நாளை வாக்கு எண்ணிக்கை.. தமிழ்நாட்டின் 39 மையங்களிலும் பாதுகாப்பு தீவிரம்.. பணியில் 1 லட்சம் போலீசார்.


லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியாவில் 543 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக நடந்தது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என்று 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன. இதற்கான பாதுகாப்பில் பணியில் மொத்தமாக 38 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் ஈடுபடவுள்ளனர். அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4,500 பேரும் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் பணிகள் 39 மையங்களில் 43 கட்டிடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த மையங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடக்கவுள்ளது. அதில் ஒரு அறையில் 14 மேஜைகள் வீதம் சுமார் 3,300 மேஜைகள் பயன்படுத்தப்படவுள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் மேஜைகளும் பயன்படுத்தப்படும். காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளது. முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பின் 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கும்.

இதில் வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தான் நடக்கும். வழக்கம் போல் ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவு மற்றும் முன்னிலை விவரங்கள் வெளியிடப்படும். வாக்கு எண்ணும் பணிகள் நடக்கும் மையங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அட்டை வைத்துள்ள பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல் பாதுகாப்பு அறைக்கான பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுதப்படை போலீசார், அதற்கு அடுத்தபடியாக மாநில ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்பின் 3வது அடுக்கு பாதுகாப்பு பணியில் மாநில போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் தலா ஆயிரம் போலீசார் வீதம் 40 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அதேபோல் ரோந்து பணிகளில் 60 ஆயிரம் போலீசாரும், 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
Share on: