
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி. மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேசியதால் கடந்த 2018ம் ஆண்டு அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு அக்கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துகள் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்திருந்தாலும் கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுயநலத்திற்காகவும் வழக்குகளில் இருந்து தன்னையும் தன்னுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பினாமிகளையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காக 1972ல் துவக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா வழியில் #திராவிட சித்தாந்தங்களில் பயணித்த அதிமுகவை ஒட்டுமொத்தமாக பாஜகவிடம் ஒப்படைத்துவிட்டார்.
இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்திருந்தாலும் கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக தமிழகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆட்சி அமைப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். கூட்டணி ஆட்சி என்பது 1980லேயே காங்கிரஸ் மற்றும் திமுகவால் முயற்சிக்கப்பட்டு தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.
அதேபோல ஒன்றுபட்ட அதிமுக உருவாக்கப்படவேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பாமல், தன் கட்டுப்பாட்டில் மட்டுமே இந்த கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி, தன் சுயநலத்திற்காக அதிமுகவின் இறுதி யாத்திரையை துவங்கிவிட்டார். இன்றைய நாள் அதிமுக வரலாற்றில் ஒரு #கருப்பு_நாள்.
“மோடியா? லேடியா?” என்று கேட்ட #ஜெயலலிதா அம்மாவின் ஆன்மா, “சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம்” என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆன்மா மற்றும் இவர்கள் வழி வந்த ஒன்றரை கோடி தொண்டர்கள் இந்த மாபெரும் தவறை செய்த EPS & Co-க்களை மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.