செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வில் காரசாரமாக நடைபெற்ற விசாரணை!


சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.

ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறை மனு தாக்கல் செய்தும் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தலா ஒரு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்று வந்தது.

செந்தில் பாலாஜி சார்பாக மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதாடினார். செந்தில் பாலாஜி மீது 30 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டதற்கு மறுத்துள்ளார். “செந்தில் பாலாஜி மீதான அனைத்து வழக்குகளும் தேர்தல், போராட்டங்கள் தொடர்பானவை. சண்முகம் என்பவருக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறைகேட்டுக்கான முகாந்திரம் இல்லாமல் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு தயார், எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரினார்.

அமலாக்கத்துறை தரப்பில், “தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களில் எந்த திருத்தத்தையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. அனைத்தும் நேர்மையான ஆவணங்கள் தான். ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை” என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.
Share on: