கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள வெள்ளிமலை-சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, வாழ்வியல் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கல்வராயன் மலைப்பகுதியில் 10 கிலோ மீட்டருக்கு சாலை சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மண் சாலைகளை சீரமைக்க கால அவகாசம் வேண்டுமென தெரிவித்தார்.
கல்வராயன் மலைப்பகுதியின் முக்கிய சாலையான வெள்ளிமலை- சின்ன திருப்பதி இடையே சாலை எப்போது முடிக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்படும் என கூறினார்.
இதனையடுத்து, வெள்ளிமலை-சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
குத்தகை காலம் முடிந்து விட்டால், கடையை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மதுக் கடையை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை, குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ததால் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் குத்தகை காலம் முடிந்த பிறகும் கடைகளை காலி செய்யாமல் நடத்தப்படுகிறது என்ற அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, குறிப்பிட்ட கடையை மூன்று நாட்களுக்கு முன் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் சதீஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
இதையடுத்து, 2019-ம் ஆண்டு குத்தகை காலம் முடிந்த போதும், கடையை காலி செய்யாதது ஏன் எனவும், இதை கேள்வி கேட்டால் காவல் துறையினரை வைத்து வழக்கு தொடர்வீர்களா எனவும், ஏன் இப்படி அடாவடி செய்கிறீர்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசு நிலம் என்றால் சட்டத்தை பயன்படுத்தும் போது, தனிநபர்களுக்கு சட்டம் இல்லையா எனக் கேட்ட நீதிபதி, சட்டத்தை அரசு கையில் எடுக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
பின்னர், சுந்தருக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி ரத்து செய்த நீதிபதி, குத்தகை காலம் முடிந்தால், கடையை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படியும், டாஸ்மாக் கடை வேண்டாம் என மக்கள் கூறினால், அந்த கடைகளை மாற்ற வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக கல்லாறு தோட்டக்கலை பண்ணையில், பொதுமக்கள் பார்வையிடுவது நிறுத்தப்பட்டு விட்டதாக, அதன் இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
யானைகள் வழித்தடமாகவும், வனவிலங்கள் அதிகம் நடமாடும் பகுதியாகவும் உள்ள கோவை கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை பண்ணையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் டி.மோகன் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கல்லாறு தோட்டக்கலை பண்ணைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, கல்லாறு அரசு தோட்டக்கலைத் துறையின் இயக்குநர் குமாரவேல் பாண்டியன், யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல், அதன் வழித்தடங்களில் செல்வதற்காக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், 21 ஏக்கரில் பரப்பளவில் உள்ள கல்லாறு தோட்டக்கலை துறையின் நிலத்தில் ஆராய்ச்சி தவிர வேறு எந்த பணிகளும் நடத்தப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து சூரிய சக்தி மின்வேலிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளதாகவும், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க அதி நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான டெண்டர் கோரும் பணிகள் நடந்து வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் தோட்டக்கலை தொடர்பான ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிறுவர் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு உபகரணங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியுடன் பொதுமக்கள் பார்வையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பதப்படுத்தப்பட்ட பழங்கள் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை முற்றிலுமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தேவையில்லாத கழிப்பிட கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் காலங்களில் எந்த கட்டுமானங்களும் தோட்டக்கலை பண்ணை இடத்தில் அமைக்கப்படாது என்றும் விவசாயிகள், தோட்டக்கலை ஆராயச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், கல்லாறு பகுதியில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இருக்கக் கூடாது என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே ஏன் என கேள்வி எழுப்பினர். அதேபோல் தோட்டக்கலை துறை பண்ணையில் காலியாக உள்ள 8 ஏக்கர் நிலத்தை என்ன செய்ய போகிறார்கள் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதன் பின் உத்தரவிட்ட நீதிபதிகள், கல்லாறு தோட்டக்கலைத் துறை இயக்குனரின் அறிக்கை தெளிவாக இல்லை என்றும் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் பரிந்துரையின் படி, தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 2 ஆம் தேதி தள்ளி வைத்தனர்.
தமிழகத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி, சிபிஐ அதிகாரி அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
சென்னையில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளையும், போதையில்லா தமிழ்நாடு என்ற இணையதளம் சார்ந்த செயலி துவங்கப்படுவது குறித்தும் விலக்கப்பட்டிருந்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக, போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதாக தெரிவித்தனர். மேலும், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் போதை பொருட்கள் சாதாரணமாக கிடைப்பதாகவும், இதனை கட்டுபடுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சட்ட பணிகள் ஆணையக் குழுவிற்கு உத்தரவிட்டனர்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் எந்த கடைகளும் அமைக்கக் கூடாது எனவும், போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருவரையும், சிபிஐ அதிகாரி ஒருவரையும், அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், சிறப்பு கண்காணிப்பு குழுவில் இடம்பெற உள்ள அதிகாரிகளின் விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சென்னையில் மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஹரிஹரன் என்ற மனநல மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளி தாக்குதல் நடத்தியுள்ளார்.
மருத்துவரை தாக்கிய நபர் திருவான்மியூரைச் சேர்ந்த பரத் (35) என்பது தெரியவந்துள்ளது. பரத் என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று மருத்துவர் ஆலோசனையின் பேரில் ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சைக்காக வந்து செல்கிறார்.
அந்த வகையில் இன்று சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனை வந்தபோது மருத்துவர் ஹரிஹரனை முகத்தில் குத்தி சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி உள்ளார். இதில் காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் பிரேமாவிற்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கடந்தாண்டு மே முதல் நவம்பர் மாதம் வரை, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஆனால், சிகிச்சையில் தகுந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவிதா என்ற தனியார் மருத்துவமனையில் 3 மாத சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை, வெளிநோயாளி பிரிவில் மருத்துவரை சந்திக்க 4 பேருடன் விக்னேஷ் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, புற்றுநோய் சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியிடம் சுமார் அரை மணிநேரம் விக்னேஷ் பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், தான் வீட்டில் இருந்து கொண்டு சென்ற கத்தியால், மருத்துவர் பாலாஜியின் இடது கழுத்தில் 2 முறை குத்தியுள்ளார். இதில், மருத்துவர் பாலாஜிக்கு ரத்தம் கொட்டியது.
படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேற முயன்ற விக்னேஷை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனாட்சி மகளிர் கல்லூரியில், இந்து மத குருவை வரவழைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாணவிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த தலையீடுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் மதம் சார்ந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது பெரும் சலசலப்பை கிளப்பியிருந்தது. பள்ளியின் சார்பில் ஆண்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு பேச்சாளராக மகாவிஷ்ணு அழைக்கப்பட்டிருந்தார். இவர் பரம்பொருள் பவுன்டேஷனை நடத்தி வரும் ஆன்மிக சொற்பொழிவாளராக அறியப்படுகிறார்.
அறிவியலையும், ஆன்மிக கருத்துக்களையும் இணைத்து, அதன் மூலம் பிற்போக்கு கருத்துக்களை பேசி ஏமாற்றி வருகிறார் என்று இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இப்படி இருக்கையில் மகாவிஷ்ணு பள்ளியில் பேசியதும் சர்ச்சையாகியிருந்தது. இதை தடுக்க முயன்ற பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் இவர் எதிர் கேள்வி கேட்டு முடக்கியிருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகியிருந்தது.
இதனையடுத்து மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தொடர்ச்சியாக மதம் சார்ந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அரசு தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
இப்படி இருக்கையில், தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் இந்து மத குருவை வரவழைத்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதனை எதிர்த்து இந்திய மாணவர்கள் சங்கம் (SFI) மறியல் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்துள்ளனர்.
அதாவது மீனாட்சி கல்லூரிக்கு அருகில் காளிகாம்பாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் நிகழ்ச்சி நடத்த பெங்களூரை மையமாக கொண்ட ஆசிரமத்தை சேர்ந்த ஸ்ரீ விதுஷேக்ரா பாரதி சுவாமிகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் கோயில் நிகழ்ச்சி முடிந்ததும், அவரை வைத்து கல்லூரியிலும் நிகழ்ச்சிகளை நடத்த நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, இன்றும் நாளையும் இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாணவிகள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
அப்படி பங்கேற்காவிடில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்றும் பேராசிரியர்கள் சார்பில் மிரட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாணவிகளை மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில், “மாணவிகள் அனைவரும் 12ம் தேதி ஆடிடோரியத்தில் ஒன்றுகூட வேண்டும். அங்கு வருகைப்பதிவு எடுக்கப்படும். அனைவரும் கட்டாயமாக வர வேண்டும் என செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நிகழ்ச்சி முடி தாமதமாகும் என்பதால் பெற்றோரை அழைக்க வர சொல்லி விடுகங்கள். வரவில்லை எனில் தேர்வு முடிவுகளை வெளியிட மாட்டார்கள். என்றோ ஒருநாள் தானே உங்களை அழைக்கிறார்கள். அன்று கூட உங்களால் வரமுடியவில்லை எனில் அப்புறம் என்ன? மற்ற மதத்தை சேர்ந்த மாணவிகள் காரணம் சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்து மதத்தை சேர்ந்த மாணவிகள் வரவில்லை எனில் நாளை அதன் பின் விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும்” என பேராசிரியை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு இந்த பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 67 தீவிர வானிலை நிகழ்வுகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு காலநிலை மாற்ற நிகழ்வுகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக, காலநிலை இந்தியா 2024 அறிக்கை தெரிவித்திருக்கிறது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு வெறும் 27 நாட்கள்தான் தமிழ்நாட்டில் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு வெப்பநிலை அதிகரிப்பு, கனமழை மற்றும் சூறாவளி போன்றவை அதிகரித்துள்ளன. இதனால் 25 மனித இறப்புகள், 14 கால்நடைகள் இறப்பு மற்றும் 149 வீடுகள் சேதமடைந்துள்ளன. மட்டுமல்லாது தமிழகத்தில் 1,039 ஹெக்டேர் அளவில் நெல், கரும்பு மற்றும் நிலக்கடலை பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளன.
கேரளாவிலும், கர்நாடகாவிலும் கூட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில்தான் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. தேசிய அளவில் பார்த்தால், 2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 274 நாட்களில் 255 நாட்களில் இந்தியா தீவிர வானிலையை அனுபவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான தீவிர காலநிலை பாதிப்புகளை விட இது அதிகமாகும்.
காலநிலை மாற்றம் என்றால் என்ன?: உலகம் வெப்பமயமாதலால் ஏற்படுகிறது. அதாவது பூமியின் சராசரி வெப்பத்தை விட அதிக வெப்பம் உருவாகும் போது அதை காலநிலை மாற்றம் என்று சொல்கிறோம். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக தொழில் வளர்ச்சி. 1900க்கு முன்பு பூமியின் வெப்ப நிலை எவ்வளவு இருந்ததோ, அது 1900க்கு பிறகு வேகமாக அதிகரிக்க தொடங்கியது. ஏனெனில் இந்த காலத்தில்தான் நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு உள்ளிட்டவை மூலம் புதிய தொழிற்சாலைகள் உருவாகின.
நிலக்கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு ஆகியவற்றை எரிப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு (CO₂), மீத்தேன் (CH₄), மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N₂O) போன்ற வாயுக்கள் வெளியாகின. இது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை வெளியேற்றாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. இது பனி உருகுவதற்கு காரமாகிறது. பனி உருகும்போது கடலின் மட்டம் அதிகரிக்கிறது. இது புயல்கள் மற்றும் மழை அளவை அதிகரிக்கிறது.
இதனால் ஏற்படும் வெள்ளம் உள்ளிட்டவை பயிர்கள், கால்நடைகள் உள்ளிட்டவற்றை அழிப்பதை மட்டுமல்லாது, புதிய நோய்கள் உருவாகவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.
இந்த பிரச்னையை சரி செய்யாவிட்டால், பூமியின் சுழற்சியில் கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும், குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவாகி மொத்த உலகமும் அழிந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு முன்னோடியாக இருந்துவிடக்கூடாது என்பது அனைவரின் கவலையாக இருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே பணக்கார பகுதி என்றால் அது சென்னை ஓஎம்ஆர் சாலை பகுதி தான். பழைய மகாபலிபுரம் சாலை பகுதி தான் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியாகும். பல லட்சம் பேர் வேலை செய்யும் 25 கிமீ நீளமுள்ள ஐடி காரிடர் பகுதியான ஓஎம்ஆர் பகுதியில் மோசமான சாலை, கழிவுநீர் இணைப்பு இல்லை, குடிநீர் இணைப்பு இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சென்னையில் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதி என்றால், பழைய மகாபலிபுரம் சாலை பகுதி தான். சென்னை அடையாறு தொடங்கி திருவான்மியூர், பெருங்குடி, கந்தன்சாவடி, தரமணி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், சிறுசேரி, நாவலூர், தாழம்பூர், கேளம்பாக்கம், படூர் என சென்னை ஓஎம்ஆர் சாலை அப்படியே திருப்போரூர் தாண்டி மகாபலிபுரம் வரை செல்கிறது. இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் எப்போதுமே காணப்படும்.
இதில் அடையாறு தொடங்கி கேளம்பாக்கம் வரை 25 கிலோ மீட்டர் தூரமுள்ள ஐடி கேரிடர் சாலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இணைப்பு சாலைகள் முறையாக இல்லை என்றும்,. சரியான கழிவு நீர் இணைப்புகள் இல்லை எனறும், தண்ணீர் இணைப்புகள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
பிரதான சாலையான ஓஎம்ஆர் சாலையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்ள நிலையில், அங்கு மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இந்த மெட்ரோ பணிகள் காரணமாக அங்கு சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகிறார்கள். சுங்கச்சாவடிகள் அமைத்து சுங்க கட்டணம் வசூலித்த காலம் வரை சரியாக பராமரிக்கப்பட்ட சாலைகள்,. இப்போது சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்ட பிறகு அங்கு சர்வீஸ் சாலைகள் சீரற்ற வகையில் மாறிவிட்டதாகவும், சாலைகள் மோசமான நிலையில் பாரமரிப்பு இன்றி உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்னை மெட்ரோ பணிகள், சென்னை குடிநீர் வடிகால் வாரிய பணிகள் மற்றும் எரிவாயு திட்ட பணிகள் காரணமாக வடிகால் கால்வாய்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும், புதிதாக தோண்டப்பட்ட கால்வாக்ள், சாலை பயணத்தை மிகவும் கடுமையாக்கி உள்ளதாகவும் ஓஎம்ஆர்வாசிகள் சொல்கிறார்கள். சென்னை மெட்ரோ, நெடுஞ்சாலைகள் துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளில் நடந்த பொறுப்பு மாற்றங்களால் ஓஎம்ஆர் சாலை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஓஎம்ஆர் குடியிருப்புவாசிகள் குமுறுகிறார்கள்.
இதுபற்றி நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஓஎம்ஆரை ஒட்டியுள்ள பகுதிகளில் இணைப்பு சாலைகள் மிக மோசமானதாக இருக்கிறது. குடிநீர் இணைப்பு இல்லை , கழிவுநீர் இணைப்பு இல்லை , ஆனால் ஓஎம்ஆர் குடியிருப்பு வாசிகள் மற்றும் அங்கு சொத்து வைத்துவர்கள் மட்டுமே சமமாக வரி செலுத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்களைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் கவலைப்படவில்லை என்றும் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், இது தான் ஓஎம்ஆர் சாலையின் அவல நிலை. சென்னையின் முக்கியமான வழித்தடங்களில் ஒன்று தான் ஓஎம்ஆர். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ள இந்த பகுதியின் நிலையைப் பாருங்கள். தமிழகத்தில் நகர்ப்புற நிர்வாகம் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது.. இதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல் மூன்றாவதாக நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், ஒவ்வொரு நாளும் நான் இந்த ஓஎம்ஆர் சாலையில் வண்டி ஓட்டுகிறேன். இது மோசமான சாலை, பள்ளங்கள் அதிகமாக உள்ளது. சர்வீஸ் சாலைகளும் மோசமான உள்ளது. இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதன் காரணமாக தினசரி சில சிறிய விபத்துக்கள் நடக்கின்றன. ஓஎம்ஆர் சாலை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு இது மிகவும் ஆபத்தான சாலையாக உள்ளது. தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்.
அடுத்தாக நெட்டிசன் வெளியிட்ட பதிவில், ஓஎம்ஆர் சாலை என்பது சென்னையின் தகவல் தொழில்நுட்பக் கூட்டத்தின் உயிர்நாடியாக இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் அந்த பகுதியை பார்ப்பதற்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. சென்னை நகரத்தின் தேவைகளுக்கு ஏற்ப நகர்ப்புற நிர்வாகத்தில், இப்போது ஒரு தீவிரமான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. நகரம் எதிர்காலத்தில் வேகமாக வளரும் போது , உள்கட்டமைப்பும் வளர வேண்டும். ஆனால் அப்படியே பழைய காலம் போலவே சிக்கி இருப்பது போல் உள்ளது. நமது தலைவர்கள் கவனத்தில் கொண்டு விரைந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம். ஒரு வேளை, அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தவும் பராமரிக்கவும் ஒரு சமூகம் சார்ந்த முயற்சியைத் தொடங்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமி அதிமுக தோல்வி குறித்து, 2026-ல் எப்படி வெற்றி பெறலாம் என்பது குறித்து ஒரு புள்ளிவிவரத்துடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தி வெற்றிவாய்ப்பை தவறவிட்ட தொகுதிகள். சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள்
மொத்தமாக 1,11,879 வாக்குகள் வித்தியாசத்தில் 14 தொகுதிகள் இழப்பு
மொத்தமாக 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழ் 43 தொகுதிகளில் 1,98,369 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியை இழந்திருக்கிறது. 2021-ல் ஆட்சி அதிகாரம் இருந்தும் இப்படிப்பட்ட தோல்வி ஏற்பட்டுள்ளது.
அதிமுக தொண்டர்கள் பரிசோதித்து பார்க்க வேண்டும் இந்த 43 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும், எடப்பாடி பழனிசாமி என்கிற தனிநபரின் சுயநலம் தான் மட்டுமே அதிமுக என்று நிலைநிறுத்த முயற்சிப்பது, தன் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்படவேண்டும் என்பது, விட்டுக்கொடுத்து அனுசரித்து அனைவரையும் அரவணைத்து செல்லுகிற பண்பு இல்லாத காரணத்தால் 2021-ல் ஆட்சியை இழந்தோம்.
அதை உணர்ந்து தான் ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும் என்று முயற்சித்து ஒருங்கிணைப்புக்குழு செயல்பட்டு வருகிறது. 2026-லாவது அதிமுக ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பேராசிரியர்கள் தேர்வு தொடர்பாக விதிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் போராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், சட்டக் கல்லூரிகளில் காலியாக இருக்கும்…