எப்படி நம்புறது? 30 வழக்குகளில் சிக்கியுள்ளார் செந்தில் பாலாஜி.. கிடுக்கிப்பிடி போட்ட அமலாக்கத்துறை!


செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று அதிரடியாக வாதங்களை வைத்துள்ளார் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரால் சுந்தரேசன். 30 கேஸில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரை ஜாமீனில் விட்டால் அவர் எந்த குற்றமும் செய்யமாட்டார் என எப்படி நம்புவது என கேள்வி எழுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு நேற்று வைத்த வாதங்களுக்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறபு நீதிமன்றத்தில் உள்ளன. அந்த ஆதாரங்களை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத் துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் திருத்தப்படவில்லை என விளக்கினார்.

மேலும், முந்தைய ஜாமீன் மனு தள்ளுபடிக்கு பிறகு இந்த வழக்கில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார்.

ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்கக் கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

தொடர்ந்து, வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020ஆம் ஆண்டில் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை, திருத்தவும் இல்லை. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களை மட்டுமே நம்பியுள்ளது எனக் குறிப்பிட்டார் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன்.

30 வழக்குகளில் சிக்கியுள்ளவரை ஜாமீனில் விட்டால்: மேலும், 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. சாட்சி விசாரணை துவங்க அமலாக்கத் துறை தயாராக உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதத்தை நிறைவு செய்தார்.
Share on: