எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு: யாரை பார்த்து அப்படி சொன்னீங்க? கே.சி.பழனிசாமி காட்டம்!


தமிழ்நாட்டில் அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சி அதிமுக என்று அக்கட்சியினரால் கூறப்படும் நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல அணிகளாக அக்கட்சி பிரிந்து நிற்கிறது.

பெரும்பாலான பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்ததால் அவர் தனக்கு போட்டியாக வர வாய்ப்புள்ள சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சியிலிரிருந்து நீக்கினார். இவர்களுக்கு ஆதரவாக நின்றவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினார். இந்த மூவரின் ஆதரவாளராக காட்டிக்கொள்ளாத அதே சமயம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தனது கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைத்து வருபவர் கே.சி.பழனிசாமி.

அதிமுக பல அணிகளாக பிரிந்ததிலிருந்து தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து வருகிறது. டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரும் தோல்வியையே சந்திக்கின்றனர். இதனால் பிரிந்து நிற்கும் அணிகள் எல்லாம் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.

கே.சி.பழனிசாமி, ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்த அக்குழு சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று கூறப்பட்டது. ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். எனவே ஒருங்கிணைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக கே.சி.பழனிசாமி கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “நான் கடந்த 1972ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தேன். 1982ஆம் ஆண்டில் அதிமுக இளைஞர் அணி மாவட்ட துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டேன். 1984ஆம் ஆண்டு காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானேன். 1989ஆம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தபோது, அவரிடம் அதிமுக ஒருங்கிணைப்பு குழு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ரோட்டில் போகிற வருகிறவர்கள் குழு அமைத்தால் அதை கேள்வியாக கேட்கிறீங்க, அவர் கட்சியில் கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது போய் சேர்ந்தார். அவரெல்லாம் ஒரு பெரிய ஆளுன்னு நினைத்து நீங்க கேக்குறீங்க என்று கூறியுள்ளார். எனவே அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on:

சட்டம் ஒழுங்கு என்னாச்சு? அடித்தே கொல்லப்பட்ட வடஇந்தியர்.. கலங்கிய கரூர்.. தமிழ்நாட்டில் இப்படியா?


தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளன. கரூரில் நேற்று முதல்நாள் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்ட ஒழுங்கில் தமிழக அரசு சொதப்புகிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கரூரில் வடஇந்தியர் ஒருவர் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் வடஇந்தியாவில்தான் நடக்கும். குழு வன்முறைகள் அதிகம் வடஇந்தியாவில்தான் நடக்கும். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது அதேபோல் நடக்கும் சம்பவங்கள் மக்களை உலுக்கி உள்ளன.

கரூரில் வாங்கல் கிராமத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் வெளியிட்ட ஆதாரங்களின்படி, கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பூர்ணிமா அளித்த புகாரின் அடிப்படையில், கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் அருகே 30 முதல் 35 வயதுடைய ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் அந்த மர்ம மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் வட இந்தியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரை ஐந்து பேர் அடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அவரது மரணம் கொலையாக பதிவு செய்யப்பட்டது.

வீடியோவில் இருந்த நபர்கள் எம் வினோத்குமார், எம் கரண்ராஜ், முத்து, பி கதிர்வேல் மற்றும் எம் பாலாஜி என அடையாளம் காணப்பட்டனர். இதில் போலீசார் மூலம் வினோத்குமார், கதிர்வேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டி போலீசார் கூறுகையில், இறந்தவர் சனிக்கிழமை மாலை வினோத்குமாரின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுவிட்டார். இதையடுத்து, 5 பேரும் அவரை விரட்டிச் சென்று கட்டையால் தாக்கி, பைக்கை மீட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இவர் பைக்கை திருடியதால் அந்த கும்பல் அவரை அடித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தான் கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. கள்ளக்குறிச்சி விவகாரம் திமுகவிற்கு மிகப்பெரிய அவப்பெயரை கொடுத்துள்ளது. திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக கள்ளக்குறிச்சி பிரச்சனை உருவெடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் 62 பேர் பலியாகி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த விவகாரம்தான் இத்தனை மரணங்களுக்கு காரணம். இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளன. சட்டம் ஒழுங்கில் தமிழக அரசு சொதப்புகிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. போலீசார், உள்துறை சட்டம் ஒழுங்கை கவனிக்க முடியாமல் சொதப்புகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Share on:

சடசடவென சரிந்து விழுந்த தேர்.. அடியில் சிக்கிய 6 பேரின் நிலை என்ன? அலங்கார பணியின்போது விபரீதம்!


புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி நடந்தது. இந்த வேளையில் திடீரென்று தேர் சரிந்து விழுந்தபோது அடியில் 6 பேர் சிக்கினர். இதில் முதியவர் பரிதாபமாக பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராமசாமிபுரம் உள்ளது. இங்கு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடக்கும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

தேர் திருவிழாவின்போது அறந்தாங்கியை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் தான் தேர் திருவிழாவையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி நடந்தது.

நேற்றைய தினம் தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கிராம மக்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த வேளையில் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் தேர் சரிந்து விழுந்தது. இதில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் தேரின் அடியில் சிக்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் தேரை அகற்றி அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

அப்போது ராமசாமிபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 70) என்பவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்தனர். அப்போது மகாலிங்கம் என்பவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இதையடுத்து மற்ற 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அலங்கார பணியின்போது தேர் சரிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக தேர் மற்றும் தேரோட்டத்தின்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அப்போது தேருக்கான வடம் அறுந்தது. அந்த கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பக்தர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதோடு அபசகுணம் ஏற்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on:

கள்ளச்சாராயத்தில் டர்பன்டைனும் கலப்பு? கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் வந்தது எப்படி? பெரிய நெட்வொர்க்!


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கில் மெத்தனால் வாங்க உதவியதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த இரு வியாபாரிகள் உள்பட மூவரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் வரை பலியாகிவிட்டனர். இன்னும் சிலர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து விசாரணை அலுவலரான கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான தனிப்படை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக கண்ணுக்குடி என்கிற கோவிந்தராஜ், அவரது விஜயா, சகோதரர் தாமோதரன், அவருடைய மனைவி சந்திரா, முக்கிய எதிரியான மாதேஷ், சேஷசமுத்திரத்தைச் சேர்ந்த சின்னத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அது போல் மெத்தனால் விற்பனையில் தொடர்புடையதாக சங்கராபுரம் வட்டம் விரியூர் ஜோசப் ராஜா, ராமர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், தம்பிபேட்டையைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மாதேஷுக்கு மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி ரசீது அளித்து உதவியதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சிப்ஸ் கடை நடத்தி வந்த சக்திவேல், மீன் வியாபாரம் செய்து வந்த கண்ணன், வழக்கில் தொடர்புடைய சேலம் மாவட்டம், கருமந்துறை கல்லாநத்தத்தைச் சேர்ந்த சங்கர் ஆகிய மூவரை சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அது போல் இன்று அய்யாசாமி, தெய்வாரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் சேர்த்து கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு சென்னை, மதுரவாயலைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மெத்தனால் விநியோகித்தது தெரியவந்தது.

எம்ஜிஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் சிவக்குமார் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின்பேரில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று அவரைக் கைது செய்து சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் புழலை அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் சிவக்குமார் பணியாற்றி வந்தாராம்.

கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு அவர் மெத்தனால், டர்பன்டைன் எண்ணெய் ஆகியவற்றை விநியோகம் செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த ரசாயன தொழிற்சாலை உரிமையாளரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Share on:

‛‛குட்கா விற்று கைதானவரின் மனைவி தானே நீ’’.. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியை திட்டிய கவுன்சிலர்


தென்காசி: ‛‛குட்கா விற்று கைதானவரின் மனைவி தானே நீ” என்று திமுகவை சேர்ந்த தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியை பார்த்து பெண் கவுன்சிலர் கேள்வியெழுப்பி வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளில் திமுக, 3 வார்டுகளில் காங்கிரஸ், ஒரு வார்டில் மதிமுகவினர் வெற்றி பெற்றனர். இதன்மூலம் மாவட்ட பஞ்சாயத்து திமுக வசமானது.

திமுகவை சேர்ந்த தமிழ் செல்வி மற்றும் கனிமொழி ஆகியோர் இடையே மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிப்பதில் போட்டி ஏற்பட்டது. இதில் தமிழ்செல்வி 8 வாக்குகள் பெற்று வென்றார். கனிமொழி தோற்றுப்போனார். இதையடுத்து தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக தமிழ் செல்வி உள்ளார்.

இந்நிலையில் தான் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தின்போது கவுன்சிலர் கனிமொழி, அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் சரியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த வேளையில் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தின்போது கவுன்சிலர் கனிமொழி, ‛‛பாகுபாடு காட்டக்கூடாது. மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக (தமிழ் செல்வி) இருப்பவரின் கணவர் குட்கா விற்று கைது செய்யப்பட்டவர். நீங்களும் இங்கே குட்கா விற்கவா வந்து இருக்கீங்க. கணவர் கைதுக்கு பொறுப்பேற்று தலைவி பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று கூறினார். இதனால் தலைவி தமிழ் செல்வி தனது இருக்கையில் இருந்து எழுந்தார்.

இந்த வேளையில் பூங்கோதை என்ற கவுன்சிலர் எழுந்து கனிமொழியிடம் தலைவி தமிழ் செல்விக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்தார். ‛‛கட்சியை பற்றி நினைக்காமல் இப்படி பொதுவெளியில் விமர்சிக்கலாமா?” என்று பூங்கோதை கேட்டார். அதற்கு கனிமொழி, ‛‛நீ சும்மா இரு” என்று ஆக்ரோஷமாக கூறினார். இதையடுத்து தலைவி தமிழ் செல்வி கூட்டத்தை புறக்கணித்து எழுந்து சென்றார். தலைவி தமிழ் செல்வி, கனிமொழி இடையே ஏற்கனவே தலைவர் பதவியை கைப்பற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதற்கிடையே தான் சமீபத்தில் தமிழ் செல்வியின் கணவரான, திமுகவை சேர்ந்த ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் பெங்களூரில் இருந்து 600 கிலோ குட்கா கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தான் கவுன்சிலர் கனிமொழி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வியை அப்படி கூறி விமர்சனம் செய்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
Share on:

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க என்ன செய்தீர்கள்? பலிக்கு யார் பொறுப்பு? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி.


கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 35 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்த 50 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.செல்வம், “தமிழ்நாடு அரசின் மொத்த துறையும் தோல்வி அடைந்துள்ளது. பலி எண்ணிக்கை 100 தொட வாய்ப்புள்ளது. கருணாபுரத்தில் உள்ள 500 பேரில் 300 பேர் விஷச்சாராயம் அருந்தியுள்ளனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பணம் பெற்றுக்கொண்டு விஷச்சாராய விற்பனையை அனுமதித்துள்ளனர். சட்டவிரோத விற்பனை குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றுவதில் பலனில்லை” என வாதத்தை முன்வைத்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், “விஷச்சாராய விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? 2023ம் ஆண்டு விஷச்சாராய பலி ஏற்பட்டதை அடுத்து விஷச்சாராயத்தை ஒழிக்க கடந்த ஓராண்டில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விற்பனை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

இதற்கு முன்பும் விஷச்சாராய மரணம் நிகழ்ந்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? விஷச்சாராய விற்பனை தொடர்பாக கவனத்திற்கும் கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. இதற்கு யார் பொறுப்பு?” என தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பி.எஸ். ராமன், “பொதுநல வழக்கு என்றுக்கூறி அரசியல் உள்நோக்கத்துடன் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரர் கட்சி ஆட்சியில் இருந்த போது 2001ம் ஆண்டு புதுப்பேட்டையில் விஷச்சாராய மரணம் நிகழ்ந்தது. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி 47 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 89 பேர் உடல் நிலை சீராக உள்ளது. கூடுதல் மருத்துவக்குழு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். மது விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைகள் தொடரும். அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் பாயும்.

விஷச்சாராய மரணங்களை தடுப்பது தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 161 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருக்கின்றனர். அதேபோல விழுப்புரம், மரக்காணம் சம்பவங்களுக்கு பிறகு விஷச்சாரய விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Share on:

விஷசாராய மரணம்.. 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்.. நெஞ்சை உறைய வைக்கும் சோக காட்சிகள்


கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. ஒரே இடத்தில் 21 பேரின் உடல்களை தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்கள் கோமுகி நதிக்கரையில் தகனம் செய்யப்பட உள்ளன. இதற்கிடையே இறுதிச்சடங்கு நடந்து வரும் இடத்தில் கனமழை பெய்து வருகிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்ததாக 109 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுக்க இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்துள்ள தமிழக அரசு, மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம் எஸ் பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி முழுவதுமே சோகத்துடன் காட்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையோரம் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வத்திப்பெட்டி போல் கட்டைகளை வைத்து வரிசையாக தகனம் செய்ய இடம் அமைக்கப்பட்டுள்ளது.

அது போக 7 பேருக்கு நல்லடக்கம் செய்ய குழித்தோண்டப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் பார்ப்பவர்களின் கண்களையே குளம் ஆக்குவது போல அமைந்துள்ளது. கண்ணீருடன் கவலை தோய்ந்த முகத்துடன் விஷசாராயத்திற்கு குடும்ப உறுப்பினரை பலி கொடுத்த துயரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அழுதுகொண்டு நிற்கும் காட்சிகளும் நெஞ்சை உறைய வைப்பதாக அமைந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதை நகராட்சி ஊழியர்கள் கவனித்து வருகிறார்கள். உறவினர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோமுகி ஆற்றங்கரையில் மருத்துவ குழுவும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இறுதிச்சடங்கு நடந்து வரும் இடத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் இறுதிச்சடங்குக்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள் நனைந்துவிட்டன. இதனால் மீண்டும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தொடந்து ஒவ்வொருவரின் உடல்களாக தகனம் செய்யப்பட்டு வருகிறது.
Share on:

கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி.. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம்!


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். பல முறை சிறை சென்றுள்ள இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார்.

அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தை நாடி வந்துள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் 50க்கும் அதிகமானவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தான் 14 பேர் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இத்தகைய சூழலில் தான் ஜிப்மர் மருத்துவுமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியாகி உள்ளனர். மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று மாலையில் பலியாகி உள்ளனர். மற்ற 11 பேருக்கும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய சாவு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தது எப்படி என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாராயம் விற்பனை செய்தவரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Share on:

திமுக 2021 சட்டமன்ற தேர்தல் கொடுத்த வாக்குறுதிகளில் இன்றுவரை நிறைவேற்றாதது…


* பொதுமக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், ஓய்வூதியப் பலன்கள், பொது விநியோக திட்டப்பலன்கள் உள்ளிட்டவற்றை உள்ளிட்டவற்றை வின்னிப்பித்த குறிப்பிட்ட நாட்களுக்கும் பெரும் வகையில் சேவை உரிமை சட்டம் (Right to Service Act) நிறைவேற்றப்படும்.

* லோக் ஆயுக்தா முறையாகவும் முழுமையாகவும் செயல்பட வைத்தல்.

* ஊழல் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

* உழவர் சந்தை உயிரோட்டப்பட்டு பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

* மாதம் ஒரு முறை மின் கட்டட்ணம் செலுத்துத்ம் முறை அமல்படுத்தப்படும்.

* 500 புதிய கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும்.

* 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும்.

* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு

* காஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100 வழங்கப்படும்.

* அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கர்ளுக்கு இலவச டேட்டாட்வுடன் கைக்கணினி வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில்…
Share on:

Continue Reading

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு


கருணை அடிப்படையில் சத்துணவு திட்ட அமைப்பாளராக பணி வழங்குமாறு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள பால்வார்த்து வென்றான் கிராமத்தை சேர்ந்த கோமதி என்பவருக்கு கருணை அடிப்படையில் 8 வாரத்தில் சத்துணவு அமைப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு பணி வழங்காத திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோமதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன், மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசு சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் வாதிடப்பட்டதாக கூறினார்.
Share on: