அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு.. தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து விசாரிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், 2011 முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மேல்விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றமும் முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், போக்குவரத்துறையில் ஒவ்வொரு பதவிக்கும் பணம் பெற்றது தொடர்பாக தனித்தனியாக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை காவல்துறையினர் தாக்கல் செய்த நிலையில் அவற்றை தனி வழக்காக தான் விசாரித்து இருக்க வேண்டுமே தவிர ஒன்றாக இணைத்து இருக்கக் கூடாது என்றும் இந்த வழக்கை ஒன்றாக இணைத்ததால் விசாரணைக்கு பல ஆண்டுகள் எடுக்கும் என்பதால் வழக்கை நினைத்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி இளந்திரையன், மனுவுக்கு மார்ச் 13ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.
Share on:

“கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது”.. ஐகோர்ட் கிளை நீதிபதி வேதனை!


கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவது கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலுமே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி, தானே நேரில் இதனை பார்ப்பதாக கூறி வேதனை தெரிவித்துள்ளார்.

தேவகோட்டையைச் சேர்ந்த பஞ்சநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தேவகோட்டையில் வள்ளி விநாயகர் ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். தேவகோட்டை நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்களும் ஊருணி வடகரையில் கொட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு நகரப்புற உள்ளாட்சிகள் சட்டத்தின்படி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்பே குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவது சட்ட விரோதம். குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊருணியில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன், ஊருணியில் குப்பைகள் கொட்டப்பட்டதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, நீதிபதி, “மதுரை அமர்வுக்கு வந்ததில் இருந்து மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சைக்கிள் பயிற்சி செய்து வருகிறேன். அப்போது சாலையில் இரு பக்கத்திலும் குப்பைகள் குவிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது. இதனால் அப்பகுதியே புகை மண்டலம் ஆகிவிடுகிறது.

மதுரை கோயில் நகரம் என அழைக்கப்படும் சூழலில், தற்போது மதுரை குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. இதை உள்ளாட்சி அமைப்புகள் கண்டும் காணாமல் இருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும். வள்ளி விநாயகர் ஊரணி குப்பைகளை கொட்டி மாசுப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது.

எனவே, தேவகோட்டை நகராட்சி ஆணையர், ஊருணியை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை மார்ச் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.
Share on:

தைரியம் இருந்தால் அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை ஈபிஎஸ் நீக்கி பார்க்கட்டும்”- கே.சி.பழனிசாமி


எடப்பாடி பழனிசாமி தைரியம் இருந்தால் செங்கோட்டையனை நீக்கி பார்க்கட்டும் என தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி செங்கோட்டையனை நீக்கினால் எடப்பாடி தலைமை இருக்காது என எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். அதிருப்தியில் இன்றைக்கு செங்கோட்டையன் ஆரம்பித்திருக்கிறார். இனி தொடர்ச்சியாக பலர் வருவார்கள் என கே.சி.பழனிசாமி கூறினார்.

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி, “எடப்பாடி பழனிச்சாமி குறித்து செங்கோட்டையன் பதிலளிக்காமல் சென்றது, அவர் இன்னும் திருப்தியடையவில்லை என்பதை காட்டுகிறது. தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை நீக்கி பார்க்கட்டும். எடப்பாடி பழனிச்சாமி இந்த இயக்கத்தை ஒருங்கிணைக்கத் தவறினார், சுயநலத்துடன் நடந்து கொள்கிறார். அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைக்கபட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறோம். உலகமே அதைத்தான் எதிர்பார்க்கிறது, ஆனால் ஒரு ஆளுக்கு மட்டும் அது புரிய மாட்டிங்கிறது. திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வர…
Share on:

Continue Reading

ரூ.25,000 அபராதம்! வாடிக்கையாளருக்கு அல்ல.. KVB வங்கி மேனேஜருக்கு! நீதிமன்றம் அதிரடி


கடனை செலுத்திவிட்ட பின்னரும் அடமான பத்திரங்களை கொடுக்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கில், கரூர் வைஸ்யா வங்கியின் மேனேஜருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஏழை மக்களை துன்புறுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதித்து வந்த நிலையில், தற்போது வங்கி மேனேஜருக்கே அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

தென்காசியை சேர்ந்த மாரித்துரை என்பவர் ஆவணங்களை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்றிருந்தார். பெற்ற கடனை கொஞ்சம் கொஞ்சமாக அவர் அடைத்திருக்கிறார். ஆனால் முழு கடனை அடைத்த பின்னரும் கூட, அடமானமாக வைக்கப்பட்ட ஆவணங்களை திருப்பி தர வங்கி மறுத்திருக்கிறது. காரணம் கேட்டால், கூடுதலாக ரூ.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனையடுத்து மாரித்துரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார். விசாரணையின் முடிவில் கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மட்டுமல்லாது, வரும் 17ம் தேதிக்குள் அடமானத்திற்கு பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் மனுதாரரின் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

வழக்கமாக மினிமம் பேலன்ஸ் இல்லை, வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டீர்கள், எஸ்எம்எஸ் சேவை கட்டணம் என வாடிக்கையாளர்களிடமிருந்துதான் வங்கிகள் பணம் பிடுங்கும். ஆனால், வங்கி தலைமை மேனேஜருக்கே நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

கடந்த 2019-20 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கு இடையில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று கூறி, ரூ.8,495 கோடியை பொதுத்துறை வங்கிகள், பொதுமக்களிடமிருந்து அபராதமாக பிடித்தம் செய்திருக்கின்றன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தமிழக அரசு ஓராண்டுக்கு செலவிடும் தொகையை விட இது அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
Share on:

தலித்தாக பிறந்தவர் புல்லட் ஓட்டக்கூடாதாம்.. மாணவன் கையை வெட்டிய மாற்று சாதியினர்.. சிவகங்கை கொடூரம்


சிவகங்கை அருகே புல்லட் வாகனத்தை ஓட்டிய பட்டியலின மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி 3 பேர் கையை வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவரின் புல்லட் வாகனத்தை அடித்து உடைத்து சூறையாடி இருக்கின்றனர்.

சாதி வெறியால் புல்லட் வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவரின் கையை வெட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேளக்காடாவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் – செல்லம்மா தம்பதியினர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அய்யாசாமி என்ற மகன் இருக்கிறார். இவர் சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததன் காரணமாக, அவரின் தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உழைப்பால் பொருளாதார ரீதியாக ஓர் அளவிற்கு முன்னேறிய பூமிநாதன், கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கி இருக்கிறார். இது அங்கிருந்த சில முன்னேறிய சாதி இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை.

இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்த நிலையில், புல்லட் வாகனம் வாங்கியதால் கூடுதல் விரக்தியடைந்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பூமிநாதனின் புல்லட் வாகனத்தை 2 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உடைத்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பூமிநாதன் மற்றும் அய்யாசாமி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நேற்று கல்லூரியை முடித்து அய்யாசாமி புல்லட் வாகனத்தில் வீட்டை நோக்கி வந்து இருக்கிறார். அப்போது 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” என்று கூறி அய்யாசாமியின் கையை வெட்டி இருக்கின்றனர்.

அங்கிருந்து தப்பியோடிய அய்யாசாமி, விரைவாக பெற்றோரிடம் சென்றுள்ளார். அதன்பின் அவருக்கு உடனடியாக மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அய்யாசாமிக்கு வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனிடையே அய்யாசாமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள், வீட்டை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதி ஈஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
Share on:

அடுத்தது இரட்டை இலை முடங்கும்.. இபிஎஸ் அவுட்- புதிய தலைமையில் ஒரே அதிமுக.. கேசி பழனிசாமி பரபர தகவல்


அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தலைமை மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது; இந்த தீர்ப்பின் மூலம் டெல்லி கழுகுகள் தமிழ்நாட்டை வட்டமிட ஆரம்பித்துவிட்டன எனவும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மனுதாரர்களில் ஒருவரான கேசி பழனிசாமி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக ஒரு தலைமை மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதாக நாம் எடுத்து கொள்ளலாம். எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவுக்கு ஏற்படுகிற பாதகத்தை சரி செய்கிற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் என்கிற டெல்லி கழுகு தற்போது எடப்பாடி பழனிசாமியை சுற்றி வருகிறது. அதிமுக என்ற கட்சி உயிர்ப்போடு இருக்க வேண்டும். தோல்விகள் தவிர்க்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி வலிமையான கூட்டணி அமைப்பேன் என கூறிவருகிறார்; ஆனால் எந்த தேர்தலிலும் அவர் வலிமையான கூட்டணியை அமைக்கவில்லை.

அதிமுகவின் மூத்த தலைவர்கள் மட்டுமல்ல.. தொண்டர்களும் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆளும் வாய்ப்பை பெற முடியுமா? என்கிற கேள்வியும் அதிமுகவில் எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் தேவைக்கு அதிகமான சுயநலத்துடன் நடந்து கொள்கிறார். எங்களைப் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரவணைத்து எடப்பாடி பழனிசாமியால் சென்றிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதை செய்ய தவறியதாலே வழக்குகள் எல்லாம் தொடர வேண்டிய நிலைமை உருவானது.

நாங்கள் 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவுடன்தான் பயணிக்கிறோம்; இன்றைக்கு இருக்கிற எடப்பாடி பழனிசாமியோடு அல்ல. அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பவர் அதிமுகவின் தொண்டர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதிமுகவில் நீண்டகாலம் பயணிப்பவர்கள் இந்த கட்சி ஒன்றுபட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட அதிமுகவில் இருக்கிற தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக ஒன்றுபட வேண்டும் என பேசினர்; அப்படி பேசியவர்களை கடுமையான வார்த்தைகளில்.. அதாவது நீங்க எல்லாம் சசிகலாவோடு போய் தனியாக கட்சி நடத்திக்கொள்ளலாமே என கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கிறது; இதனைத்தான் செங்கோட்டையன் போன்றவர்கள் எடப்பாடிக்கு எதிராக பேசுவதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் கட்சி ஒன்றுபட்டாக வேண்டும்; தலைமை மாற்றம் ஏற்பட வேண்டும்; தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணியின் சுயநல நடவடிக்கைகள் அதிமுகவின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

அதிமுகவில் நிச்சயம் தலைமை மாற்றம் ஏற்படும்; அதிமுகவின் சின்னம் சிறிது காலத்துக்கு முடக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது அதிமுக ஒன்றுபடவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு கேசி பழனிசாமி தெரிவித்தார்.
Share on:

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி.. வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழப்பு!


வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊர் புறப்பட்டுள்ளார். கோவை – திருப்பதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணத்தை தொடங்கிய அவர், மகளிர் பெட்டியில் இருந்திருக்கிறார். ஜோலார்பேட்டை அருகே ரயில் சென்ற போது, திடீரென இளைஞர் ஒருவர் ரயிலில் ஏறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் மகளிர் பெட்டியில் இருந்த அனைவரும் அந்த ரயில் நிறுத்தத்தில் இறங்கிவிட்ட நிலையில், கர்ப்பிணி பெண் மட்டுமே தனியே இருந்திருக்கிறார். இதனையடுத்து ரயிலில் ஏறிய இளைஞர், கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக செயினை இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் கர்ப்பிணி பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து அந்த இளைஞர் கதவிற்கு அருகே சென்றுள்ளார். அப்போது கீழே விழுந்துவிடக் கூடாது என்று கர்ப்பிணி கவனம் கொள்ள, அவரின் கைகளை உடைத்து இளைஞர் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதன்பின் அருகில் இருந்தவர்களால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்பின் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கேவி குப்பம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் அளிக்கப்பட்ட பேட்டி ஒளிபரப்பாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஹேமராஜ் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனிடையே கைதான ஹேமராஜ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

தேசிய மகளிர் ஆணையம் தரப்பில் தமிழக டிஜிபி-யிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் கோவை – திருப்பதி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் நலமாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. காயமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இதன்பின் ரயில்வே அதிகாரிகள் கர்ப்பிணி பெண்ணை சந்தித்து நிவாரண உதவியை வழங்கினர்.

இந்த நிலையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின், அறுவை சிகிச்சை மூலமாக இறந்த சிசுவை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
Share on:

தாம்பரம் அருகே லஞ்சத்தை தந்து, கையோடு கால் டாக்ஸி டிரைவர் பார்த்த வேலை.. ஆடிப்போன போலீஸ்காரர்கள்


அரசு ஊழியர்கள் அல்லது போலீசார் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அவர்களது உயர் அதிகாரிகள் கண்டிப்பாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள்.. ஒழுங்கு நடவடிக்கை என்பது பணியிடை நீக்கமாகவே இருக்கும். கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை உள்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை, உயர்கல்வித்துறை, பள்ளிகல்வித்துறை என எந்த அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினால் சிறை தண்டனை உறுதி..

அதேநேரம் பொதுமக்கள் யாரிடமாவது லஞ்சம் வாங்கியது அவர்களின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியவந்தால், அந்த ஊழியர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையை உயர் அதிகாரிகளால் எடுக்க முடியும். அதேபோல் பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு உள்ளது. காவலர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். காவலர்கள் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அவர்களை சஸ்பெண்ட் செய்ய முடியும். குறைந்தபட்ச தண்டனையாக ஆயுத படைக்கும் மாற்ற முடியும்… இல்லாவிட்டால் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய முடியும்.

அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரின் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்கள் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் கன்னிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கன்னிவாக்கம் பகுதியில் கால் டாக்சியை ஓரமாக நிறுத்திவிட்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த டிரைவரிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் விசாரித்த போது அவர் மது குடித்த நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து 2 காவலர்களும், உன் மீது வழக்கு போடாமல் இருப்பதற்கு ரூ.1,500 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு கால் டாக்சி டிரைவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினாராம்.. ஆனால் 2 காவலர்கள் டிரைவரிடம் ‘கூகுள் பே’ வில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் ரூ.2 ஆயிரம் இருக்கும் என்று கூறினாராம். அந்த 2 போலீஸ்காரர்களும் உடனடியாக நாங்கள் சொல்லும் ‘கூகுள் பே’ எண்ணுக்கு ரூ.1,500 அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவலர்கள் கூறிய எண்ணுக்கு ரூ.1,500-ஐ ‘கூகுள் பே’ மூலம் அனுப்பியிருக்கிறார். இதை தொடர்ந்து அங்கிருந்து 2 காவலர்களும் சென்று விட்டனர்.

இது சம்பந்தமாக கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவங்கள் பற்றி கூறினாராம். இந்த விவரம் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக்கின் கவனத்திற்கு வந்தது. அவர் சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். உயர் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் கால் டாக்சி டிரைவரிடம் இருந்து மற்றொரு நபரின் ‘கூகுள் பே’ எண் மூலம் 2 காவலர்களும் ரூ.1,500 லஞ்சமாக பெற்றது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து ‘கூகுள் பே’ மூலம் ரூ.1,500 பெற்ற செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் அதிரடியாக உத்தரவிட்டார்.
Share on:

அரசு ஊழியர்களை விடுங்க, மதுரை மேலூர் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் எங்கே? பட்ஜெட் ERROR வருதாமே


அரசுப் பள்ளிகளைப்போல அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வரும்நிலையில், இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள். மதுரையிலிருந்து இப்படியொரு புலம்பல் வெடிக்க துவங்கியிருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

தமிழகம் முழுவதிலும், அரசுப் பள்ளிகளைப்போல அரசு உதவி பெறும் பள்ளிகள் பல செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக மாதத்தின் கடைசி நாளில் ஒவ்வொரு ஆசிரியரின் வங்கிக் கணக்கில் மாத ஊதியம் வரவு வைக்கப்படும்.

அரசு பள்ளி: அதன்படி, ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியலை நிதித்துறையின் IFHRMS என்ற வெப்சைட்டில் தலைமையாசிரியர்கள் அப்லோடு செய்வார்கள். இதை 16-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை இப்படி பதிவேற்றம் செய்யப்படும்..

ஆனால், சிலசமயம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப் பட்டியலைப் பதிவேற்றம் செய்ய முடியாமல் போய்விடுவதாக கூறுகிறார்கள். டிஜிட்டல் தளத்தில் பிரச்சனையா? அல்லது அரசு நிதியே ஒதுக்கவில்லையா? என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பிவிடுகிறார்கள்.

சம்பள பிரச்சனை: எது எப்படியோ, மாத மாதம் ஊதியம் வந்தால்தான், குடும்பத்தை சமாளிக்க முடியும் சூழலில், ஆசிரியர்கள் உள்ளனர்.. அதிலும், இந்த சம்பளத்தை நம்பி, சிலரால் இஎம்ஐ செலுத்த முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுவிடுகிறது.

சிலசமயம் எதிர்பாராத மருத்துவச்செலவுகளும் வந்துவிடுகின்றன.. இதுபோன்ற செலவுகளுக்கு, மாத ஊதியம் சரியாக வந்தால்தான், சமாளிக்க முடியும் என்கிறார்கள். 2 வருடங்களுக்கு முன்பு, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த பிரச்சனை வெடித்திருந்தது.. இதற்கு பிறகு இப்படியொரு பிரச்சனைகள் எழுவது குறைந்துள்ளதாகவே தெரிகிறது.

மதுரை மேலூர்: ஆனால், தற்போது, மதுரை மேலூர் கல்வி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஜனவரிக்குரிய சம்பளம் கிடைக்கவில்லை என ஆசிரியர்கள் புலம்ப துவங்கியிருக்கிறார்களாம். மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளிகளில் 1200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லையாம்..

வழக்கமாக சம்பளத்திற்கு முன்பே ஆசிரியர்களின் சம்பள பில் உள்ளிட்ட ஆவணங்கள் அதற்குரிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யப்படும். அந்தவகையில், இப்போதும் முறையாக பில்கள் பதிவேற்றம் செய்தும் ஆசிரியர்களுக்கு ஒருவாரம் ஆகியும் சம்பளம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

கோரிக்கை: பள்ளிகளுக்கான ஐடி மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், “பட்ஜெட் எரர்” என்று வருகிறதாம்.. இதுகுறித்து சம்பந்தப்பட்ட டிஇஓ அலுவலகத்தில் முறையிட்டதையடுத்து, 20 பள்ளிகளுக்கு சம்பளம் கிடைத்துள்ளது.. ஆனால் இன்னும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. என்பதால், இந்த தொழில்நுட்ப பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கண்டு, சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share on:

தடதடக்கும் தாம்பரம்.. ஒரே நாளில் பெண் காவலர் உள்ளிட்ட 8 பேரிடம் செயின் பறிப்பு


தாம்பரம் அருகே ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு தாம்பரத்தில் நேற்று ஒரே நாளில் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்திரா என்ற பெண் காவலர் நேற்று இரவு 9.40 மணியளவில் தன் பணியை முடித்துவிட்டு முடிச்சூரில் உள்ள தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தேவராஜா சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்நோக்கி இரண்டு இளைஞர்கள் சென்றனர். ஒரு இளைஞர் நடந்தும், மற்றொரு இளைஞர் பைக்கிலும் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

இந்திரா வீட்டுக் கதவை திறந்து கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் தாமதமானது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இளைஞர்கள் இந்திராவின் ஐந்து சவரன் தங்க செயினை பறித்து நொடிப் பொழுதில் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த காவலர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதேபோல தாம்பரம் ரயில்வே மைதானத்தில் பொருட்காட்சியை பார்வையிட வந்த ஒரு பெண்ணிடமும் தங்க செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில் செயின் பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.

இதுகுறித்து எட்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் தாம்பரம் சுற்றுவட்டார பகுதி பெண்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாம்பரம் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்துக்குட்பட்ட காவலர்கள் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில் அனைத்து காவலர்களும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாலை வரை அந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அதில் தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து காவல்நிலைய காவலர்களும் கலந்து கொண்டனர். அதை நன்கறிந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தெரிந்து கொள்ளையர்கள் பைக்கை சாலையோரமாக நிறுத்தி சென்றது தெரியவந்துள்ளது.

காவலர்கள் அந்த பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் கல்லூரி பொறியாளரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share on: