக்குவரத்து கழகங்களுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களை போல லாபம் மட்டுமே நோக்கம் கிடையாது. 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் லாபம் கிடைக்காது. நஷ்டம்தான் ஏற்படும். ஆனால், இந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்க வேண்டும் எனபதுதான் அரசின் நோக்கம்.
இதுதவிர மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமல்படுத்தப்படுகிறது. இதிலும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை அரசுதான் சரிகட்ட வேண்டும். தமிழக மின்வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்றவற்றிற்கு முழுமையான இழப்பை ஈடுகட்டும் அரசு, தினமும் 2 கோடி மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களைப் புறக்கணிக்கின்றது. இந்த நஷ்டத்தை சரி செய்தால்தான் அரசு பேருந்து சேவை தரமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்.
பேருந்துகளின் எண்ணிக்கை: ஒருவேளை அரசு இந்த நஷ்டத்தை அரசு சரி செய்யவில்லையெனில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும். 2017ம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை. சுமார் 20,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில், பணியாளர் பற்றாக்குறையால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை.
ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பயண உரிமை மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. எனவே, நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும். காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டிய 8000 பேருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். தனியார்மயம், காண்ட்ராக்ட் என்ற பெயரால் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க கூடாது. இதையெல்லாம் அரசு சரி செய்தால்தான் தற்போது கிளாம்பாக்கத்தில் ஏற்பட்டதை போன்ற பிரச்னை மீண்டும் உருவாகாது” ன்று கூறியுள்ளனர்.
8 மாதங்களாக தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் கரூரில் உள்ள வீட்டிற்கு வந்து பெற்றோர்களை சந்தித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் சோதனை மேற்கொண்ட நிலையில் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவரது இதய குழாயில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு அவருக்கு அடைப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 250 நாட்களாகவே புழல் சிறையில்தான் இருக்கிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜியின் ஜாஅதற்குக் காரணம் அவரது சகோதரர் அசோக்தான்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் ஆஜராகாமலேயே இருந்தார். தனக்கு நெஞ்சு வலி இருந்ததாகத் தெரிவித்த அசோக் குமார், நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமே அனைத்திற்கும் பதில் அளித்து வந்தார்.
அமலாக்கத்துறை சம்மன் அளித்த நிலையில், அவர் ஆஜர் ஆகாமல் வெளிநாட்டிற்கு தப்பிவிடும் வாய்ப்பு இருந்ததால், நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அசோக்குமார் குறித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அசோக் எங்கு இருக்கிறார்? என்பதை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அசோக் தலைமறைவாக இருப்பதினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கும், தை பொங்கலுக்கும் கூட வீட்டிற்கு போக முடியாமல் புழல் சிறையிலேயே தவித்து வருகிறார் செந்தில் பாலாஜி.
கரூர் நாமக்கல் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மனைவி பெயரில் உள்ள இடத்தில் அசோக்குமார் பல கோடி மதிப்பில் புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு மே 26ஆம் தேதி வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதாரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ராம் நகரில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தினர். மேலும், அசோக்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார்.
அசோக்குமார் எங்கே என்று 8 மாதங்களாக தேடி வரும் நிலையில் அவர், கரூர் வீட்டிற்கு வந்து செந்தில் பாலாஜியின் பெற்றோரை சந்தித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். 8 மாதங்களாக தலைமறைவாக உள்ள அசோக், கரூர் வீட்டிற்கு வந்து போனதாக தகவல் தெரியவந்ததை அடுத்து இன்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் ராமேஸ்வரப்பட்டி வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
செந்தில் பாலாஜி 8 மாதங்களாக புழல் சிறையில் இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே அசோக் தலைமறைவாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அசோக் கரூருக்கு வந்து போனதாக தகவல்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சென்றுள்ளது. இதன் அடிப்படையில்தான் இன்று மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர். அசோக் எங்கே? அவர் எதற்காக கரூருக்கு வந்து சென்றார் என்பதுதான் அமலாக்கத்துறை அதிகாரிகளின் தொடர் கேள்வியாக உள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, ஜனவரி 9ம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி, பாட்டாளி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தன.
திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், தொழிலாளர்களுக்கு போராட உரிமை இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பொங்கல் பண்டிகையின்போது இந்த போராட்டம் அவசியமா? என்று கேள்வியெழுப்பினர். இதனையடுத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தது. இதனையடுத்து, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து பிப்ரவரி மாதம் 7ம் தேதி (இன்று) பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து கழகம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பின் பேரில், இதில் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தோழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு தலைவர் சௌந்தரராஜன், “15வது ஊதிய உயர்வு குறித்து பேச அரசு தரப்பில் குழு அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அடுத்தகட்ட போராட்டத்தில் நாங்கள் இறங்காமல் இருக்க கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கோரிக்கைகள் என்ன?: ஊழியர்களின் எதிர்கால சேமிப்பான வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகை ரூ. 13,000 கோடியை கழகங்கள் செலவு செய்துவிட்டன. ஊழியர்களின் பணத்தை வைத்து கழகங்களை நடத்தும் கேவலம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஓய்வுபெற்றவர்கள் மரணமடைந்தவர்களின் ஓய்வூகால பணிக்காலப் பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்படுவதில்லை.
அகவிலைப்படி: ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்த 90,000 ஓய்வூதியர்கள் வயதான காலத்தில் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்குவோம் என முதலமைச்சரே அறிவித்தார். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. அதற்குப்பதிலாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டுமென நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அப்பீல் செய்துள்ளது அரசு, மற்ற துறை ஊழியர்களைப்போல் மருத்துவக் காப்பீடும் இல்லை, மனிதாபிமானமற்ற முறையில் அரசின் செயல்பாடு உள்ளது.
ஓய்வூதியம்: வயது முதிர்ந்த காலத்தில் வாழ்க்கையின் ஆதாரமே ஓய்வூதியம்தான். ‘இது சலுகை அல்ல உரிமை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரால் ஓய்வூதியத்தை ஒன்றிய அரசு பறித்தது. எனவே. 2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை. 2003க்கு பின் பணியில் சேர்ந்து மரணமடைந்த, பணி ஓய்வுபெற்ற 4000 ஊழியர்களின் குடும்பங்கள் வீதியில் தூக்கி எறியப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. தேர்தல் வாக்குறுதி அமல்படுத்தப்படவில்லை. எனவே. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஓய்வூதிய உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.
வேலை நிறுத்தம்: போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்க வேண்டும் பணியில் உள்ள, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என அரசிடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தோம். ஊர்வலம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராடி பார்த்தோம். நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி தீர்ப்பையும் பெற்றோம். போக்குவரத்தில் வேலை நிறுத்தம் என்றால், அன்றாடம் பேருந்துகளில் பயணிக்கும் 2 கோடி தமிழக மக்களின் சிரமங்கள் கடுமையானது என்பதால் வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தை தவிர்த்து வந்தோம். ஆனால், அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. வேறு வழியின்றி வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.