திமுக மாவட்ட நிர்வாகி பேச்சால் சர்ச்சை!
காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை நாம் எதிர்ப்பது போல் மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்க வேண்டும் என்றும் அப்போது தான் நம்மை மக்கள் நம்புவார்கள் எனவும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார் மயிலாடுத்துறை மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேல்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. தனது ஆட்கள் மூலம் கூட்டத்தை முகநூலில் லைவ் செய்திருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார். இது தெரியாமல் பேசிய திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேல், எடப்பாடி பழனிசாமியை மட்டம் தட்டி பேசணும், காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது போல் நடிக்கணும் எனக் கூறிவிட்டார். கர்நாடக காங்கிரஸை எதிர்ப்பது போல் ராஜ்குமார் எம்.எல்.ஏ. மாயையை உருவாக்கணும் என்று பாடமெல்லாம் எடுத்தார்.
திமுக நிர்வாகியின் இந்தப் பேச்சு காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. நேற்றுக் கூட சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எந்தச் சூழலிலும் காவிரி நீர் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் நிச்சயம் பெற்றுத் தருவோம் எனவும் உறுதிபடப் பேசியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் இவ்வாறான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் திமுக நிர்வாகி ஆர்வக்கோளாறில் தேவையற்றதை பேசி கட்சித் தலைமையை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டுள்ளார்.