ரூ.25,000 அபராதம்! வாடிக்கையாளருக்கு அல்ல.. KVB வங்கி மேனேஜருக்கு! நீதிமன்றம் அதிரடி


கடனை செலுத்திவிட்ட பின்னரும் அடமான பத்திரங்களை கொடுக்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில், கரூர் வைஸ்யா வங்கியின் மேனேஜருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஏழை மக்களை துன்புறுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதித்து வந்த நிலையில், தற்போது வங்கி மேனேஜருக்கே அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

தென்காசியை சேர்ந்த மாரித்துரை என்பவர் ஆவணங்களை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்றிருந்தார். பெற்ற கடனை கொஞ்சம் கொஞ்சமாக அவர் அடைத்திருக்கிறார். ஆனால் முழு கடனை அடைத்த பின்னரும் கூட, அடமானமாக வைக்கப்பட்ட ஆவணங்களை திருப்பி தர வங்கி மறுத்திருக்கிறது. காரணம் கேட்டால், கூடுதலாக ரூ.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனையடுத்து மாரித்துரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார். விசாரணையின் முடிவில் கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மட்டுமல்லாது, வரும் 17ம் தேதிக்குள் அடமானத்திற்கு பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் மனுதாரரின் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

வழக்கமாக மினிமம் பேலன்ஸ் இல்லை, வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டீர்கள், எஸ்எம்எஸ் சேவை கட்டணம் என வாடிக்கையாளர்களிடமிருந்துதான் வங்கிகள் பணம் பிடுங்கும். ஆனால், வங்கி தலைமை மேனேஜருக்கே நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

கடந்த 2019-20 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கு இடையில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி, ரூ.8,495 கோடியை பொதுத்துறை வங்கிகள், பொதுமக்களிடமிருந்து அபராதமாக பிடித்தம் செய்திருக்கின்றன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தமிழக அரசு ஓராண்டுக்கு செலவிடும் தொகையை விட இது அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
Share on:

தலித்தாக பிறந்தவர் புல்லட் ஓட்டக்கூடாதாம்.. மாணவன் கையை வெட்டிய மாற்று சாதியினர்.. சிவகங்கை கொடூரம்


சிவகங்கை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய பட்டியலின மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி 3 பேர் கையை வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவரின் புல்லட் வாகனத்தை அடித்து உடைத்து சூறையாடி இருக்கின்றனர்.

சாதி வெறியால் புல்லட் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவரின் கையை வெட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளக்காடாவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் – செல்லம்மா தம்பதியினர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அய்யாசாமி என்ற மகன் இருக்கிறார். இவர் சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததன் காரணமாக, அவரின் தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உழைப்பால் பொருளாதார ரீதியாக ஓர் அளவிற்கு முன்னேறிய பூமிநாதன், கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கி இருக்கிறார். இது அங்கிருந்த சில முன்னேறிய சாதி இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை.

இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்த நிலையில், புல்லட் வாகனம் வாங்கியதால் கூடுதல் விரக்தியடைந்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பூமிநாதனின் புல்லட் வாகனத்தை 2 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உடைத்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பூமிநாதன் மற்றும் அய்யாசாமி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நேற்று கல்லூரியை முடித்து அய்யாசாமி புல்லட் வாகனத்தில் வீட்டை நோக்கி வந்து இருக்கிறார். அப்போது 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி அய்யாசாமியின் கையை வெட்டி இருக்கின்றனர்.

அங்கிருந்து தப்பியோடிய அய்யாசாமி, விரைவாக பெற்றோரிடம் சென்றுள்ளார். அதன்பின் அவருக்கு உடனடியாக மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அய்யாசாமிக்கு வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனிடையே அய்யாசாமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள், வீட்டை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதி ஈஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
Share on:

அடுத்தது இரட்டை இலை முடங்கும்.. இபிஎஸ் அவுட்- புதிய தலைமையில் ஒரே அதிமுக.. கேசி பழனிசாமி பரபர தகவல்


அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தலைமை மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது; இந்த தீர்ப்பின் மூலம் டெல்லி கழுகுகள் தமிழ்நாட்டை வட்டமிட ஆரம்பித்துவிட்டன எனவும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மனுதாரர்களில் ஒருவரான கேசி பழனிசாமி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக ஒரு தலைமை மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதாக நாம் எடுத்து கொள்ளலாம். எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவுக்கு ஏற்படுகிற பாதகத்தை சரி செய்கிற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் என்கிற டெல்லி கழுகு தற்போது எடப்பாடி பழனிசாமியை சுற்றி வருகிறது. அதிமுக என்ற கட்சி உயிர்ப்போடு இருக்க வேண்டும். தோல்விகள் தவிர்க்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி வலிமையான கூட்டணி அமைப்பேன் என கூறிவருகிறார்; ஆனால் எந்த தேர்தலிலும் அவர் வலிமையான கூட்டணியை அமைக்கவில்லை.

அதிமுகவின் மூத்த தலைவர்கள் மட்டுமல்ல.. தொண்டர்களும் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆளும் வாய்ப்பை பெற முடியுமா? என்கிற கேள்வியும் அதிமுகவில் எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் தேவைக்கு அதிகமான சுயநலத்துடன் நடந்து கொள்கிறார். எங்களைப் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரவணைத்து எடப்பாடி பழனிசாமியால் சென்றிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதை செய்ய தவறியதாலே வழக்குகள் எல்லாம் தொடர வேண்டிய நிலைமை உருவானது.

நாங்கள் 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவுடன்தான் பயணிக்கிறோம்; இன்றைக்கு இருக்கிற எடப்பாடி பழனிசாமியோடு அல்ல. அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் அதிமுகவின் தொண்டர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதிமுகவில் நீண்டகாலம் பயணிப்பவர்கள் இந்த கட்சி ஒன்றுபட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட அதிமுகவில் இருக்கிற தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக ஒன்றுபட வேண்டும் என பேசினர்; அப்படி பேசியவர்களை கடுமையான வார்த்தைகளில்.. அதாவது நீங்க எல்லாம் சசிகலாவோடு போய் தனியாக கட்சி நடத்திக்கொள்ளலாமே என கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கிறது; இதனைத்தான் செங்கோட்டையன் போன்றவர்கள் எடப்பாடிக்கு எதிராக பேசுவதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் கட்சி ஒன்றுபட்டாக வேண்டும்; தலைமை மாற்றம் ஏற்பட வேண்டும்; தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணியின் சுயநல நடவடிக்கைகள் அதிமுகவின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

அதிமுகவில் நிச்சயம் தலைமை மாற்றம் ஏற்படும்; அதிமுகவின் சின்னம் சிறிது காலத்துக்கு முடக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது அதிமுக ஒன்றுபடவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு கேசி பழனிசாமி தெரிவித்தார்.
Share on:

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி.. வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழப்பு!


வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊர் புறப்பட்டுள்ளார். கோவை – திருப்பதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணத்தை தொடங்கிய அவர், மகளிர் பெட்டியில் இருந்திருக்கிறார். ஜோலார்பேட்டை அருகே ரயில் சென்ற போது, திடீரென இளைஞர் ஒருவர் ரயிலில் ஏறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் மகளிர் பெட்டியில் இருந்த அனைவரும் அந்த ரயில் நிறுத்தத்தில் இறங்கிவிட்ட நிலையில், கர்ப்பிணி பெண் மட்டுமே தனியே இருந்திருக்கிறார். இதனையடுத்து ரயிலில் ஏறிய இளைஞர், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக செயினை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் கர்ப்பிணி பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அந்த இளைஞர் கதவிற்கு அருகே சென்றுள்ளார். அப்போது கீழே விழுந்துவிடக் கூடாது என்று கர்ப்பிணி கவனம் கொள்ள, அவரின் கைகளை உடைத்து இளைஞர் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதன்பின் அருகில் இருந்தவர்களால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்பின் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கேவி குப்பம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட பேட்டி ஒளிபரப்பாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஹேமராஜ் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனிடையே கைதான ஹேமராஜ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

தேசிய மகளிர் ஆணையம் தரப்பில் தமிழக டிஜிபி-யிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் கோவை – திருப்பதி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் நலமாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. காயமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இதன்பின் ரயில்வே அதிகாரிகள் கர்ப்பிணி பெண்ணை சந்தித்து நிவாரண உதவியை வழங்கினர்.

இந்த நிலையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின், அறுவை சிகிச்சை மூலமாக இறந்த சிசுவை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
Share on:

தாம்பரம் அருகே லஞ்சத்தை தந்து, கையோடு கால் டாக்ஸி டிரைவர் பார்த்த வேலை.. ஆடிப்போன போலீஸ்காரர்கள்


அரசு ஊழியர்கள் அல்லது போலீசார் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அவர்களது உயர் அதிகாரிகள் கண்டிப்பாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்.. ஒழுங்கு நடவடிக்கை என்பது பணியிடை நீக்கமாகவே இருக்கும். கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை உள்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை, உயர்கல்வித்துறை, பள்ளிகல்வித்துறை என எந்த அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினால் சிறை தண்டனை உறுதி..

அதேநேரம் பொதுமக்கள் யாரிடமாவது லஞ்சம் வாங்கியது அவர்களின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியவந்தால், அந்த ஊழியர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையை உயர் அதிகாரிகளால் எடுக்க முடியும். அதேபோல் பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு உள்ளது. காவலர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். காவலர்கள் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அவர்களை சஸ்பெண்ட் செய்ய முடியும். குறைந்தபட்ச தண்டனையாக ஆயுத படைக்கும் மாற்ற முடியும்… இல்லாவிட்டால் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய முடியும்.

அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரின் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்கள் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் கன்னிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கன்னிவாக்கம் பகுதியில் கால் டாக்சியை ஓரமாக நிறுத்திவிட்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த டிரைவரிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் விசாரித்த போது அவர் மது குடித்த நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து 2 காவலர்களும், உன் மீது வழக்கு போடாமல் இருப்பதற்கு ரூ.1,500 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு கால் டாக்சி டிரைவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினாராம்.. ஆனால் 2 காவலர்கள் டிரைவரிடம் ‘கூகுள் பே’ வில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் ரூ.2 ஆயிரம் இருக்கும் என்று கூறினாராம். அந்த 2 போலீஸ்காரர்களும் உடனடியாக நாங்கள் சொல்லும் ‘கூகுள் பே’ எண்ணுக்கு ரூ.1,500 அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவலர்கள் கூறிய எண்ணுக்கு ரூ.1,500-ஐ ‘கூகுள் பே’ மூலம் அனுப்பியிருக்கிறார். இதை தொடர்ந்து அங்கிருந்து 2 காவலர்களும் சென்று விட்டனர்.

இது சம்பந்தமாக கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவங்கள் பற்றி கூறினாராம். இந்த விவரம் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக்கின் கவனத்திற்கு வந்தது. அவர் சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். உயர் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் கால் டாக்சி டிரைவரிடம் இருந்து மற்றொரு நபரின் ‘கூகுள் பே’ எண் மூலம் 2 காவலர்களும் ரூ.1,500 லஞ்சமாக பெற்றது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து ‘கூகுள் பே’ மூலம் ரூ.1,500 பெற்ற செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் அதிரடியாக உத்தரவிட்டார்.
Share on:

அரசு ஊழியர்களை விடுங்க, மதுரை மேலூர் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் எங்கே? பட்ஜெட் ERROR வருதாமே


அரசுப் பள்ளிகளைப்போல அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வரும்நிலையில், இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள். மதுரையிலிருந்து இப்படியொரு புலம்பல் வெடிக்க துவங்கியிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

தமிழகம் முழுவதிலும், அரசுப் பள்ளிகளைப்போல அரசு உதவி பெறும் பள்ளிகள் பல செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக மாதத்தின் கடைசி நாளில் ஒவ்வொரு ஆசிரியரின் வங்கிக் கணக்கில் மாத ஊதியம் வரவு வைக்கப்படும்.

அரசு பள்ளி: அதன்படி, ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியலை நிதித்துறையின் IFHRMS என்ற வெப்சைட்டில் தலைமையாசிரியர்கள் அப்லோடு செய்வார்கள். இதை 16-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை இப்படி பதிவேற்றம் செய்யப்படும்..

ஆனால், சிலசமயம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப் பட்டியலைப் பதிவேற்றம் செய்ய முடியாமல் போய்விடுவதாக கூறுகிறார்கள். டிஜிட்டல் தளத்தில் பிரச்சனையா? அல்லது அரசு நிதியே ஒதுக்கவில்லையா? என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பிவிடுகிறார்கள்.

சம்பள பிரச்சனை: எது எப்படியோ, மாத மாதம் ஊதியம் வந்தால்தான், குடும்பத்தை சமாளிக்க முடியும் சூழலில், ஆசிரியர்கள் உள்ளனர்.. அதிலும், இந்த சம்பளத்தை நம்பி, சிலரால் இஎம்ஐ செலுத்த முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுவிடுகிறது.

சிலசமயம் எதிர்பாராத மருத்துவச்செலவுகளும் வந்துவிடுகின்றன.. இதுபோன்ற செலவுகளுக்கு, மாத ஊதியம் சரியாக வந்தால்தான், சமாளிக்க முடியும் என்கிறார்கள். 2 வருடங்களுக்கு முன்பு, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த பிரச்சனை வெடித்திருந்தது.. இதற்கு பிறகு இப்படியொரு பிரச்சனைகள் எழுவது குறைந்துள்ளதாகவே தெரிகிறது.

மதுரை மேலூர்: ஆனால், தற்போது, மதுரை மேலூர் கல்வி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஜனவரிக்குரிய சம்பளம் கிடைக்கவில்லை என ஆசிரியர்கள் புலம்ப துவங்கியிருக்கிறார்களாம். மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளிகளில் 1200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லையாம்..

வழக்கமாக சம்பளத்திற்கு முன்பே ஆசிரியர்களின் சம்பள பில் உள்ளிட்ட ஆவணங்கள் அதற்குரிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யப்படும். அந்தவகையில், இப்போதும் முறையாக பில்கள் பதிவேற்றம் செய்தும் ஆசிரியர்களுக்கு ஒருவாரம் ஆகியும் சம்பளம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

கோரிக்கை: பள்ளிகளுக்கான ஐடி மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், “பட்ஜெட் எரர்” என்று வருகிறதாம்.. இதுகுறித்து சம்பந்தப்பட்ட டிஇஓ அலுவலகத்தில் முறையிட்டதையடுத்து, 20 பள்ளிகளுக்கு சம்பளம் கிடைத்துள்ளது.. ஆனால் இன்னும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. என்பதால், இந்த தொழில்நுட்ப பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கண்டு, சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share on:

தடதடக்கும் தாம்பரம்.. ஒரே நாளில் பெண் காவலர் உள்ளிட்ட 8 பேரிடம் செயின் பறிப்பு


தாம்பரம் அருகே ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு தாம்பரத்தில் நேற்று ஒரே நாளில் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்திரா என்ற பெண் காவலர் நேற்று இரவு 9.40 மணியளவில் தன் பணியை முடித்துவிட்டு முடிச்சூரில் உள்ள தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தேவராஜா சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்நோக்கி இரண்டு இளைஞர்கள் சென்றனர். ஒரு இளைஞர் நடந்தும், மற்றொரு இளைஞர் பைக்கிலும் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

இந்திரா வீட்டுக் கதவை திறந்து கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் தாமதமானது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இளைஞர்கள் இந்திராவின் ஐந்து சவரன் தங்க செயினை பறித்து நொடிப் பொழுதில் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த காவலர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதேபோல தாம்பரம் ரயில்வே மைதானத்தில் பொருட்காட்சியை பார்வையிட வந்த ஒரு பெண்ணிடமும் தங்க செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில் செயின் பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.

இதுகுறித்து எட்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் தாம்பரம் சுற்றுவட்டார பகுதி பெண்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாம்பரம் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்துக்குட்பட்ட காவலர்கள் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில் அனைத்து காவலர்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாலை வரை அந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அதில் தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து காவல்நிலைய காவலர்களும் கலந்து கொண்டனர். அதை நன்கறிந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தெரிந்து கொள்ளையர்கள் பைக்கை சாலையோரமாக நிறுத்தி சென்றது தெரியவந்துள்ளது.

காவலர்கள் அந்த பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் கல்லூரி பொறியாளரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share on:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நிறைவடைந்த வேட்பு மனுத்தாக்கல்.. மொத்த எண்ணிக்கை எவ்வளவு?


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தமாக 65 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கவுள்ளது.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், 2023ஆம் ஆண்டு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்ற நிலையில், கடந்த ஆண்டு திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விசி சந்திரகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. பின்னர் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி வேட்பாளராக அறிவித்தார்.

இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 65 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கவுள்ளது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாக வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தமாக 93 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதில் 6 பேர் திரும்ப பெற்ற நிலையில், 38 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மொத்தமாக 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
Share on:

சட்டமன்ற விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய முக்கிய கருத்துக்கள்- லிஸ்ட் போட்டு அடித்த கே.சி.பி


1.) “மக்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே விடியல் ஆட்சியின் சாட்சி” என முதல்வர் கூறுவதை கேட்டால் “துன்பம் வரும் வேளையில் சிரி” என்று கூறும் வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது.

“விடியலின் அடையாளம் எது தெரியுமா நான் செல்கிற இடமெல்லாம் கூடுகிற மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி தான்.” எனக்கூறுகிறார் முதல்வர். ஆனால் அவர் செல்லுகிற இடமெல்லாம் மக்கள் தானாக கூடுவதில்லை. திமுகவினர் பணம் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள், அதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி தான் என்பது முதல்வருக்கு எப்பொழுது தெரிய போகிறது.

2.) “பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி” என்றீர்களே அலங்கோல ஆட்சிக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?

“மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்கு ஸ்டாலின் பஸ் என்றே பெயர் வைத்துவிட்டார்கள்” என்று கூறுகிறீர்கள். அதேபோல் ஸ்டாலின் டாஸ்மாக் பட்டி தொட்டி எங்கும் பரவி இருக்கிறதே, ஸ்டாலின் ஆட்சியில் கஞ்சா, குட்கா, Cool Lip போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் தமிழகம் முழுவதும் சர்வ சாதாரணமாக உள்ளது பள்ளிகள் வரை பரவியுள்ளது. அதை தடுக்க வேண்டியது ஸ்டாலின் நிர்வகிக்கிற காவல்துறையின் கடமை தானே.

3.) “மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுக்கிற புதுமை பெண் திட்டத்தின் மூலமாக கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 30% அதிகரித்து இருக்கிறது” என்று கூறுகிறீர்கள். மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பது வரவேற்க தகுந்த திட்டம் தான். ஆனால் அதற்காக தவறான தரவுகளை வெளியிடக் கூடாது. கடந்த 5 ஆண்டுகள் பெண்கள் கல்லூரியில் சேர்ந்த விகிதத்தை பட்டியலாக வெளியிட்டு எப்படி 30% அதிகரித்துள்ளது என்பதை காட்டுங்கள். மேலோட்டமாக பார்த்தால் இது தவறான தகவல் போல் தெரிகிறது.

4.) “இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது” இப்படி ஒரு பொய்யை சொல்வதற்கு உங்கள் மனம் துளியும் உருத்த வில்லையா? தமிழகத்தில் அதிகப்படியிலான பெண்கள் வன்கொடுமை, சட்ட ஒழுங்கு சீர்கேடு உங்கள் ஆட்சியில் தான் ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்க வாய் கூசாமல் எப்படி உங்களால் இப்படி சொல்ல முடிகிறது?

5.) “வரம்புகளுக்கு உட்பட்டு தான் தமிழ்நாடு அரசு கடன் வாங்கி உள்ளது” என்று கூறுகிறீர்கள் ஆனால் கடன் வாங்கப்பட்ட பணம் எங்கு செலவு செய்யப்பட்டுள்ளது? அதனால் மக்கள் பலனைடைந்துள்ளார்களா அல்லது உங்கள் அமைச்சர்கள் பலனைடைந்துள்ளார்களா?

6.) “டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு வழிவகுத்தது அதிமுக தான்” என சொல்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் தான் இப்படியே அடுத்தவர்கள் செய்த தவற்றை சொல்லி உங்கள் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிப்பீர்கள்? நீங்கள் தானே இன்றைக்கு ஆளும் கட்சி. எடப்பாடி பழனிசாமியின் பலவீனத்தால் தான் நீங்கள் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறீர்கள் உங்கள் பலத்தில் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

7.) ” தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.” என்று சொல்கிறீர்கள். நீங்கள் தமிழகத்தில் இன்று வரை ஆட்சிப் பொறுப்பேற்று 1321 நாட்கள் தான் ஆகிறது. அதிலேயே 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக சொல்கிறீர்கள். அப்படி என்றால் ஒரு நாளுக்கு சராசரியாக 75 போராட்டங்களை நீங்கள் அனுமதித்திருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் அனுமதிக்காத போராட்டங்கள் ஏராளம். இந்த ஒரு உண்மையே உங்கள் ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளுக்கும், அவலங்களுக்கும் சாட்சி என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை. மக்கள் என்ன மகிழ்ச்சி வெள்ளத்திலா போராட்டம் நடத்துகிறார்கள்? தங்கள் எதிர்ப்பை இந்த அரசாங்கத்திற்கு தெரிவிக்கத்தானே போராட்டம் நடத்துகிறார்கள்.
Share on:

போலீஸ் ஸ்டேசனிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! கல்வீசி தாக்கியதில் போலீஸ் காயம்! பரபரத்த தேனி.


தேனியில் போதைப் பொருள் நுண்ணறிவு காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து ஏர்கன், 24 செல்போன்கள், கஞ்சா ஆயில் உட்பட ஏராளமான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிர்ச்சியாக கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்லும் போது பிடிக்க முயன்ற முதல் நிலை காவலர் மீது கல்வீசி தாக்கப்பட்டதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் தேனி சமதர்மபுரத்தில் போதைப் பொருள் நுண்ணறிவு காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, செல்போன்கள், வாகனங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று காவலர்கள் வழக்கமான ரோந்து பணிக்கு சென்றிருந்த நிலையில் காவல் நிலையம் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் இரண்டு கொள்ளையர்கள் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த இரவு காவல் பணியில் இருந்த முதல் நிலைக் காவலர் முருகேசன் என்பவர் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து அவர்களை சோதித்த போது, அவர்களிடம் ஏர்கன், செல்போன்கள் என ஏராளமான பொருட்கள் இருந்ததால் விசாரணைக்காக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். அப்போது இரண்டு பேரும் அவரை தள்ளி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். இதனையடுத்து கொள்ளையர்களை காவலர் பிடிக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிய நிலையில், பின்னால் துரத்திச் சென்று பிடிக்க முயன்ற போது, இருவரும் சேர்ந்து முருகேசன் மீது கல் வீசி தாக்கியதில் முருகேசனின் தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் என்பவரிடம் முருகேசன் நடந்ததை கூறிய போது, இருவரும் சேர்ந்து துரத்தியதில் கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார்.

இதனைத் தொடர்ந்து கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில், அவன் பெயர் நிதீஷ் குமார் (23) என்பதும் பண்ணைப்புரம் வடக்குத் தெருவை சேர்ந்தவன் என்பதும், அவனுடன் சேர்ந்து கொள்ளையடித்த மற்றொருவன் கோம்பையைச் சேர்ந்த உதயகுமார் (24) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து 24 செல்போன்கள், ஒரு ஏர்கன், இரண்டு கேமராக்கள், மைக் கேமரா ஒன்று, ஒரு பைனாக்குலர், வெள்ளை பவுடர், கஞ்சா ஆயில் 650 ML, 50 கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உதயகுமார் தப்பி ஓடிய நிலையில், நிதிஷ்குமாரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த முருகேசன் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக பிடிபட்ட குற்றவாளி நிதீஷ்குமார் தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து ஏர்கன் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்ததுடன், போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர்.
Share on: