ஆந்திராவைச் சேர்ந்த சீதாராம்யெச்சூரி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர்.. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இடதுசாரி சித்தாந்தத்தின் கோட்டையாக கட்டி எழுப்பியவர் சீதாராம் யெச்சூரி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக 32 ஆண்டுகாலம் பணியாற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்த சீதாராம் யெச்சூரி இன்று உடல்நலக் குறைவால் காலமானார். சீதாராம் யெச்சூரியின் இழப்பு இந்திய இடதுசாரிகளுக்கு பேரிழப்பாகும்.
தமிழ்நாட்டின் சென்னையில் 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந் தேதி பிறந்தார் சீதாராம் யெச்சூரி. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். கல்லூரி காலத்திலேயே இடதுசாரி மாணவர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் சீதாராம் யெச்சூரி.
இந்திரா காந்தியின் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில் சிறைவாசம் அனுபவித்தார். 1984-ம் ஆண்டு முதல் 32 ஆண்டுகள், சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். 2005-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாகவும் பதவி வகித்தார்.
நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதப் பாதையை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு திரும்ப வைத்ததில் சீதாராம் யெச்சூரி பெரும் பங்களிப்பு செய்தார். அண்மைக்காலமாக உடல்நலன் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சீதாராம் யெச்சூரி. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி காலமானார்.
சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய இடதுசாரிகளுக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும். முதுபெரும் இடதுசாரித் தலைவரான சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் மது போதையில் ரகளை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்து விசாரணை மேற்கொள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி 2 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் நல்லதம்பி என்பவருக்கு நேற்று இரவு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணிக்கு வந்த மருத்துவர் நல்லதம்பி அதிக மதுபோதையில் இருந்துள்ளார். அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி உள்ளார்.
நோயாளி ஒருவர் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி என்பவர் அந்த நோயாளியிடம் இசிஜி எடுத்து வரச் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மற்றொரு நோயாளியின் இசிஜியை பார்த்து அவருக்கு மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் சமாதானம் செய்து மருத்துவரை அழைத்துச் சென்றுள்ளனர். அதைத்தொடர்ந்து, அந்த மருத்துவர் மதுபோதை மயக்கத்தில் மருத்துவமனைக்கு வெளியே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு உள்ளே செல்லுமாறு தெரிவித்ததற்கு, அவர் போக மறுத்துள்ளார்.
அரசு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த போது மது போதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவராக இருந்துகொண்டு உயிர்களின் மீது அலட்சியாக இருந்த இந்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட அந்த மருத்துவர், மதுபோதையில் தான் பணிக்கு வந்து தவறாக மருத்துவம் பார்த்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி 2 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளார்.
கோவை மாவட்டம் ஒண்டிப்புத்தூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த நிலையில் சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக ஆங்காங்கே பாதாள சாக்கடைகள் தோண்டப்பட்டு , மழை நீர், நீர் நிலைகளுக்கு செல்ல வழிவகை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஒண்டிப்புத்தூர் பகுதியில் முக்கிய சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அங்கு இன்னமும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்த பாதாள சாக்கடையையொட்டி இரும்பு தடுப்புகள் போடப்பட்டிருக்கின்றன.
அந்த சாலை பிஸியான சாலை என்பதாலும் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும் என்பதாலும் நெருக்கடியாகவே காணப்படும். அந்த வகையில் இன்று பிற்பகல் அவ்வழியாக ஒரு இரு சக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பாதாள சாக்கைடை அருகே அவர்கள் சென்ற போது அங்கிருந்த தடுப்பில் அவர்களது வாகனம் லேசாக மோதியது. இதில் இருவரும் நிலைத்தடுமாறி அந்த பள்ளத்தினுள் விழுந்தனர். பைக் சாலையிலேயே விழுந்துவிட்டது.
இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் போக்குவரத்து போலீஸாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பள்ளத்தில் விழுந்த இருவரையும் மீட்ட போலீஸார், அவர்கள் லேசான காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்த்தனர்.
போக்குவரத்தில் பிஸியாக இயங்கும் அந்த சாலையில் இரும்பு தடுப்புகளை பாதுகாப்பாக வைக்காமல் ஏனோ தானோ என வைத்தது பெரும் தவறாகும். அது போல் இது போன்ற பணிகள் நடக்கும் போது அங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு கூறியிருப்பதாவது: விபத்து நடந்த ஒண்டிப்புத்தூர் சாலையில் இருக்கும் பாதாள சாக்கடைக்கான பள்ளத்தை ஆய்வு செய்வோம் என தெரிவித்திருந்தார். மழைக்காலத்திற்குள் இது போன்ற அபாயகரமான பள்ளங்களை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
* மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு சம்பவம் கிட்டத்தட்ட மேற்குவங்க அரசை கிடுகிடுக்க வைக்கிற அளவு பூதாகரமாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 படுகொலைகள் அரங்கேறியுள்ளது, மேலும் வார கொலைகள், மாத கொலைகள் என தினசரி பத்திரிகைகளில் தனி பட்டியலிடும் அளவு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
* ஆனால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியால் இந்த அரசாங்கத்திற்கு எதிராக எதுமே செய்ய முடியவில்லை. காரணம் எடப்பாடிக்கும் அவரோடு இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மீது இருக்கிற வழக்குகள். அதனால் அவர்கள் பேரளவு பேசிவிட்டு காலத்தை கழித்துக்கொண்டுள்ளார்கள்.
* இவர்களின் இந்த செயல்பாடற்ற தன்மையை பயன்படுத்தி பா.ஜ.க, நா.த.க, விஜய் போன்ற பலர் தங்களை வளர்த்துக்கொள்ள களத்திற்கு வருகிறார்கள், ஆளுக்கு ஒருகோடி உறுப்பினர்கள் என களத்தில் இறங்குகிறார்கள்.
* ஆனால் கட்சியை தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டுவரும் EPS, அதிமுக கட்சி ரீதியாகவும், கூட்டணியாகவும் பலவீனமாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பின் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எப்படியாவது தேர்தலை தள்ளிவைத்துவிடலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.
* வருகிற உள்ளாட்சி தேர்தலிலேயே நாம் வென்றுவிடுவோம் என்று நம்பிக்கையோடு கட்சிக்காரர்கள் களமிறங்க முடியவில்லை. அதற்குண்டான வலுவான கூட்டணி இல்லை, வலுவான தலைமை இல்லை என்றால் அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் என்ன நடக்கும்? இப்படியே சென்றுகொண்டிருப்பது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல – கே.சி.பழனிசாமி
மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முழுக்க பலரும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். தன்னை கடவுளின் அவதாரம் என்று ஆங்காங்கே சொல்லிக்கொண்டு.. பெயரையும் கூட மகா விஷ்ணு என்று மாற்றிகொண்டு.. “நடித்தபடி” சுற்றித்திரியும் போலி சாமியார் விஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
கடவுள் இல்லைன்னு சொல்றவனை நம்பலாம்.. கடவுள் இருக்குன்னு சொல்றவனை கூட நம்பலாம்.. ஆனா நான்தான் கடவுள்ன்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பாதே என்று நடிகர் கமல்ஹாசன் ஒரு வசனம் சொல்வார். அப்படி நம்ப கூடாத.. தன்னை தானே அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் நபர்தான் இந்த மகா விஷ்ணு.
ஓஷோ என்ற தத்துவ ஞானி இருந்தார். அமெரிக்காவில் பெரும் கூட்டமே அவர் பின் நின்றது. தன்னை அவர் கடவுள் என்று சொன்னதும் இல்லை. அவதாரம் என்றதும் இல்லை.. மாறாக பூமி என்ற கிரகத்திற்கு நான் பிறப்பு முதல் இறப்பு வரை பயணம் மேற்கொண்டுள்ளேன்.. என்று தன் ஆன்ம தேடலை சாதாரணமாக விளக்கிவிட்டு சென்றார்.. எனக்கெல்லாம் அவ்வளவு சீன் இல்லை என்பது போல தன்னையே சிறுமைப்படுத்தி பேசினார். அவரை காப்பி அடித்து.. அதில் கொஞ்சம் மதத்தை கலந்து பேசும் பொய் சாமியார்கள் பலர் உள்ளனர்.
இன்னும் சில பொய் சாமியார்கள் சாதாரணமாக சொன்னா கேட்க மாட்டாங்க.. கொஞ்சம் சயின்ஸை சேர்த்து சொல்லுவோம் என்று.. அணு அறிவியல் தொடங்கி குவாண்டம் பிசிக்ஸ் வரை கண்டதையும் அரைகுறையாக மேய்ந்துவிட்டு.. கூடவே மதத்தை கலந்து கொத்து பரோட்டாவாக பார்சல் செய்து கொடுப்பார்கள். அப்படி ஒரு பரோட்டா மாஸ்டர்தான் இந்த “மகா விஷ்ணு”. தன்னை அவதாரம் என்று “பெருமைப்படுத்தி” சொல்லிக்கொள்ளும் இவர்.. அதை சொல்லிக்காட்டவே இந்த மகா விஷ்ணு பெயரை வைத்துள்ளார்.
பிராடுகள்தான் பெரும்பாலும் இப்படி சொல்லிக்கொள்வார்கள் என்ற விமர்சனம் உள்ள நிலையில்தான் திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இந்த விஷ்ணு. ஒரு காலத்தில் இந்த மகா விஷ்ணு சிறு வயதில் முன்னணி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வந்தார். யோவ் மிலிட்டரி நீ எங்கயா இங்கே என்பது போல.. அவதாரம் ஒன்று அசத்த போவது யாருக்கெல்லாம் வந்து இருக்கிறது.
மதுரை மகா என்ற பெயரில் வந்து காமெடி செய்தவர்.. இப்போது தன்னை அவதாரம் என்று கூறி காமெடி செய்து வருகிறார். அவரது பேச்சாற்றல் பலரையும் கவர்ந்த நிலையில் தற்போது வளர்ந்து தனது பாதையை மாற்றியுள்ளார் இந்த மகா விஷ்ணு. மகாவிஷ்ணு பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில் பரம்பொருள் வாழ்வியல் வகுப்பு என்ற பெயரில் ஆசிரமம் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஆசிரமம் மூலம் பேமஸ் ஆகலாம் என்பதால் இப்படி செய்ததோடு இவர் போலி மருத்துவரும் கூட.. சித்த மருத்துவம் படித்து இருப்பதாக கூறி காயகல்ப லேகியம் விற்பனையும் செய்து இருக்கிறார் மகா விஷ்ணு.
இந்த லேகியம் சாப்பிட்டவர்களுக்கு பல நாள் உடல்வியாதிகள் குணம் அடைந்ததாக கூறி அடித்து விட்டு குறும்பு செய்துள்ளார். அதோடு மகாவிஷ்ணு தயாரித்துள்ள “நான் செய்த குறும்பு” என்ற திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளி வருகிறது. சினிமா – மருத்துவர் – ஆன்மிகம் – அவதாரம் என்று இவர் தசாவதாரங்களை எடுத்து பல இடங்களில் கை வைத்துள்ளார்.
தான் பெருமாளின் அவதாரம் என குடுகுடுப்பைக்காரர் தனது தாயிடம் சொன்னதாக கூறிய மகா விஷ்ணு அதை வைத்தே கல்லா கட்டி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பூரில் பரம்பொருள் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம், ஆன்ம தேடலுக்கு வழிகாட்டுவதாக கூறி கட்டண வகுப்புகளை நடத்தி வருகிறார்.
வெறும் 10-ம் வகுப்பு படித்தவர்.. ஆசிரியர்கள் முன் அகந்தையாக பேசுவது.. அவரை விட அதிகம் படித்த மாணவர்களுக்கு அறிவுரை கூறுவது எல்லாம்.. என்ன கொடுமையோ? இதை தமிழக பள்ளிக்கல்வித்துறை.. அந்த தலைமை ஆசிரியர்கள் எப்படி அனுமதித்தார்களோ.. தெரியவில்லை. ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுதல், விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி அளித்தல் என்று இவர் உதவிகளை செய்ததாகவும் ஒரு பக்கம் கூறப்பட்டாலும்.. இவர் போலி என்றும் பலர் புகார்களை வைக்கின்றனர். இவர் போலியோ.. உண்மையோ.. பள்ளியில் பேசுவதற்கு இவர் யார் என்ற கேள்வியே பலரிடமும் இருக்கிறது.
இவரை தீவிரமாக நம்பும் பலர் இருக்கிறார்.. இவரை தீவிரமாக எதிர்க்கும் பலரும் இருக்கிறார்கள்.. தன்னை அவதாரம் என்று சொல்லிக்கொள்பவனை நம்பி பின்னால் செல்வது என்பது அவரவர் விருப்பம்.. ஆனால் அவரை பற்றி தெரியாத பள்ளி குழந்தைகளிடம் இப்படிப்பட்டவரை அறிமுகப்படுத்தி.. முன்னேறி உள்ள தமிழ்நாட்டை 60 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிடாதீர்கள்.. இப்படிப்பட்டவர்களை அழைக்கும் முன் ஒரு முறை.. கமல் சொன்ன மேற்கண்ட வசனத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
போலி என்சிசி முகாம் நடந்த விவகாரத்தில் கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
போலி என்.சி.சி முகாம் நடத்திய கிருஷ்ணகிரி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் என்.சி.சி பயிற்சி முகாம் நடந்தது. இதில் 13 வயது மாணவி, போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து அந்த போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், உதவி பயிற்சியாளர்கள், பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிவராமனின் தந்தையும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தாக்கல் செய்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, போலி என்.சி.சி முகாம் நடத்திய கிருஷ்ணகிரி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதால் சிறப்பு அதிகாரியை நியமிக்க தனியார் பள்ளி கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்புக்குழுவின் அறிக்கையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சிறப்பு குழுவானது சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியதாகவும், பாதிப்பிலிருந்து விரைந்து மீட்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி என்.சி.சி முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படும் மற்ற பள்ளிகளுக்கும் சென்று அங்கும் பல்வேறு உளவியல் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்சோ புகார்களை எப்படி வழங்குவது ஆசிரியர்கள் அதை எப்படி கையாள்வது உள்ளிட்ட ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு மன அழுத்தம் உள்ளதா என கண்டறியப்பட்டுள்ளதாகவும், மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களை தடுக்கும் வகையில் நடைமுறையில் உருவாக்க சிறப்பு குழு அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நிர்வகிக்க தனியார் பள்ளி கல்வி இயக்குனருக்கு தற்போது பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பரிந்துரை தீவிர பரிசீலனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலி என்.சி.சி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், மனுவை திரும்பப் பெறுவதாக செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை திரும்ப பெறுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது வரை சிறையில் இருந்து வருகிறார் செந்தில் பாலாஜி. தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், மா.கவுதமன், சாட்சிகளின் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டதால் இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா.. தெரியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கத் தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்குகளைச் சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா என்றும் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
சென்னையில் குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 2017ஆம் ஆண்டு பெண்ணுரிமை இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குடிசைவாசிகளுக்கு பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பெரும்பாக்கம் துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து 2018ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி இப்பகுதிகளை ஆய்வு செய்து வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையில், இந்த பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் தாராளமாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதேபோல, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது குறித்து காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பள்ளி குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினர். போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கத் தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லையா? இந்த வழக்குகளைச் சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா? என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான காவல்துறையினரும் பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார். மேலும் போலீஸ் தரப்பு வழக்கறிஞர், வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையின் அடிப்படையில் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 9ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை கோரி பாரிவேந்தர் பச்சைமுத்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாக கூறி ரூ.88.66 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க பாரிவேந்தருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியதாக 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மாணவர்களை ஏமாற்றியதாக வேந்தர் மூவிஸ் இயக்குநராக இருந்த மதன், எஸ்ஆர்எம் கல்விக் குழும நிறுவனங்களின் தலைவர் பாரிவேந்தர் பச்சைமுத்து ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
மாணவர்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றிய குற்றச்சாட்டில் பாரிவேந்தர் பச்சைமுத்துவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த பாரிவேந்தர், பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களுக்கு ரூ.88 கோடியை திருப்பி அளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அதே நேரத்தில் ரூ.88 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்துவுக்கு கடந்த 2022, 2023ஆம் ஆண்டுகளில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்ஆர்எம் கல்விக் குழும நிறுவனங்களின் தலைவர் பாரிவேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் பச்சமுத்து வழக்கு தொடர்ந்தார். பாரிவேந்தர் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ரூபாய் 88.66 கோடி மோசடி தொடர்புடைய வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க பாரிவேந்தருக்கு உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை பொத்தேரி பகுதியில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிகளில் இன்று காலை அதிரடி சோதனை நடத்திய போலீசார், ஏராளமான போதை வஸ்துகளை கைப்பற்றி உள்ளனர். போதைப்பொருட்களை பயன்படுத்திய மாணவர்கள் 30 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகள் அதிகமானோர் பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதிகள் மற்றும் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. மாணவர்களிடையே சமீப காலமாக பெருமளவு கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் அவ்வப்போது சில கைது சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பெயரில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மேற்பார்வையில், 1,000க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென பொத்தேரி பகுதியில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சுற்றிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும் விடுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்றது. விடுதிகளில் இருந்து வெளியே வரும் மாணவர்கள் சோதனைக்குப் பிறகே வெளியே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தாம்பரம், செங்கல்பட்டு இன்று காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில் அரை கிலோ கஞ்சா மற்றும் 6 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் 20 எம்.எல், பாங் 5, ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ, ஊசிகள், மாத்திரைகள், போதை பெர்ஃபியூம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக 30 மாணவர்களைப் பிடித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மாணவி உட்பட 30 மாணவர்களை போலீசார் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் யாரிடம் போதைப் பொருட்கள் வாங்குகிறார்கள்? போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் யார் யார்? மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எப்படி கிடைக்கிறது? போதைப் பொருட்கள் எந்த நேரத்தில் கைமாற்றப்படுகிறது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
போதைப் பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இனி அடிக்கடி, கல்லூரிகளைச் சுற்றியுள்ள விடுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்த போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.