களைகட்ட போகும் மக்களவைத் தேர்தல்.. நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள்


மக்களவை தேர்தலுக்கு நாடு முழுவதும் 10.50 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்துளார்.தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி மக்களவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்க இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறுகையில் லோக்சபா தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். லோக்சபா தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். இந்த ஆண்டின் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான்.

தேர்தலை திருவிழா போல நடத்துவது நமது நாட்டில்தான். லோக்சபா தேர்தலுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளன. ஒவ்வொரு தேர்தலும் எங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக உள்ளது . தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கேற்க வேண்டும்.

லோக்சபா தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்படும். 1.50 கோடி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளார்கள். இந்த மக்களவை தேர்தலில் 1.82 கோடி வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்கிறார்கள். அவர்களில் 82 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள்.

இந்த தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 49,72,31,994, பெண் வாக்காளர்கள் 47,15,41, 888, மாற்றுத்திறனாளிகள் 88.4 லட்சம் பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,055 பேர் உள்ளனர். இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
Share on:

எந்தெந்த நிறுவனங்கள், கட்சிகள்? – தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு


உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் வரவுள்ள நிலையில் இப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஏப்ரல் 12, 2019 முதல் ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதலாவதாக, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. மற்றொன்றில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன. இருப்பினும், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் சேர்த்து இடம்பெறவில்லை.

தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக பெற்று கட்சிகளின் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, திமுக, பாரத் ராஷ்ட்ரிய சமிதி, ஜனசேனா, சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கிய தேதி வாரியாக இடம்பெற்றுள்ள இன்னொரு பட்டியலில் பாரதி ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், உத்தராகண்ட் சுரங்க பணிகளை மேற்கொண்ட நவ யுகா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், அப்பல்லோ டயர்ஸ், லக்ஷ்மி மிட்டல், எடெல்வீஸ், பிவிஆர், கெவென்டர், சுலா ஒயின், வெல்ஸ்பன் மற்றும் சன் பார்மா ஆகிய எண்ணற்ற நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி புதன்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை மத்திய அரசு 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு வந்தது. ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெற தேவையில்லை.

தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள், அவற்றை 15 நாட்களுக்குள் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட 22,217 தேர்தல் பத்திரங்களில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவிட்டது. 2019 முதல்வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. இதற்கு ஜூன் 30 வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ மனு தாக்கல் செய்தது.

கடந்த 11-ம் தேதி அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்பிஐயின் கோரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து தள்ளுபடி செய்ததோடு, தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதேவேளையில், தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணைய தளத்தில் மார்ச் 15-ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, எஸ்பிஐ சமர்ப்பித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் தற்போது தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Share on:

“தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியீடு”: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்


தேர்தல் பத்திர தரவுகள் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும். எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம்” என இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் வரும் லோக்சபா தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு உறுதி செய்யப்படும். அனைவருக்கும் சமமான மற்றும் போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் 6.9 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.100வயதுக்கும் மேற்பட்டோர் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.

மாநில எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும். ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படும். லோக்சபா தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2014ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இறுதியாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை நடத்த முழுமையான அளவில் தயாராக உள்ளோம். போதைப்பொருள் உள்ளிட்டவைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஜனநாயக திருவிழாவில் இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயம் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும். எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share on:

சரத்குமாரின் முடிவிற்கு எதிராக கொந்தளித்த சமக தொண்டர்!


பாஜகவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைக்கும் சரத்குமாரின் முடிவிற்கு எதிராக விழா மேடையிலேயே சமக தொண்டர் ஒருவர், கொந்தளித்தார்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிடப்போகிறது.. அனேகமாக இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் உள்ளன.

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. பாமக, தேமுதிக இணையுமா இல்லையா என்பது இன்னமும் தெரியவில்லை. பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ பன்னீர்செல்வம் அணி, புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை இணைந்துள்ளன.

பொதுவாக சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது வழக்கம்.. இந்த தேர்தலில் வித்தியாசமாக சிறிய கட்சி ஒன்று பெரிய கட்சி உடன் இணைந்துள்ளது. கூட்டணியாக அல்ல.. கட்சி அப்படியே பாஜகவில் இணைந்துள்ளது. சமீபகாலத்தில் நடந்த பெரிய மாற்றம் இதுதான்..

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இன்று இணைத்தார். லோக்சபா தேர்தல் நேரத்தில் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்திருப்பது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு மத்தியில் ஒரு சமக தொண்டர் எழுந்து, நாட்டாமை தீர்ப்பை மாற்றுங்க என்பது போல், கொந்தளித்தார். பாஜகவில் சமகவை இணைக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கொந்தளித்து கோஷம் போட்டதை கண்ட மற்ற தொண்டர்கள் இவரை யார் உள்ளே விட்டது என்று கேள்வி எழுப்பி அவருடன் வாக்குவாதம் செய்தனர்.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
Share on:

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.


சென்னையில் பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகார் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரை சேர்ந்த செல்வராஜ், அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர், காலை 7.30 மணி முதல் சோதனையிட்டு வருகின்றனர்.

இதேபோல் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மதுபான பாரிலும் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவை தவிர, சென்னை வேப்பேரி, பாரிமுனை, தேனாம்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை என சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Share on:

அதிமுக தேர்தல் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மனு!


லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு சின்னம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.பாமர மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு, கட்சியின் சின்னம் அவர்களின் அறிமுகத்தைப் பெறுவது அவசியமாகிறது. தங்களுக்குரிய தேர்தல் சின்னம் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் முண்டியடிப்பதை வைத்தே அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றது. எம்ஜிஆர் காலம் தொடங்கி, ஜெயலலிதா காலம் கடந்து தற்போது எடப்பாடி பழனிசாமி காலம் வரை இரட்டை இலை சின்னம், அதிமுகவிற்கு பல வெற்றிகளைத் தந்துள்ளது. கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக இரட்டை இலை சின்னம் இழுபறியில் சிக்கித் தவிக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதலால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போதும் சின்னம் பிரச்சனை ஏற்பட்டது. விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி அரசியல் களத்தை ஆக்கிரமித்துள்ளது. ஏனெனில், ஓபிஎஸ், தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி வருகிறார்.

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி, ஓபிஎஸ் என இரண்டு தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தியதால் சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு தமது வேட்பாளரை திரும்பப்பெற்றது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. அதேசமயம், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சின்னத்திற்கான படிவங்களில் கையெழுத்திட்டார்.

இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட அதிமு எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே என்று உறுதியாகியிருந்தாலும், ஓபிஎஸ் தொடர்ந்து தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு, சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தி வந்தார். இதற்கும் நீதிமன்றம் மூலம் தடை பெற்றார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில், அதிமுக தேர்தல் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் அவைத் தலைவர் கையெழுத்திட அதிகாரம் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அதிமுக அவைத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கக் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
Share on:

எம்.ஜி.ஆர். பிரச்சாரத்தையும் மீறி அதிமுக வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை! – 1977 தேர்தலில் சுவாரசியம்.


ஒரு கட்சியை விட அதன் தேர்தல் சின்னம் மிகவும் பிரபலமாகிவிடும். தற்போது, அதிமுக கட்சி பழனிசாமி வசம் வந்துவிட்டாலும் கூட, இன்னமும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவதும், இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் கமிஷனிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருப்பதும் இதனால்தான். எம்.ஜி.ஆர். நிறுத்திய அதிமுக வேட்பாளரை அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை தோற்கடித்து, கட்சியை விட சின்னமே வலிமையானது என்று உணர வைத்த சுவாரசிய வரலாறு உண்டு!

1972-ல் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக, 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல், 1974-ல் கோவை மேற்கு சட்டமன்றத் தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றது. எம்.ஜி.ஆரும் கட்சியின் சின்னத்தைக் குறிப்பிட இரண்டு விரல்களைக் காட்டி பிரச்சாரம் செய்ய இரட்டை இலை மக்கள் மனதில் பதிந்துபோனது.

1977-ம் ஆண்டு முதன்முதலில் சட்டமன்றப் பொதுத் தேர்தலை எம்.ஜி.ஆர். சந்திக்கிறார். தமிழகத்தில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திலேயே அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அந்தத் தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தபடி பிரச்சாரம் செய்த எம்.ஜி.ஆர். ஒரு தொகுதியில் மட்டும் இரட்டை இலைக்கு வாக்களிக்காதீர்கள் என பிரச்சாரம் செய்தார். அது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி. தாராபுரம் தொகுதியில் முதலில் அய்யாசாமி என்பவரைத்தான் அதிமுக வேட்பாளராக எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

கட்சி சின்னமான இரட்டை இலையில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்காக அதிமுக சார்பில் அவருக்கு அதிகாரபூர்வமாக விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்பட்டு அய்யாசாமி மனுதாக்கலும் செய்துவிட்டார்.

ஆனால், அவரைப் பற்றி கட்சியினரிடம் புகார்கள் எழுந்ததால் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை வேட்பாளராக எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

என்றாலும், ஏற்கெனவே கட்சியின் அதிகாரபூர்வ படிவங்களை தாக்கல் செய்த அய்யாசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னம் கிடைத்தது. தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர். சிங்கம் சின்னத்தில் பாலகிருஷ்ணனுக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.

ஆனால், அதையும் மீறி இரட்டை இலைக்கு மக்கள் வாக்களித்தனர். தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை விட 2,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அய்யாசாமி வெற்றிபெற்றார்.

எம்.ஜி.ஆர். ஆதரவு பெற்று சிங்கம் சின்னத்தில் போட்டியிட்ட அலங்கியம் பாலகிருஷ்ணன் 3-வது இடத்துக்குப் போனார். மக்களின் மனதில் ஒரு கட்சியைவிட அதன் சின்னம் வலிமையாக பதிந்து போனதை தமிழகம் உணர்ந்தது. அதனால்தான் சின்னத்தைத் தக்க வைக்க கட்சிகள் போராடுகின்றன!
Share on:

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: இருவர் சிக்கியது எப்படி? – முழு விவரம்


புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் இரண்டு பேர் பிடிபட்டனர். முன்னதாக, கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை கோரி பல இடங்களில் போராட்டம் வெடித்தது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு 9 வயது. அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே, கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு சிறுமியை தேடினர். ஆனால் எந்த தகவலும் இல்லை.

சிறுமியை விரைந்து மீடகக் கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே கடந்த 4-ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். 20-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி – கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது மாயமான சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனிடையே, கொலையாளிகள் மீது நடவடிக்கை கோரியும், மெத்தனமாக நடந்து கொண்ட போலீஸாரை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே 5 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. பதற்றம் அதிகரிக்கவே புதுச்சேரிக்கு தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவத்தினர் அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டம் நடந்து வந்த நிலையில், ஒரு தரப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போலீஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் காவல் நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகளை கைது செய்யவதாக உறுதியளித்தனர். அதனை ஏற்ற அவர்கள் இரவு சுமார் 7.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கொலையாளிகளை பிடிக்க போலீஸார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்திய நிலையில் இன்று முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.

கடந்த 2-ம் தேதி வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் வீட்டுக்கு வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த 2 பேரும் சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டியதோடு, உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டுக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் போட்டு உள்ளே இழுத்துவிட்டு சென்றுள்ளனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே முழு உண்மை தெரியவரும் என்று போலீஸார் தரப்பில் குறிப்பிட்டனர்.

இதனிடையே, சிறுமியை கொலை செய்த கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கைக் கோரி முத்தியால்பேட்டை சின்ன மணிகூண்டு அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர் இசிஆர் சிவாஜி சிலை அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டு முத்தியால்பேட்டை காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடற்கரை சாலை நேரு சிலை அருகே உள்ள சிறு வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு நடத்தினர்.

இசிஆர் சிவாஜி சிலை சந்திப்பில் பொதுமக்கள் பேருந்துகளை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜிவ் காந்தி சதுக்கத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் சாலைகளில் நின்றபடி போராட்டம் நடத்தினர்.

உருளையன்பேட்டை கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். அவர்கள் கொலையாளிகளை துாக்கில் போட வேண்டும் என கோஷமிட்டனர். அந்நேரத்தில் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைக்கு வந்தார். இதனால் பெண்களை போலீஸார் தள்ளினர். ஆனாலும் பெண்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

கடற்கரை காந்தி சிலை அருகில் மாணவர்கள், இளைஞர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கிசென்றனர். இதுபோல் பல இடங்களில் போராட்டம் நடந்தது.

நேரு சிலைக்கு பின்புறம் இருந்து திராவிடர் கழகத்தினர் ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்தனர். அவர்களை பாரதி பூங்கா அருகில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சிறுமி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வானூர் பகுதியில் இருந்த இளைஞர்கள் பட்டானூரில் இருந்து பேரணியாக வந்து தமிழக – புதுச்சேரி எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல் புதுச்சேரியின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், நமச்சிவாயம் உடனிருந்தனர். அதே நேரத்தில் அங்கிருந்த எம்எல்ஏக்கள் நேரு, சம்பத், பிரகாஷ்குமார் மற்றும் சமூக அமைப்பினர் கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன்பின்னர், கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Share on:

தமிழகம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல்.. ரூ. 108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.


ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலும் சென்னையிலும் நடத்திய சோதனையில் ரூ. 108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பிரகாஷ் என்பவரிடம் சோதனை செய்ததில் இரண்டு பைகளில் இருந்த 10 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் 15 கிலோ திரவ வடிவிலான 30 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி ஆதரவுடன் போதைப்பொருள் தங்கு தடையின்றி நடமாடுவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் குறித்து ஏராளமான செய்திகள் வெளியாவதாக தெரிவித்த மோடி,கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கும் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போதைப் பொருளால் நாளைய தலைமுறையும் பாதிக்கப்படும் எனவும் மோடி எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து உடனடியாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் போதைப்பொருள், மனமயக்க பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 470 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினம் சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மண்டபம் கடலோர காவல் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். 99 கிலோ எடையுள்ள ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on:

“நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்!” – உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் காட்டம்


“நீங்கள் சொன்ன கருத்துகளின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்” என்று சனாதனம் தொடர்பான வழக்கில் உதயநிதி மீது காட்டமாக அதிருப்தியை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்’ என்று பேசினார்.

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, உதயநிதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களையும் தொடுக்கப்பட்ட வழக்குகளை தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “நான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன். 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் என்னால் செல்ல முடியாது. பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள நான் தயார்” என்று உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. உதயநிதியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவின் கீழ் உங்கள் உரிமையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் சட்டப்பிரிவு 25-ன் கீழ் உங்களின் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள்.

சனாதனம் தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்துக்களின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர். ஓர் அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் கருத்துக்களின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும்” என்று அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Share on: