தமிழக அரசுக்கு எதிராக வலுவான போராட்டம் நடத்துவோம்… அரசு ஊழியர்கள் அதிரடி எச்சரிக்கை


தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வம் கூறினார்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பேரணி நடந்தது. இந்தபேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தெ.வாசுகி தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொ) சா.டேனியல் ஜெயசிங் தலைமை வகித்தார். சிஐடியு தேசிய இரா.கருமலையான் மாநாட்டை தொடங்கிவைத்தார். தொடர்ந்துதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-வது மாநில மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதுமிருந்து 1,000 பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை.

நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு பலன்களை வழங்க வேண்டும். அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதேபோல் தமிழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 3.5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது.

ஆனால் 42 மாத காலங்கள் ஆகியும் இதுவரை ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினை 8 முறை சந்தித்து பேசியும் எந்த பயனும் ஏற்படவில்லை அரசு ஊழியர்களால்தான் 6-வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் எங்களது கோரிக்கைகள் குறித்து ஏன் மவுனமாக இருக்கிறார் என்று இதுவரையில் தெரியவில்லை. அரசு ஊழியர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மேலும், அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தனது மவுனத்தை கலைத்து, நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றுவோம்” இவ்வாறு செல்வம் கூறினார்.
Share on: