எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் என்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்து பிரதமர் வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கு பதில் இல்லாததன் வெளிப்பாடா ?


எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் என்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்து பிரதமர் வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கு பதில் இல்லாததன் வெளிப்பாடா ? அல்லது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படுத்தும் யுக்தியா?

அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் அம்மாவை ஒரு தேசிய தலைவராகவும், பிரதம அமைச்சருக்கு தகுதியான தலைவராகவும் பார்த்தார்கள். அதற்குரிய திறமை, செல்வாக்கு ஆளுமைத்திறன் அவரிடம் இருந்தது. ஆனால் எடப்பாடி பற்றி பேசும் பொழுது எந்த ஒரு இந்திய பிரஜையும் தலைவர் ஆகலாம் என்கிற தகுதி மட்டுமே முன்வைக்கப்படுகிறது. ஆனால் அது மட்டுமே தகுதி அல்ல. இதுபோன்ற பிரச்சாரங்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் பாரம்பரிய வக்குவங்கியை குறைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. #EPS முதல்வர் ஆக இருந்தபொழுதும் கூட கட்சியும் ஆட்சியையும் அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எந்த தேர்தலிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அப்படி இருக்கையில் EPS-ன் எதிரிகள் அவரை வீழ்த்துவதற்கு உண்டான ஆயுதமாக தான் இதனை பார்க்க முடிகிறது .

மோடியா? லேடியா? என்று சந்தித்த 2014-தேர்தலுக்கு பிறகு வழக்குகளின் கடுமை தன்மையால் அம்மாவிற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.தேசிய அளவில் EPS- க்கு என்ன பார்வை இருக்கின்றது?

சமீபத்தில் கூட ஆரியம் #திராவிடம் என்னவென்று எனக்கு தெரியாது .அது எல்லாம் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தான் தெரியும் என்று சொன்ன அறிவாளி தான் EPS.

ஆனால் ஒன்று மட்டும் நடக்கும்.அவர் பிரதமர் ஆனால் ஒவ்வொரு MP-க்கும் மாதம் ஒரு கோடி கொடுத்து அவர்களை நன்றாக கவனித்து கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பார். இந்த ஒரு திறமையை தவிர அவரிடம் கருத்தியல் ரீதியாகவோ , ஆளுமை தன்மை ரீதியாகவோ, ஆட்சி அதிகார ரீதியாகவோ எந்தவொரு திறமையும் இருப்பதாக தெரியவில்லை.

பிரதமர் யார் என்று முடிவு செய்கின்ற இடத்தில் அதிமுக இருக்கும் என்பதுதான் சரியான நிலைப்பாடாக இருக்குமே ஒழிய, நான் தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி ஓட்டு கேட்கும் பொழுது அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வாங்கியே குறைந்து போய்விடும். இப்படித்தான் எடப்பாடியின் அடிவருடிகள் எல்லா தலைவர்களையும் முதலில் புகழ்வார்கள். அப்படி புகழ்ந்து பேசினால் புகழ்ச்சி அடைபவர்களுக்கு ஆபத்து நெருங்கிக்கொண்டு வருகிறது என்று அர்த்தம்.

இதனை உணர்ந்து கொண்டு அதிமுகவின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் .
Share on:

மோசமான நிலையில் தள்ளாடும் அரசு போக்குவரத்து கழகங்கள்.


தமிழக அரசு போக்குவரத்து கழகம் தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடந்த 2022 – 2023-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டவுன் பஸ்களை இயக்கிவருகிறது. விரைவு போக்குவரத்துக்கழகம், சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் எஸ்இடிசி (விரைவு பேருந்து) பேருந்துகளை இயக்கி வருகிறது.

லாப நோக்கமின்றி ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 2022-23ம் ஆண்டு நிலவரப்படி 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.70 கோடி பேர் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள், பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 35 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் கட்டணமின்றி பயணிக்கிறார்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 55 லட்சம் பெண்கள் பயணிக்கிறார்கள். இதுதவிர 40 லட்சம் பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு சிறப்பு திட்டங்கள் காரணமாக இலவமாக மக்கள் பயணிக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன

இதுபற்றி தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. “2022 – 2023-ம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், இயக்கம் மூலம் ரூ.6,705.69 கோடியும், இயக்கம் அல்லாதவைகள் மூலம் ரூ.5,256.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்த கால கட்டத்தில் ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,978.38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 வருடத்திற்கு முன்பு அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் போக்குவரத்து கழகங்களின் வருவாய் இழப்பு சற்று குறைந்த நிலையில், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், மூலப்பொருட்கள் விலை உயர்வால் தற்போது கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.அரசு பஸ்களில் தினமும் பொதுமக்கள் பயணம் செய்வதன் மூலம் ரூ.25 கோடி வருவாய் கிடைத்தாலும் செலவு அதைவிட அதிக அளவில் உள்ளது,.

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான் நஷ்டம் கணிசமாக குறையும் என்று போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர். ஏழை எளியோருக்காக இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதே போக்குவரத்து கழக ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போதைய நிலையில் புதிய பேருந்துகள் வாங்கினால் தான் மக்கள் பலர் அரசு பேருந்துகளில் பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அப்போதுதான் வருவாய் அதிகரிக்கும் என்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகிறார்கள். அரசு தான் அதிக அளவில் புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நஷ்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Share on:

கத்தாரில் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை.. ஏன் தெரியுமா?


இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் கத்தார் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிறுவனம், ஓமன் நாட்டின், ராயல் ஓமானி விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு சொந்தமானது. இந்த நிலையில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 8 பேரும் கத்தார் நாட்டின் அதிநவீன நீர் மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தண்னீருக்குள் சென்றுவிட்டால் எதிரி நாட்டினரால் கண்டுபிடிக்க முடியாதது போல் நவீன முறையில் அந்த நீர்மூழ்கி கப்பல் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பம்சம் கொண்ட அந்த நீர்மூழ்கி கப்பல் குறித்து இந்தியர்கள் 8 பேரும் உளவு பார்த்து இஸ்ரேல் நாட்டுக்கு கூறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர்களையும், அந்நிறுவனத்தின் உரிமையாளரையும் கத்தார் நாட்டு உளவுத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர் கடந்த காண்டு நவம்பரிலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார்.

ஆனால் இந்தியர்களின் ஜாமின் மனுவை மட்டும் பல முறை தள்ளுபடி செய்த கத்தார் அதிகாரிகள், அவர்களது காவலையும் தொடர்ந்து நீட்டித்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இதையறிந்த இந்திய அரசு சட்ட உதவிகள் செய்து இந்தியர்கள் 8 பேரையும் தாயம் அழைத்துவரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த சூழலில், இவ்வழக்கில் இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பைத்துள்ளது கத்தார் நீதிமன்றம்.

கத்தாரில் சிறை வைக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், “விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அந்த 8 பேரின் குடும்பத்தினருடனும் சட்டக் குழுவினருடனும் தொடர்பில் இருக்கிறோம். இந்த வழக்கில் அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்குவோம். அது போல் தூதரக உதவிகளும் அவர்களுக்கு கிடைக்கும். இந்த தீர்ப்பு குறித்து கத்தார் நாட்டு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துவோம்” என தெரிவித்துள்ளது.
Share on:

8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை!


வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இவர்கள் 8 பேரும் கத்தார் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக கத்தார் அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுடைய கைது குறித்து கத்தார் அரசு எந்த அறிக்கையையும் இந்திய அரசுக்கு அனுப்பவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் உளவு பார்த்ததாக 8 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு கத்தார் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வந்தது. இதன் விசாரணைகள் முடிவடைந்து இந்த மாத இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் கத்தார் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த 8 பேரின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களை விடுவிக்க தேவையான சட்ட உதவிகளை செய்வோம். கத்தார் அதிகாரிகளுடன் இந்த தீர்ப்பு குறித்து முறையிடுவோம். இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share on:

ஆளுநரை விமர்சிக்கத் தயங்குகிறாரா? அல்லது மத்திய பாஜகவை எக்காரணம் கொண்டும் எதிர்த்துப் பேசிவிடக்கூடாது என்று நினைக்கிறாரா?


ஆரியம்,திராவிடம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது அந்த அளவுக்கு தனக்கு அறிவு இல்லை. இதுபற்றி பேசிய ஆளுநரிடமே விளக்கம் கேட்டுக்கொள்ளுங்கள்.என்கிற எடப்பாடி பழனிசாமி பேச்சு பல முன்னாள் அமைச்சர்களின் மீதான வழக்குகளுக்கு அனுமதி கோரி கோப்புகள் ஆளுநரின் கையெழுத்துக்கு இருப்பதால் ஆளுநரை விமர்சிக்கத் தயங்குகிறாரா? அல்லது மத்திய பாஜகவை எக்காரணம் கொண்டும் எதிர்த்துப் பேசிவிடக்கூடாது என்று நினைக்கிறாரா?

லஞ்சம்,ஊழல்,சட்டம் ஒழுங்கு எல்லா காலத்திலும் எல்லா அரசாங்கத்தின் மீதும் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு தான் ஆனால் சித்தாந்த அரசியலே இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைக் கவர்வதற்கும் கட்சியை வலுப்படுத்துவதற்கும் கொள்கை ரீதியாக முன்னிறுத்தப்படும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சட்டமன்றத்தில் அதிமுக ஒரு திராவிட கட்சி திராவிட சித்தாந்தங்கள் அடிப்படையில் செயல்படும் என்று பதிவுசெய்தார். ஜெயலலிதா அம்மா அவர்கள் தான் பிராமணராக இருந்தாலும் திராவிட கட்சிக்குத் தலைமை ஏற்றுத் திராவிட வழியில் பயணிக்கிறேன் என்று கூறி திராவிட சித்தாந்தங்களின் வழியில் இந்த இயக்கத்தை நடத்தினார். சில நேரங்களில் அந்த சித்தாந்தங்களிலிருந்து விலகிய பொழுது அதிமுக தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சித்தாந்தமே எனக்குத் தெரியாது என்று சொல்லுகிறவர் இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பிற்குத் தகுதியானவர் தானா? அரசியலில் மொத்தமாகப் பணம் சேர்த்து அதைப் பங்கிட்டுக் கொடுப்பதன் மூலமாகவே ஒரு அரசியல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வரமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறாரா?

இன்றைக்குப் பல குறைபாடுகளைக் கடந்து திமுகவும்,பாஜகவும் இந்துத்துவா VS திராவிடம் என்கிற சித்தாந்த மோதலை முன்வைத்து தமிழக அரசியல் மற்றும் தேர்தல் களத்தைக் கட்டமைக்கிறார்கள். நாம் பயணிக்கிற பாதை எது என்று தெளிவாக நாட்டு மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் தெரிவிக்கவேண்டிய தலைமை பொறுப்பிலிருந்துகொண்டு தனக்கு அவ்வளவு அறிவில்லை அதுகுறித்து ஆராய்ச்சிதான் செய்யவேண்டும் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறவர் தலைமையில் அதிமுக மீண்டும் வலுப்பெறுமா? பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க,திமுகவை எதிர்த்து வெற்றிகொள்ள அதிமுக தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது.
Share on:

ஆவடியில் தடம்புரண்ட மின்சார ரயில்!


சென்னை ஆவடி அருகே மின்சார ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து காரணமாக சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது.

கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்டரல்-அரக்கோணம் வழத்தடத்தில் உள்ள ஆவடியில் மின்சார ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது.

அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு சென்ற மின்சார ரயிலின் 4 பெட்கள் தடம்புரண்டுள்ளன. இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தை நோக்கி செல்ல இருந்தது. இப்படி இருக்கையில் ரயில் விபத்தில் சிக்கியதால், தடம்புரண்ட பெட்டிகளை மீட்க ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இது தொடர்பான முதல்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறுதான் விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விபத்தில் சிக்கிய ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட பெட்டிகளை மீண்டும் சரி செய்ய சில மணி நேரங்கள் கூட ஆகலாம் என்று சொல்லபடுகிறது.
Share on:

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தாலும் மக்கள் நம்பவில்லை!


பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியதை தமிழ்நாடு மக்கள் ஏன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை? என்பது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, “எடப்பாடி – பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதை தமிழக மக்கள் ஏன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை?

பாஜக எதிர்ப்பு வாக்குகள் என்பது சிறுபான்மை வாக்குகள் மட்டும் அல்ல சிறுபான்மையை தாண்டி அனைத்து மட்டங்களிலும் உள்ளது. ஆனால் EPS சிறுபான்மையினர் மட்டும் தான் பாஜகவிற்கு எதிரானவர்கள் என்று நம்புகிறார். அந்த பெரும்பான்மை பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக அறுவடை செய்கிறது. அதை அதிமுக பக்கம் இழுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்க வில்லை.

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் நடவடிக்கைகளுக்கு கவர்னர் மூலம் அனுமதி அளிக்க காலதாமதம் செய்வதும், மத்திய பாஜக திமுக மீது மட்டும் நடவடிக்கை எடுத்து முன்னாள் அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் ஒரு சந்தேக பார்வையை மக்களிடம் ஏற்படுத்துகிறது.

திரு.கே.சி.பழனிசாமி அவர்கள் பாஜகவை எதிர்த்து அதிமுக அரசியல் செய்ய வேண்டும் என்கிற கருத்தை 2018-ல் தெரிவித்தார் அதற்காக இபிஎஸ் அவரை கட்சியை விட்டு நீக்கினார். ஆனால் கேசிபி இன்றுவரை தொடர்ந்து பாஜக எதிர்ப்பு நிலையில் பயணித்து வருகிறார். ஆனால் இதுவரை அவருடன் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. உண்மையிலேயே இபிஎஸ் பாஜக எதிர்ப்பு நிலையில் உறுதியாக இருந்தால் கேசிபியுடன் இணைந்து பயணிக்கலாமே.

இபிஎஸ்- இன் கடந்த கால வரலாறுகளை பார்த்து அவரை நம்பகத்தன்மை வாய்ந்தவராக பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.கொள்கை சார்ந்த சித்தாந்த அரசியல் செய்வதற்கு பதிலாக சாதிய அரசியல் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு இவர்கள் மீது வலிமையாக இருக்கிறது.

ஒன்றுபட்டு வலிமையான அதிமுக-வை கட்டமைத்து பலரும் கூட்டணிக்கு ஆர்வமாக நாடிவருவதற்கு கட்சியை போதுமான அளவு வேகமான கள அரசியலுக்கு அதிமுக தயார்படுத்த படாமல் பாஜக VS திமுக (இந்துத்துவா VS திராவிடம்) என்கிற சித்தாந்த அரசியல் கட்டமைக்கப்படுகிறது.இதை உணர்ந்து செயல்படுவாரா எடப்பாடி பழனிசாமி?” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Share on:

டிடிவி தினகரன் திவாலானவர் என்ற அறிவிப்பு செல்லாது..


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கடந்த 1995 – 1996 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்றதாகவும், பின்னர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாகவும் டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர், ஃபெரா என்னும் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 1998ஆம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையம், 31 கோடி ரூபாய் அபராதத்தை, 28 கோடி ரூபாயாக குறைத்து உத்தரவிட்டது.

இந்த அபராதத்தை செலுத்தாததால் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக அமலாக்கத் துறை பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்தார்.

உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் 2005 ஆம் ஆண்டில் தாக்கல் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தது. இந்த மனு பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
Share on:

கூட்டணியை முறித்த அதிமுக.. ‘கனத்த’ மவுனத்துடன் பாஜக!


அதிமுக கூட்டணியை முறித்த பின்னரும் பாஜக கனத்த மவுனம் கனத்த பயங்கர சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி பகீர் பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்ணா திமுக இடம் பெற்றிருந்தது. இந்தக் கூட்டணியில் தேசிய அளவில் 2-வது பெரிய கட்சியாக இடம் பெற்றிருந்தது அதிமுக.

ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இடைவிடாமல் அதிமுகவை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக அக்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினர். இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்தது. பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தீர்மானமும் நிறைவேற்றியது. 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் தனித்த கூட்டணி அமைக்கப்படும் எனவும் அக்கட்சி அறிவித்தது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அதிமுக அறிவித்தும் இதுவரை பாஜக மௌனம் காப்பதற்கான காரணம் என்ன ?

சிறுபான்மையினர் வாக்கு முழுமையாக அதிமுக பக்கம் சென்று விட கூடாது என்று குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலமாக பாஜக vs திமுக என்ற சித்தாந்த அரசியலை கையில் எடுக்கவா? மீண்டும் தேர்தலுக்கு முன் அதிமுகவை கூட்டணியில் இணைத்து விடலாம் என்ற நம்பிக்கையா? திமுக கூட்டணியை பிளவுபடுத்தும் யுக்தியா? பாஜகவிற்கும் EPS-க்கும் ஏதேனும் ஒரு மறைமுக ஒப்பந்தமா?

எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். கேசி பழனிசாமியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!


சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனக்கு களங்கம் விளைவிப்பதாக இருப்பதாக கூறி, அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமனத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து ஆதரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தவறானது என கே.சி.பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஸ்வரன் தெரிவித்தார்

இதையடுத்து, கேசி.பழனிசாமி வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Share on: