ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி.. வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழப்பு!


வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊர் புறப்பட்டுள்ளார். கோவை – திருப்பதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணத்தை தொடங்கிய அவர், மகளிர் பெட்டியில் இருந்திருக்கிறார். ஜோலார்பேட்டை அருகே ரயில் சென்ற போது, திடீரென இளைஞர் ஒருவர் ரயிலில் ஏறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் மகளிர் பெட்டியில் இருந்த அனைவரும் அந்த ரயில் நிறுத்தத்தில் இறங்கிவிட்ட நிலையில், கர்ப்பிணி பெண் மட்டுமே தனியே இருந்திருக்கிறார். இதனையடுத்து ரயிலில் ஏறிய இளைஞர், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக செயினை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் கர்ப்பிணி பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அந்த இளைஞர் கதவிற்கு அருகே சென்றுள்ளார். அப்போது கீழே விழுந்துவிடக் கூடாது என்று கர்ப்பிணி கவனம் கொள்ள, அவரின் கைகளை உடைத்து இளைஞர் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதன்பின் அருகில் இருந்தவர்களால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்பின் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கேவி குப்பம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட பேட்டி ஒளிபரப்பாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஹேமராஜ் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனிடையே கைதான ஹேமராஜ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

தேசிய மகளிர் ஆணையம் தரப்பில் தமிழக டிஜிபி-யிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் கோவை – திருப்பதி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் நலமாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. காயமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இதன்பின் ரயில்வே அதிகாரிகள் கர்ப்பிணி பெண்ணை சந்தித்து நிவாரண உதவியை வழங்கினர்.

இந்த நிலையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின், அறுவை சிகிச்சை மூலமாக இறந்த சிசுவை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
Share on:

தாம்பரம் அருகே லஞ்சத்தை தந்து, கையோடு கால் டாக்ஸி டிரைவர் பார்த்த வேலை.. ஆடிப்போன போலீஸ்காரர்கள்


அரசு ஊழியர்கள் அல்லது போலீசார் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அவர்களது உயர் அதிகாரிகள் கண்டிப்பாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்.. ஒழுங்கு நடவடிக்கை என்பது பணியிடை நீக்கமாகவே இருக்கும். கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை உள்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை, உயர்கல்வித்துறை, பள்ளிகல்வித்துறை என எந்த அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினால் சிறை தண்டனை உறுதி..

அதேநேரம் பொதுமக்கள் யாரிடமாவது லஞ்சம் வாங்கியது அவர்களின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியவந்தால், அந்த ஊழியர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையை உயர் அதிகாரிகளால் எடுக்க முடியும். அதேபோல் பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு உள்ளது. காவலர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். காவலர்கள் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அவர்களை சஸ்பெண்ட் செய்ய முடியும். குறைந்தபட்ச தண்டனையாக ஆயுத படைக்கும் மாற்ற முடியும்… இல்லாவிட்டால் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய முடியும்.

அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரின் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்கள் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் கன்னிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கன்னிவாக்கம் பகுதியில் கால் டாக்சியை ஓரமாக நிறுத்திவிட்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த டிரைவரிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் விசாரித்த போது அவர் மது குடித்த நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து 2 காவலர்களும், உன் மீது வழக்கு போடாமல் இருப்பதற்கு ரூ.1,500 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு கால் டாக்சி டிரைவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினாராம்.. ஆனால் 2 காவலர்கள் டிரைவரிடம் ‘கூகுள் பே’ வில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் ரூ.2 ஆயிரம் இருக்கும் என்று கூறினாராம். அந்த 2 போலீஸ்காரர்களும் உடனடியாக நாங்கள் சொல்லும் ‘கூகுள் பே’ எண்ணுக்கு ரூ.1,500 அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவலர்கள் கூறிய எண்ணுக்கு ரூ.1,500-ஐ ‘கூகுள் பே’ மூலம் அனுப்பியிருக்கிறார். இதை தொடர்ந்து அங்கிருந்து 2 காவலர்களும் சென்று விட்டனர்.

இது சம்பந்தமாக கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவங்கள் பற்றி கூறினாராம். இந்த விவரம் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக்கின் கவனத்திற்கு வந்தது. அவர் சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். உயர் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் கால் டாக்சி டிரைவரிடம் இருந்து மற்றொரு நபரின் ‘கூகுள் பே’ எண் மூலம் 2 காவலர்களும் ரூ.1,500 லஞ்சமாக பெற்றது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து ‘கூகுள் பே’ மூலம் ரூ.1,500 பெற்ற செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் அதிரடியாக உத்தரவிட்டார்.
Share on:

அரசு ஊழியர்களை விடுங்க, மதுரை மேலூர் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் எங்கே? பட்ஜெட் ERROR வருதாமே


அரசுப் பள்ளிகளைப்போல அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வரும்நிலையில், இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள். மதுரையிலிருந்து இப்படியொரு புலம்பல் வெடிக்க துவங்கியிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

தமிழகம் முழுவதிலும், அரசுப் பள்ளிகளைப்போல அரசு உதவி பெறும் பள்ளிகள் பல செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக மாதத்தின் கடைசி நாளில் ஒவ்வொரு ஆசிரியரின் வங்கிக் கணக்கில் மாத ஊதியம் வரவு வைக்கப்படும்.

அரசு பள்ளி: அதன்படி, ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியலை நிதித்துறையின் IFHRMS என்ற வெப்சைட்டில் தலைமையாசிரியர்கள் அப்லோடு செய்வார்கள். இதை 16-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை இப்படி பதிவேற்றம் செய்யப்படும்..

ஆனால், சிலசமயம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப் பட்டியலைப் பதிவேற்றம் செய்ய முடியாமல் போய்விடுவதாக கூறுகிறார்கள். டிஜிட்டல் தளத்தில் பிரச்சனையா? அல்லது அரசு நிதியே ஒதுக்கவில்லையா? என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பிவிடுகிறார்கள்.

சம்பள பிரச்சனை: எது எப்படியோ, மாத மாதம் ஊதியம் வந்தால்தான், குடும்பத்தை சமாளிக்க முடியும் சூழலில், ஆசிரியர்கள் உள்ளனர்.. அதிலும், இந்த சம்பளத்தை நம்பி, சிலரால் இஎம்ஐ செலுத்த முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுவிடுகிறது.

சிலசமயம் எதிர்பாராத மருத்துவச்செலவுகளும் வந்துவிடுகின்றன.. இதுபோன்ற செலவுகளுக்கு, மாத ஊதியம் சரியாக வந்தால்தான், சமாளிக்க முடியும் என்கிறார்கள். 2 வருடங்களுக்கு முன்பு, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த பிரச்சனை வெடித்திருந்தது.. இதற்கு பிறகு இப்படியொரு பிரச்சனைகள் எழுவது குறைந்துள்ளதாகவே தெரிகிறது.

மதுரை மேலூர்: ஆனால், தற்போது, மதுரை மேலூர் கல்வி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஜனவரிக்குரிய சம்பளம் கிடைக்கவில்லை என ஆசிரியர்கள் புலம்ப துவங்கியிருக்கிறார்களாம். மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளிகளில் 1200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லையாம்..

வழக்கமாக சம்பளத்திற்கு முன்பே ஆசிரியர்களின் சம்பள பில் உள்ளிட்ட ஆவணங்கள் அதற்குரிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யப்படும். அந்தவகையில், இப்போதும் முறையாக பில்கள் பதிவேற்றம் செய்தும் ஆசிரியர்களுக்கு ஒருவாரம் ஆகியும் சம்பளம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

கோரிக்கை: பள்ளிகளுக்கான ஐடி மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், “பட்ஜெட் எரர்” என்று வருகிறதாம்.. இதுகுறித்து சம்பந்தப்பட்ட டிஇஓ அலுவலகத்தில் முறையிட்டதையடுத்து, 20 பள்ளிகளுக்கு சம்பளம் கிடைத்துள்ளது.. ஆனால் இன்னும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. என்பதால், இந்த தொழில்நுட்ப பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கண்டு, சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share on:

தடதடக்கும் தாம்பரம்.. ஒரே நாளில் பெண் காவலர் உள்ளிட்ட 8 பேரிடம் செயின் பறிப்பு


தாம்பரம் அருகே ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு தாம்பரத்தில் நேற்று ஒரே நாளில் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்திரா என்ற பெண் காவலர் நேற்று இரவு 9.40 மணியளவில் தன் பணியை முடித்துவிட்டு முடிச்சூரில் உள்ள தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தேவராஜா சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்நோக்கி இரண்டு இளைஞர்கள் சென்றனர். ஒரு இளைஞர் நடந்தும், மற்றொரு இளைஞர் பைக்கிலும் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

இந்திரா வீட்டுக் கதவை திறந்து கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் தாமதமானது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இளைஞர்கள் இந்திராவின் ஐந்து சவரன் தங்க செயினை பறித்து நொடிப் பொழுதில் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த காவலர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதேபோல தாம்பரம் ரயில்வே மைதானத்தில் பொருட்காட்சியை பார்வையிட வந்த ஒரு பெண்ணிடமும் தங்க செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில் செயின் பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.

இதுகுறித்து எட்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் தாம்பரம் சுற்றுவட்டார பகுதி பெண்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாம்பரம் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்துக்குட்பட்ட காவலர்கள் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில் அனைத்து காவலர்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாலை வரை அந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அதில் தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து காவல்நிலைய காவலர்களும் கலந்து கொண்டனர். அதை நன்கறிந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தெரிந்து கொள்ளையர்கள் பைக்கை சாலையோரமாக நிறுத்தி சென்றது தெரியவந்துள்ளது.

காவலர்கள் அந்த பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் கல்லூரி பொறியாளரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share on:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நிறைவடைந்த வேட்பு மனுத்தாக்கல்.. மொத்த எண்ணிக்கை எவ்வளவு?


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தமாக 65 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கவுள்ளது.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், 2023ஆம் ஆண்டு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்ற நிலையில், கடந்த ஆண்டு திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்.8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விசி சந்திரகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. பின்னர் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி வேட்பாளராக அறிவித்தார்.

இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 65 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கவுள்ளது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாக வரும் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தமாக 93 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதில் 6 பேர் திரும்ப பெற்ற நிலையில், 38 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மொத்தமாக 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
Share on:

சட்டமன்ற விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய முக்கிய கருத்துக்கள்- லிஸ்ட் போட்டு அடித்த கே.சி.பி


1.) “மக்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே விடியல் ஆட்சியின் சாட்சி” என முதல்வர் கூறுவதை கேட்டால் “துன்பம் வரும் வேளையில் சிரி” என்று கூறும் வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது.

“விடியலின் அடையாளம் எது தெரியுமா நான் செல்கிற இடமெல்லாம் கூடுகிற மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி தான்.” எனக்கூறுகிறார் முதல்வர். ஆனால் அவர் செல்லுகிற இடமெல்லாம் மக்கள் தானாக கூடுவதில்லை. திமுகவினர் பணம் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள், அதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி தான் என்பது முதல்வருக்கு எப்பொழுது தெரிய போகிறது.

2.) “பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி” என்றீர்களே அலங்கோல ஆட்சிக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?

“மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்கு ஸ்டாலின் பஸ் என்றே பெயர் வைத்துவிட்டார்கள்” என்று கூறுகிறீர்கள். அதேபோல் ஸ்டாலின் டாஸ்மாக் பட்டி தொட்டி எங்கும் பரவி இருக்கிறதே, ஸ்டாலின் ஆட்சியில் கஞ்சா, குட்கா, Cool Lip போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் தமிழகம் முழுவதும் சர்வ சாதாரணமாக உள்ளது பள்ளிகள் வரை பரவியுள்ளது. அதை தடுக்க வேண்டியது ஸ்டாலின் நிர்வகிக்கிற காவல்துறையின் கடமை தானே.

3.) “மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுக்கிற புதுமை பெண் திட்டத்தின் மூலமாக கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 30% அதிகரித்து இருக்கிறது” என்று கூறுகிறீர்கள். மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பது வரவேற்க தகுந்த திட்டம் தான். ஆனால் அதற்காக தவறான தரவுகளை வெளியிடக் கூடாது. கடந்த 5 ஆண்டுகள் பெண்கள் கல்லூரியில் சேர்ந்த விகிதத்தை பட்டியலாக வெளியிட்டு எப்படி 30% அதிகரித்துள்ளது என்பதை காட்டுங்கள். மேலோட்டமாக பார்த்தால் இது தவறான தகவல் போல் தெரிகிறது.

4.) “இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது” இப்படி ஒரு பொய்யை சொல்வதற்கு உங்கள் மனம் துளியும் உருத்த வில்லையா? தமிழகத்தில் அதிகப்படியிலான பெண்கள் வன்கொடுமை, சட்ட ஒழுங்கு சீர்கேடு உங்கள் ஆட்சியில் தான் ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்க வாய் கூசாமல் எப்படி உங்களால் இப்படி சொல்ல முடிகிறது?

5.) “வரம்புகளுக்கு உட்பட்டு தான் தமிழ்நாடு அரசு கடன் வாங்கி உள்ளது” என்று கூறுகிறீர்கள் ஆனால் கடன் வாங்கப்பட்ட பணம் எங்கு செலவு செய்யப்பட்டுள்ளது? அதனால் மக்கள் பலனைடைந்துள்ளார்களா அல்லது உங்கள் அமைச்சர்கள் பலனைடைந்துள்ளார்களா?

6.) “டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு வழிவகுத்தது அதிமுக தான்” என சொல்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் தான் இப்படியே அடுத்தவர்கள் செய்த தவற்றை சொல்லி உங்கள் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிப்பீர்கள்? நீங்கள் தானே இன்றைக்கு ஆளும் கட்சி. எடப்பாடி பழனிசாமியின் பலவீனத்தால் தான் நீங்கள் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறீர்கள் உங்கள் பலத்தில் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

7.) ” தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.” என்று சொல்கிறீர்கள். நீங்கள் தமிழகத்தில் இன்று வரை ஆட்சிப் பொறுப்பேற்று 1321 நாட்கள் தான் ஆகிறது. அதிலேயே 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக சொல்கிறீர்கள். அப்படி என்றால் ஒரு நாளுக்கு சராசரியாக 75 போராட்டங்களை நீங்கள் அனுமதித்திருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் அனுமதிக்காத போராட்டங்கள் ஏராளம். இந்த ஒரு உண்மையே உங்கள் ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளுக்கும், அவலங்களுக்கும் சாட்சி என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை. மக்கள் என்ன மகிழ்ச்சி வெள்ளத்திலா போராட்டம் நடத்துகிறார்கள்? தங்கள் எதிர்ப்பை இந்த அரசாங்கத்திற்கு தெரிவிக்கத்தானே போராட்டம் நடத்துகிறார்கள்.
Share on:

போலீஸ் ஸ்டேசனிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! கல்வீசி தாக்கியதில் போலீஸ் காயம்! பரபரத்த தேனி.


தேனியில் போதைப் பொருள் நுண்ணறிவு காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து ஏர்கன், 24 செல்போன்கள், கஞ்சா ஆயில் உட்பட ஏராளமான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிர்ச்சியாக கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்லும் போது பிடிக்க முயன்ற முதல் நிலை காவலர் மீது கல்வீசி தாக்கப்பட்டதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் தேனி சமதர்மபுரத்தில் போதைப் பொருள் நுண்ணறிவு காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, செல்போன்கள், வாகனங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று காவலர்கள் வழக்கமான ரோந்து பணிக்கு சென்றிருந்த நிலையில் காவல் நிலையம் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் இரண்டு கொள்ளையர்கள் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த இரவு காவல் பணியில் இருந்த முதல் நிலைக் காவலர் முருகேசன் என்பவர் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து அவர்களை சோதித்த போது, அவர்களிடம் ஏர்கன், செல்போன்கள் என ஏராளமான பொருட்கள் இருந்ததால் விசாரணைக்காக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். அப்போது இரண்டு பேரும் அவரை தள்ளி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். இதனையடுத்து கொள்ளையர்களை காவலர் பிடிக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிய நிலையில், பின்னால் துரத்திச் சென்று பிடிக்க முயன்ற போது, இருவரும் சேர்ந்து முருகேசன் மீது கல் வீசி தாக்கியதில் முருகேசனின் தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் என்பவரிடம் முருகேசன் நடந்ததை கூறிய போது, இருவரும் சேர்ந்து துரத்தியதில் கொள்ளையர்களில் ஒருவர் பிடிபட்டார்.

இதனைத் தொடர்ந்து கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில், அவன் பெயர் நிதீஷ் குமார் (23) என்பதும் பண்ணைப்புரம் வடக்குத் தெருவை சேர்ந்தவன் என்பதும், அவனுடன் சேர்ந்து கொள்ளையடித்த மற்றொருவன் கோம்பையைச் சேர்ந்த உதயகுமார் (24) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து 24 செல்போன்கள், ஒரு ஏர்கன், இரண்டு கேமராக்கள், மைக் கேமரா ஒன்று, ஒரு பைனாக்குலர், வெள்ளை பவுடர், கஞ்சா ஆயில் 650 ML, 50 கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உதயகுமார் தப்பி ஓடிய நிலையில், நிதிஷ்குமாரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த முருகேசன் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக பிடிபட்ட குற்றவாளி நிதீஷ்குமார் தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து ஏர்கன் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்ததுடன், போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர்.
Share on:

இந்தி தேசிய மொழி அல்ல.. அது அலுவல் மொழி தான்.. சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு!


இந்தியாவில் இந்தி தேசிய மொழி அல்ல என்றும், அது அலுவல் மொழி மட்டுமே என்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஸ்வின், இனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். ஃபேர்வெல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கூட அளிக்கப்படாமல் அஸ்வின் ஓய்வு பெற்றது தமிழக ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் ஐபிஎல் போட்டியில் மறக்க முடியாத ஃபேர்வெல்லை கொடுப்போம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரர் அஸ்வின் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகள், 3,503 ரன்களை விளாசியுள்ள அஸ்வின், ஒருநாள் கிரிக்கெட்டுஇல் 156 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஸ்ரீகாந்த், முரளி விஜய் ஆகியோருக்கு பின் தமிழ்நாட்டில் இருந்து அஸ்வினால் மட்டுமே இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடிந்தது.

அதேபோல் சர்வதேச அளவில் அறிவுப்பூர்வமான கிரிக்கெட் வீரர்களில் அஸ்வினுக்கு நிகர் அஸ்வின் மட்டும் தான். அந்த அளவிற்கு ஒவ்வொரு மைதானம், ஒவ்வொரு பேட்ஸ்மேன், கிரிக்கெட்டின் வரலாறு, கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான தகவல் என்று அனைவரும் வியக்கும் அளவிற்கு தகவலை வைத்திருப்பவர். இதனால் அஸ்வின் விரைவில் பயிற்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓய்வுக்கு பின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வரும் அஸ்வின், சில தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இன்று காஞ்சிபுரத்தில் உள்ல ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 23ஆம் ஆண்டு பட்டமளிப்பு நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

அதன்பின் அஸ்வின் பேசுகையில், மாணவர்களை பார்த்து ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி என்று கேள்வி கேட்டார். அதற்கு ஆங்கிலத்திற்கு ஓரளவிற்கு சத்தம் வந்தது. பின்னர் தமிழ் மொழி என்று கேட்ட போது அரங்கமே அதிர்ந்தது. இறுதியாக இந்தி என்று கேட்ட போது, எந்த சத்தமும் வரவில்லை. அப்போது அஸ்வின், இந்தி நமது தேசிய மொழி அல்ல.. அது வெறும் அலுவல் மொழி மட்டும் தான்.

இதனை பகிர்ந்து கொள்ள நினைத்தேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அஸ்வின், நான் கேப்டனாக இல்லாததற்கும் பொறியியல் தான் காரணம் என்று கூறினார். அதேபோல் என்னை பார்த்து யாராவது நீ அந்த விஷயத்திற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறினால், நான் அதை மட்டுமே செய்வேன். கேப்டன்சி விஷயத்தில் யாரும் இதுவரை என்னை பார்த்து அப்படி சொல்லவில்லை என்று தெரிவித்தார்.
Share on:

டங்ஸ்டன் எதிர்ப்பு விஸ்வரூபம்- 20 கிமீ நடந்து சென்று மதுரையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள்!


மேலூர் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 கிமீ நடந்து சென்று மதுரை கோரிப்பாளையம்- தமுக்கம் மைதானம் சாலையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலூர் நரசிங்கப்பட்டியில் இருந்து நடைபயணமாக சென்று ஆயிரக்கனக்கான மக்கள் மதுரையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட இடங்களில் மலைப் பகுதிகளை அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஏலம் விடும் வரையில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என மத்திய அரசு குற்றம்சாட்டி இருந்தது. இந்த நிலையில் டஸ்ங்டன் சுரங்க ஏலத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனாலும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக மத்திய அரசு கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அரிட்டாபட்டி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மேலூரில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

அத்துடன் நரசிங்கப்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுமார் 20 கிமீ நடந்து மதுரை மாநகரை வந்தடைந்தனர். மதுரையில் தமுக்கம் சாலையில் தலைமை தபால் நிலையம் முன்பாக அமர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்; டங்ஸ்டன் சுரங்க அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை நடத்தியதால் மதுரையிலும் பதற்றம் உருவானது. மதுரையின் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 4 மாவட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் இந்தப் போராட்டம் கைவிடப்பட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
Share on:

சென்னையிலும் நுழைந்தது HMPV வைரஸ்- 2 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி! நாடு முழுவதும் 5 பேர் பாதிப்பு!


உலகை அச்சுறுத்தி வரும் சீனாவின் HMPV வைரஸ் சென்னையில் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் 2 , குஜராத்தில் 1 குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளையே பெரும் துயரத்துக்குள்ளாக்கியது. பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக் கூடிய ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் HMPV என்ற புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளாமலேயே குழந்தைகளைத் தாக்கக் கூடியதாக இருக்கிறது HMPV வைரஸ்.

இந்தியாவிலும் HMPV வைரஸ் பாதிப்பு தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் முதலில் கர்நாடகா மாநிலத்தில் 3 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து 8 மாத குழந்தைக்கும் கண்டறியப்பட்டது. இதேபோல குஜராத்தில் ஒரு குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில் சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்புடன் வந்த 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த HMPV வைரஸ் பாதிப்பு முற்றினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளைப் போல முதியவர்களையும் HMPV வைரஸ் தாக்கக் கூடியது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Share on: