குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி! குடும்ப நலனுக்காக வெளிநாடு சென்ற நிலையில் சோகம்.


குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரின் நிலை என்ன என தெரியாமல் இருந்த நிலையில் அந்த 3 பேர் உள்பட 7 பேர் பலியாகிவிட்டனர்.

குவைத் தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட தமிழர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப்பின் நிலை என்னவென தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் கவலையில் உள்ள நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த அடுக்குமாடி குடியிருப்பு கேரளாவை சேர்ந்த என்பிடிசி குழுமத்திற்கு சொந்தமானது. இதன் உரிமையாளர் கே.ஜி. ஆபிரகாம்.

இந்தியாவில் இருந்து குவைத் மங்காப் நகருக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இதில் தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாக தெரிகிறது.

இந்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் 43 பேர் வரை பலியாகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. குவைத் தீவிபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை குவைத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கே.வி. சிங் சென்றுள்ளார்.

பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. இதனால் டிஎன்ஏ சோதனை மேற்கொண்டால் மட்டுமே உடல்கள் எல்லாம் யாருடையது என தெரியவரும். இந்த தீவிபத்தில் கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்கள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்தம் 3 பேர் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு, தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரும் இறந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 5 பேராவது இறந்திருப்பர் என குவைத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடலூரை சேர்ந்த சின்னதுரை, பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்டு, செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப்பின் நிலை என்னவென தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் கடுமையான மனவேதனையில் கண்ணீருடன் காத்திருந்தனர். இந்த நிலையில் குவைத் தீவிபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களுடைய உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வீராசாமி மாரியப்பன், முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர், சின்னதுரை, கருப்பண்ணன் ராமு, ராஜு எபினேசர் ஆகிய 7 தமிழர்கள் உயிரிழந்தனர்.
Share on:

61-வது முறையாக திறக்கப்படாத மேட்டூர் அணை! கலக்கத்தில் காவிரி டெல்டா விவசாயிகள்!


காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கான உரிய பங்கை கர்நாடகா திறந்துவிடாமல் துரோகம் செய்வதால் மேட்டூர் அணை வறண்டு போய் கிடக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை இன்று திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்படுகிற காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு பாசனத்துக்கு திறந்துவிடப்படும். மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி. மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்தால் பண்ணவாடி நந்தி சிலை உள்ளிட்டவை வெளியே தெரியும்.

பொதுவாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு போதுமான அளவு தற்போது இல்லை. இதனால் இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12-ல் திறக்கப்படவில்லை.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.71 அடியில் இருந்து 43.51 அடியாக சரிந்தும்விட்டது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும் 404 கன அடியாக மட்டுமே இருக்கிறது. அணையின் நீர் இருப்பு வெறும் 14 டிஎம்சி நீர்தான்.

கர்நாடகாவின் துரோகத்தால் மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 61-வது முறையாக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களின் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலத்தின் பாசனமும் கேள்விக்குறியாகி நிற்கிறது..

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி முதல் ஜனவரி 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு காவிரி நீர் திறப்பது வழக்கமான நடைமுறை. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியதாக இருந்தால் 230 நாட்களுக்கும் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்கஆன நீரைத் திறந்துவிட முடியும். தற்போதைய நிலையில் 1 டிஎம்சி நீரை திறந்துவிட்டாலே கூட 90 நாட்களுக்குதான் காவிரி டெல்டா பாசனத்துக்கு தேவையான நீர் கிடைக்கும். இதனால் இன்று மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
Share on:

அரசியல் களம் அதிமுக – திமுக தொடரனும்னா.. இது நடந்தே ஆகணும்.. பாஜகவை எதிராக கே.சி. பழனிசாமி!


புரட்சித் தலைவரை நெடுஞ்செழியன், மாதவன், பஉச, மதுரை முத்து போன்றவர்கள் பேசாத பேச்சா? ஆனால் அவர்களையும் இணைத்துக் கொண்டு கட்சியை வலுப்படுத்தினார்.

திமுகவை வீழ்த்த சரியான இயக்கம் அஇஅதிமுக என்பதை ஒற்றுமையாக தொடர்ந்து நிரூபிக்க தவறினால் அந்த வாய்ப்பு பாஜகவுக்கு செல்லும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுகவை ஒருங்கிணைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், பெங்களூரு புகழேந்தி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை கடந்த ஜூன் 8-ம் தேதி தொடங்கினர். இந்நிலையில் திமுகவை வீழ்த்த சரியான இயக்கம் அதிமுக என்பதை ஒற்றுமையாக தொடர்ந்து நிரூபிக்க தவறினால் அந்த வாய்ப்பு பாஜகவுக்கு செல்லும் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அடிமட்ட அதிமுக தொண்டனின் குரல். நல்ல முயற்சி, புரட்சித் தலைவரை நெடுஞ்செழியன், மாதவன், பஉச, மதுரை முத்து போன்றவர்கள் பேசாத பேச்சா? ஆனால் அவர்களையும் இணைத்துக் கொண்டு கட்சியை வலுப்படுத்தினார். ஆர்எம்வீ, காளி முத்து, பி.ஹெச்.பாண்டியன் போன்றவர்கள் பேசாத பேச்சா? ஆனால் அவர்கள் திரும்பி வந்த போது ஏற்றுக் கொண்டு கட்சியை வலிமையாக்கினார். மறப்போம் மன்னிப்போம் என்று அனைவரும் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து கட்சிதான் முக்கியம் என்ற எண்ணத்துடன் ஒன்று சேர வேண்டும். அஇஅதிமுகவின் இந்த பிரிவுகளை பயன்படுத்தி பாஜக வளர நினைக்கிறது.

அரசியல் களம் அஇஅதிமுக மற்றும் திமுக என்று தொடர வேண்டுமானால் அஇஅதிமுக ஒன்றிணைவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கு முந்தைய பிளவு மற்றும் பிரிவின் போது அதன் பலன் திமுகவுக்கு சென்றது. இப்போது திமுக ஆட்சி மீது சகலருக்கும் அதிருப்தி பெருகி வரும் நிலையில் அஇஅதிமுகவும் அதை பயன்படுத்தாமல் தங்களுக்குள் போட்டியிட்டு கொண்டு இருந்தால் அதனால் மக்களிடம் எழும் அதிருப்தியும் ஆதரவாக பாஜகவுக்கு செல்லும். திமுகவை வீழ்த்த சரியான இயக்கம் அஇஅதிமுக என்பதை ஒற்றுமையாக தொடர்ந்து நிரூபிக்க தவறினால் அந்த வாய்ப்பு பாஜகவுக்கு செல்லும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
Share on:

“எடப்பாடி பழனிசாமி ஐந்து நிமிடம் சிந்தித்தால் போதும்..” கே.சி.பழனிசாமி கூறுவது என்ன? – KC Palanisamy


Ex MP K.C.Palanisamy: மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் உறுப்பினர்களாக இருந்து வெளியேறியவர்கள், மாற்றுக் கட்சியில் இணைந்தவர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், பிரிந்து கிடந்தால் தேசிய கட்சிகள் உள்ளே நுழைந்துவிடும் எனவும் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, “அதிமுக வெற்றி வாகை சூடும் கட்சியாக செயல்பட வேண்டும். கிளை, நகரம், ஒன்றியம், மாவட்ட அளவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் உறுப்பினர்களாக இருந்து வெளியேறியவர்கள், மாற்றுக் கட்சியில் இணைந்தவர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான பணியை செய்கிறோம்.

கடந்த கால கசப்புகளை மறந்து, நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் வகையில் அதிமுகவைக் கட்டமைக்க வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச ஓரிரு நாட்களில் கடிதம் வழங்கப்படும். எடப்பாடியிடம் கருத்து கேட்ட பிறகு மற்றவர்களிடம் பேசப்படும்.

எடப்பாடி பழனிசாமியும் இணைப்பை விரும்புவார் என எதிர்பார்க்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் திமுக 90 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது. யாரையும் குறை சொல்ல வரவில்லை, இறங்கி வந்து ஒன்றிணைந்தால் தான் வெற்றி கிடைக்கும். அதிமுகவை ஒருங்கிணைக்கும் நிலைப்பாட்டில் மாபெரும் வெற்றியைப் பெறுவோம்.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா அனைவரும் ஒருங்கிணைந்து வர வேண்டும். ஓபிஎஸ் ஒருங்கிணைய தயார் எனக் கூறிவிட்டார். அமமுகவை கலைத்துவிட்டு டிடிவி தினகரன் வந்தால் எந்த தவறும் இல்லை. எடப்பாடி பழனிசாமி ஐந்து நிமிடம் சிந்தித்தால், அதிமுகவிற்கு விடிவுகாலம் பிறக்கும்.

எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம். பிரிந்து கிடந்தால் தேசிய கட்சிகள் உள்ளே நுழைந்துவிடும். திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஒரே கொள்கை” என்றார்.
Share on:

‘பிரிந்தவர்களிடம் பேசி கட்சியை ஒருங்கிணைக்க அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு’


அனைத்துத் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருப்பதாக முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ-வான ஜே.சி.டி.பிரபாகர், ஓபிஎஸ் அணியின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளரான வா.புகழேந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் இன்று மூவரும் கூட்டாக அளித்த பேட்டியில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இனிமேலும் இத்தகைய தோல்வி ஏற்படாமல் இருப்பதற்கும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கும் அனைவரும் ஒன்றுபட வேண்டியது அவசியம். அதற்காக நாங்கள் ஒரு அணியில் இருந்து இந்த ஒருங்கிணைப்புப் பணியைச் செய்ய முடியாது என்பதால் நாங்கள் இருந்த அணியில் இருந்து விலகி, தற்போது அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உள்ளோம்.

வெறுமனே அறிக்கையோ அல்லது சமூக வலைதளத்தில் பதிவையோ வெளியிட்டால் மட்டும் போதாது. தொண்டர்கள், தலைவர்கள் மனதைத் தொடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதனால்தான் அதிமுக தொண்டர்கள், தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை நாங்கள் இன்று (ஜூன் 8) தொடங்கியுள்ளோம். இதற்காகவே எதிரும் புதிருமாக இருந்த நாங்கள் ஒன்றாகி இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறோம். யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை. தற்போதைய சூழலில் அதிமுகவை அழிக்கப் பார்க்கின்றனர். இதை தலைவர்களும், தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவில் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். அப்படிப்பட்ட உன்னதமான இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமானால் ஒன்றுபடுவது அவசியம். இதைத்தான் மக்களும், கட்சித் தொண்டர்களும் விரும்புகின்றனர். எனவே, அதிமுகவில் உள்ள அனைத்து அணியினரும், தொண்டர்களும் தங்கள் கருத்தை அதிமுக ஒருங்கிணைப்புக் குழு, எண்,44, கோத்தாரி சாலை, சென்னை என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பலாம். அல்லது 9003847889 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தொண்டர்களின் கருத்துகளை தெரிந்து கொண்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி ஒருமித்த கருத்துடன் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்வோம். எந்த அணியையும் சாராமல் கட்சியை ஒருங்கிணைக்கும் பணியில் மட்டும் ஈடுபட்டுள்ள எங்களுக்கு தலைவர்கள் கவுரவம் பார்க்காமல், காலம் தாழ்த்தாமல் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

வரும் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்களே உள்ளன. எனவே, வரும் டிசம்பர் மாதத்துக்குள் அதிமுக ஒன்றிணைந்தாக வேண்டும்” என தெரிவித்தனர்.
Share on:

கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய ஐகோர்ட் அனுமதி! சசிகலா தரப்புக்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்வி!


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கோடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கோடநாடு பஞ்சாயத்து தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பதாகவும், 2008 ஆம் ஆண்டிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், 2023 ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேலும், கொடநாடு எஸ்டேட்டுக்குள் விதிகளை மீறி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளவில்லை என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? என தெரியவரும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு மூத்த வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னரே ஆய்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பதிலளித்தார்.

இதையடுத்து, எஸ்டேட்டை ஆய்வு செய்யவும், சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளதாகக் கூறி, உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆய்வு செய்யலாம் என அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் எனவும், அங்கிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Share on:

நாளை வாக்கு எண்ணிக்கை.. தமிழ்நாட்டின் 39 மையங்களிலும் பாதுகாப்பு தீவிரம்.. பணியில் 1 லட்சம் போலீசார்.


லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியாவில் 543 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக நடந்தது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என்று 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன. இதற்கான பாதுகாப்பில் பணியில் மொத்தமாக 38 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் ஈடுபடவுள்ளனர். அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4,500 பேரும் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் பணிகள் 39 மையங்களில் 43 கட்டிடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த மையங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடக்கவுள்ளது. அதில் ஒரு அறையில் 14 மேஜைகள் வீதம் சுமார் 3,300 மேஜைகள் பயன்படுத்தப்படவுள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் மேஜைகளும் பயன்படுத்தப்படும். காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளது. முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பின் 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கும்.

இதில் வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தான் நடக்கும். வழக்கம் போல் ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவு மற்றும் முன்னிலை விவரங்கள் வெளியிடப்படும். வாக்கு எண்ணும் பணிகள் நடக்கும் மையங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அட்டை வைத்துள்ள பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல் பாதுகாப்பு அறைக்கான பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுதப்படை போலீசார், அதற்கு அடுத்தபடியாக மாநில ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்பின் 3வது அடுக்கு பாதுகாப்பு பணியில் மாநில போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் தலா ஆயிரம் போலீசார் வீதம் 40 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அதேபோல் ரோந்து பணிகளில் 60 ஆயிரம் போலீசாரும், 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
Share on:

குப்பை அகற்றப்படாததை சுட்டிக்காட்டிய இளைஞர் மீது தாக்குதல்: கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு!


கோவையில் குப்பை அகற்றப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர் கவுதம் மீது தாக்குதல் நடத்தியதாக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த கவுதம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு ரயில்வே காலனி பகுதியில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தூய்மைப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பை தேங்கி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதம் என்பவர், 23-வது வார்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் கவிதா புருஷோத்தமனிடம் புகாரளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எதுவும் இல்லாததால், அவர் மேட்டுப்பாளையம் நகராட்சியில் புகார் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (மே 30) அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்கள், துப்புரவு பணிக்காக வந்துள்ளனர். அப்போது அங்கு கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தமன், அவரது மகன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கவுதம், இங்கு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியதுடன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கவுன்சிலரின் கணவர் உள்ளிட்டோர் கவுதமை தாக்கியுள்ளனர். இதில் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு கவுதம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காயமடைந்த கவுதம் அளித்த புகாரின் பேரில், கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தமன், மகன் கார்த்திக், நண்பர் நசீர் ஆகியோர் மீது மேட்டுப்பாளையம் போலீஸார் இன்று (மே 31) வழக்குப்பதிந்துள்ளனர். அதேபோல், கவுன்சிலர் கவிதா அளித்த புகாரின் பேரில், இளைஞர் கவுதம், அவரது தாயார் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Share on:

“என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” வெள்ளதுரை சஸ்பெண்ட்.. இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடி நடவடிக்கை!


“என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” என பெயர் பெற்ற ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஏடிஎஸ்பி வெள்ளதுரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தமிழ்நாடு காவல்துறையில் அறியப்படுபவர். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையிலும் உறுப்பினராக இருந்தார் வெள்ளதுரை.

கடந்த 2013 ஆம் ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜையின் போது சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியில் காவல்துறை எஸ்.ஐ ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் இருவர் வெள்ளதுரை டீமால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

மதுரையில் சப் இன்ஸ்பெக்டர்களை குத்திய ரவுடிகள் கவியரசு, முருகன் ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டதன் பின்னணியிலும் வெள்ளத்துரை உள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை தடுப்பதற்கான சிறப்புப் படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார் வெள்ளதுரை.

தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார் வெள்ளதுரை. வெள்ளதுரை மீதான என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடியில் நிலுவையில் உள்ளது. ஏ.டி.எஸ்.பி வெள்ளதுரை இன்று பணி ஒய்வுபெற இருந்தார். இந்நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் 2013 ஆண்டில் ராமு (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உள்துறை, வெள்ளதுரையை சஸ்பெண்ட் செய்துள்ளது. வெள்ளதுரை மீது சிபிசிஐடி பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உள்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழக அரசின் உள்துறையால் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on:

சிக்கலில் தமிழகத்தைச் சேர்ந்த 50 அரசு அதிகாரிகள்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்த அதிரடி முடிவு!


‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தமிழகத்தை சேர்ந்த 50 அதிகாரிகள் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

சொந்த வீடு கட்டுவது என்பது ஏழை-எளிய, நடுத்தர மக்களின் கனவாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.சென்னை போன்ற நகர்புறங்களில் 600 சதுர அடியில் அடுக்குமாடி வீடு வாங்கவே ஆயுள் முழுவதும் உழைக்க வேண்டிய நிலை இருக்கிறது. சொந்த வீடு வாங்குவது என்பது இன்றைய நிலையில் அசாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது.

விலைவாசி உயர்வுகளுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைத்து, திருமணம் நடத்தி, வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் ஆகும். இப்படியான சூழலில் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் பணம் வழங்குகிறது.

இந்த திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மோசடி அரங்கேறி இருப்பதை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த திட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

உதாரணமாக சொல்வது என்றால், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள சணபத்தூர் கிராமத்தில் வீடுகளை கட்டாத பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 66 ஆயிரம் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். இதேபோன்று இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லாதவர்கள் பெயரிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதாம். அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்கள் தயாரித்து ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரதமர் வீடு கட்டடும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பணியாற்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் 50 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் நாகப்பட்டினத்தில் 146 பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியின் ரூ.1 கோடி அளவுக்கு முறைகேடு புகார் எழுந்திருக்கிறதாம். அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 அதிகாரிகள் மீது கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது இந்த மோசடி வழக்கில் 50 அதிகாரிகள் சிக்கி இருப்பபது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை பாயும் என்றும், இவர்கள் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Share on: