வைகை, முல்லை பெரியாற்றில் அப்படியே மாறும் நிலைமை.. தேனி மாவட்ட மக்களுக்கு கலெக்டர் வார்னிங்!


முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வைகை ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆற்றங்கரைப் பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது என்று தேனி கலெக்டர் எச்சரித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக அனைத்து ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்துக்கு நேற்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களுக்கு ஆரஞ்சு (மிககனமழை) எச்சரிக்கையும், வருகிற 20-ந்தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கையும் (ரெட் அலார்ட்) விடுத்துள்ளது.

எனவே மாவட்டத்தில் அனைத்து வட்டத்திலும் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊருணிகளில் நீர் நிரம்ப உள்ளதால் வெள்ளப்பெருக்கின் போது அவசரகால பணியினை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வைகை ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆற்றங்கரைப் பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது.

நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துவைக்கவோ மற்றும் வேறு காரணங்களுக்காகவோ நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் உள்ளாட்சி அமைப்பினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 43 இடங்களில் கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் வெள்ளம் மற்றும் மழையினால் பாதிப்புக்குள்ளாகும் மக்களை தங்கவைக்க அனைத்து அடிப்படை வசதிகளுடைய 66 தங்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பேரிடர் நிவாரண முகாம்களாக தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 04546 – 250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on: