ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்.. 600 பக்க சார்ஜ்ஷீட் தாக்கல் செய்தது NIA


ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 600 பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாயவு முகமை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆளுநரை தாக்க முயற்சித்தல் பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீச முயன்றார். ஆளுநர் மாளிகையின் வெளியே நின்றிருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பெட்ரோல் குண்டுகள் மாளிகைக்கு வெளியே விழுந்தன.

மேலும், அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கருக்கா வினோத்தை கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை 600 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. ஆளுநரை தாக்க முயற்சித்தல் என்ற பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கருக்கா வினோத் வழக்கில் கூடுதலாக சட்டப்பிரிவு 124 சேர்க்கப்பட்டுள்ளது.
Share on: