அருந்ததியர் என ஜாதி பாக்குறாங்க.. அதிகாரிகள், கட்சியினரால் நெல்லை திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம்!


தான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் மற்றும் சொந்த கட்சியினர் ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மேயருக்கு கடிதம் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 45 இடங்களில் திமுக வென்றுள்ளது. காங்கிரஸ் 4 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வென்றது. மேலும் அதிமுக கட்சியினர் 4 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த மாநகராட்சி தற்போது திமுக வசம் உள்ளது. மேயராக சரவணன், துணை மேயராக ராஜு ஆகியோர் உள்ளனர். இந்த மாநகராட்சியில் 36வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சின்னத்தாய். இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் தான் சின்னத்தாய், தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக, மேயர் சரவணனுக்கு பரபரப்பாக கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிகாரிகள் ஜாதி பாகுபாடு பார்ப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்து பரபரப்பபை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக சின்னத்தாய் எழுதியுள்ள கடித்ததில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது வார்டில் குடிநீர் பிரச்சனை என்பது தலைவிரித்தாடுகிறது. 6 மாதங்களுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு குடிநீர் ஏற்றுவது மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் உரிமம் வழங்கப்பட்டது. அன்று முதல் வார்டில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதிகாரிகள் மற்றும் சொந்த கட்சியினர் ஜாதி பாகுபாடு காட்டுகின்றனர். அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த நான் மட்டும் தான் இப்போது கவுன்சிலராக உள்ளேன். ஆனாலும் கூட லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது என்னை அவமானப்படுத்தினார்கள்.

மேலும் நான் அருந்ததியர் என்பதால் என் வார்டில் திட்டமிட்டு குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். ஜாதி பார்த்து குடிநீர் பிரச்சனையை தீர்க்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். மக்களுக்கு பணியாற்ற முடியாததால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ எனக்கூறி அதற்கான கடிதத்தை மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு அவர் அனுப்பி உள்ளார்.

மேலும் அதற்கான கடிதத்ததை அவர் வாட்ஸ்அப் குழுவிலும் பகிர்ந்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தான் சம்பவம் பற்றி அறிந்த பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப், சின்னத்தாய் மற்றும் அவரது கணவரை அழைத்து சமாதானம் பேசி வருகிறார்.
Share on:

17 வயதில் FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழக வீரர் குகேஷ் சாதனை!


கனடாவில் நடைபெற்ற FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் டி குகேஷ் 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் சாம்பியன் வென்ற 2 ஆவது வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கனடாவில் டொரண்டோவில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, இதில், இந்தியாவின் சார்பில் இளம் கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி ஆகியோரும் பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி, ஹொனேரு ஹம்பி ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில், 14 சுற்றுகள் கொண்ட தொடரின் இறுதிப் போட்டியில் 17 வயதான குகேஷ், அமெரிக்காவின் கிஹாரு நகமுராவை எதிர்கொண்டார். இந்தப் போட்டி டிராவில் முடியவே இருவரும் ½ புள்ளிகள் பெற்றனர். இதே போன்று மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவும், ரஷ்யாவின் இயான் நெப்போம்னியாச்சியும் மோதினர். இந்தப் போட்டியும் டிராவில் முடிந்தது.

இதன் காரணமாக புள்ளிகள் அடிப்படையில் குகேஷ் 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, 2024 FIDE கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் சாம்பியனாக வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நகமுரா 8.5 புள்ளிகள் பெற்று 2ஆவது இடம் பெற்றார். இந்த வரிசையில் இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5ஆவது இடம் பெற்றார். இதன் மூலமாக முதல் முறையாக குகேஷ் கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளார்.

இளம் வயதில் சாம்பியனான குகேஷிற்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இளம் வயதில் சாம்பியனானதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் எப்படி விளையாடி கடினமான சூழ்நிலைகளைக் கையாண்டீர்கள் என்பதில் நான் தனிப்பட்ட முறையில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
Share on:

ஓ.பி.எஸ்., டிடிவி நிலையை எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது – கே.சி.பழனிச்சாமி


பா.ஜ.கவுக்கு ஆதரவளித்ததால், ஓ.பி.எஸ்., டிடிவியை அதிமுக தொண்டர்கள் புறந்தள்ளி உள்ளனர். அதே நிலையை எடப்பாடி பழனிசாமியும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் உணர்த்துவது என்ன? என்னும் தலைப்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

திமுக இந்த தேர்தலில் 35 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறலாம் ஆனால் அது மக்களின் நம்பிக்கையை பெற்றதால் அல்ல. சரியான மாற்று கட்டமைப்பு ஏற்படாததால் மட்டுமே. திமுகவின் அடிப்படை தொண்டர்கள் கூட இந்த ஆட்சியால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை. எல்லாமே மையப்படுத்தப்பட்டு விட்டது. எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்று மன வருத்தத்தில் உள்ளார்கள்.

பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் ஆயிரம் ரூபாய் போன்றவை தாக்கத்தை கொடுத்தாலும், சொத்துவரி, மின்கட்டண உயர்வு, ஊழல், போதைப்பொருள் புழக்கங்கள் அதிகரிப்பு , கட்டுப்பாடற்ற மது விற்பனை, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது 90 நாளில் நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏதோ ஒரு மறைமுக ஒப்பந்தம் இவர்களுக்குள் ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இவை மக்கள் மத்தியில் கடுமையான எதிர் விளைவுகளை இந்த அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, சீனியர்களை ஓரம் கட்டி, தான் மட்டுமே பாஜக என்றும், தான் ஒரு மாற்றத்துக்கான தலைவர் என்றும் சமூக வலைதள பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து தன்னை முன்னிறுத்திக்கொண்டார். அவர் வெற்றியடைய பயணித்த பாதை மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறுவதாக அமையவில்லை. ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்று தன்னை உயர்த்தி பிடிக்க முயன்றும் கோவையில் மார்ட்டின் போன்றவர்களிடம் பாஜக பணம்பெற்றது மற்றும் தமிழகம் முழுக்க தொழிலதிபர்களிடம் அழுத்தம் கொடுத்து நிதி பெற்றதும், வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அறிவித்தாலும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் தொழிலதிபர்கள் மூலமாக பாஜகவாலும் திமுகவிற்கு இணையாக பணம் செலவிடப்பட்டது. இதன்மூலம் இவரும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதாக தான் பொதுமக்களால் பார்க்கப்படுகிறது.

ஒரு வேட்பாளராக இருக்கிறவர் தேர்தல் காலத்தில் என்ன பேச வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது கூட புரியாமல் இன்னும் தன்னை ஒரு போலீஸ் அதிகாரியாக நினைத்துக் கொண்டு “உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” என்பதும் “தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும்” , “ஓ.பி.எஸ் தலைமைக்கு அதிமுக சென்றுவிடும்” , “தினகரன் கைக்கு அதிமுக சென்றுவிடும்” என்கிற தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியது மற்றும் பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகளோடு தினசரி சண்டையிடுவதை மட்டுமே செய்தார். மத்தியில் ஆளுகிற கட்சியின் தமிழக தலைவர் போட்டியிடுகின்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலை கூட சரிபார்க்காமல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டுவது வினோதமாக உள்ளது. #கோவை மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்களை பற்றி எதுவும் பெரிதாக பேசவில்லை. அந்த வகையில் அவர் மக்களின் நம்பிக்கையை பெற தவறிவிட்டார்.

அதிமுக தலைமையைப் பொறுத்தவரை பாஜகவை எதிர்த்து தனித்து போட்டி என்கிற ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும். வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்திகள், சமூக வலைதளம், ஊடகங்கள், பத்திரிகைகள் போன்ற பிரச்சார களம் கட்டமைக்கப்படவில்லை. தேர்தலில் புதியவர்கள் என்கிற கேள்விக்கு, அம்மா காலத்தை போல என்று சொன்னாலும் கூட எடப்பாடியார் தான் ஒன்றும் எம்.ஜி.ஆரோ, அம்மாவோ அல்ல என்பதை மறந்துவிட்டார்.

பொருளாதார பின்புலமே பிரதானம் என்கிற அடிப்படையில் கட்சிக்கு புது வரவுகளுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும் பணபலத்தின் அடிப்படையில் வாய்ப்பு கொடுத்தது களம் கடுமையான போட்டியை சந்திக்கிற பொழுது இன்னும் கடுமையாக போராடுவதற்கு பதிலாக பின்வாங்கிவிட்டார்கள். கட்சி உணர்வாளர்களாக இருந்திருந்தால் கடும் போட்டியிலும் கடைசிவரை போராடியிருப்பார்கள்.

பாஜகவில் பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா மற்றும் கூட்டணி பிரபலங்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அதே போல திமுகவில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், உதய நிதி, கனிமொழி மற்றும் கூட்டணி பிரபலங்கள் பிரச்சாரம் செய்தார்கள். இவர்கள் எல்லாம் ஊடகம் மற்றும் சமூக வலைதளத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் தான் மட்டுமே அதிமுக என்று நிரூபிப்பதற்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி முயற்சித்தாரே ஒழிய தேர்தலில் நாற்பதிலும் வெல்லவேண்டும் என்கிற முனைப்பு இல்லை. மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கட்சிக்கு பலம் சேர்க்கிற கேசிபி போன்ற பலர் இருந்தும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி தனது போட்டியாளர்கள் ஒதுக்கப்பட்டே வைத்திருக்கப்பட வேண்டும் என்றும், தன் தலைமையை நிலை நிறுத்திக் கொள்வதிலும் மட்டுமே அம்மா மறைந்து 7 ஆண்டுகள் கழித்தும் இன்னும் போராடுகிறார். உட்கட்சி பிரட்சனையில் தன் போட்டியாளர்களை ஒதுக்கிவிட்டு தலைமையை மட்டும் கைபற்றிவிட்டாலே தேர்தல்களில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைக்கிறார். ஆனால் அந்த உட்கட்சி போட்டியினால் மட்டுமே கட்சி பலவீனமாகிறது என்பதை உணர தவறுகிறார். தான் மீண்டும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதில் கூட தவறில்லை. ஆனால் தான் மட்டுமே தான் அதிமுக கட்சி என்று நிரூபிக்க மட்டுமே அவர் கட்சியை வழிநடத்துவதும் அதனால் கட்சியினுடைய வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுவதும் பொதுமக்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் ரசிக்கவில்லை.

பாஜகவை கடுமையாக எதிர்க்க தவறியது, மோடி,அமித்ஷா அவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்வைக்காதது போன்றவை எதிர்மறை விளைவுகளை கொடுத்தது. 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான வாக்குகளையும், 3 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகளையும் மடை மாற்றி அதிமுகவுக்கு கொண்டுவர, எம்ஜிஆர் கால முன்னணியினர்களை களம் இறக்கியிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் இன்னும் 18 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் களம் தயாராகிவிடும் அதை எதிர்கொள்ள கட்சியை ஒன்றுபடுத்தி உட்கட்சி பிரச்சினைகளை சரி செய்து வலிமையான அதிமுகவை கட்டமைக்க வேண்டும். உட்கட்சி போட்டியாளர்களை வீழ்த்த பாஜகவோடும், திமுகவோடும் அனுசரித்து செல்வதை விட, உட்கட்சி போட்டியாளர்களிடம் அனுசரித்து பாஜகவையும் திமுகவையும் வீழ்த்துவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சிக்க வேண்டும் அது தான் தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் விரும்புவது, அதுவே அதிமுகவின் எதிர்காலத்திற்கும் சிறந்தது. இதை சிந்திப்பாரா எடப்பாடி?

எதிர்காலம் என்பது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஆன போட்டியாக மட்டுமே அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் அமையும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜகவின் அறிவுஜீவிகள் வாக்கு சதவீதத்தில், கூட்டல் கழித்தல்களை கணக்கிட்டு பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்தால் வெற்றி பெற்று விடலாம் என்கிற சித்தாந்தத்தை புகுத்துவார்கள். ஒருவேளை மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால், அதிமுகவில் மீண்டும் ஒரு உட்கட்சி குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பார்கள். முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். அதனால் மீண்டும் பாஜக உறவு எந்த சூழ்நிலையிலும் வேண்டாம் என்கிற முடிவை மாற்றிக்கொள்ள கூடாது. ஓ.பி.எஸ், தினகரன் பாஜகவோடு இணைந்து செயல்பட்டதற்கு பிறகு அவர்களை அதிமுக தொண்டர்கள் புறக்கணித்துவிட்டார்கள். மீண்டும் பாஜக உறவு என்றால் அதே நிலை எடப்பாடிக்கும் ஏற்படும்.

திராவிட கட்சிகள் தங்களை சுதாரித்துக் கொள்வதிலும் தமிழகத்தை தொடர்ந்து திராவிட பூமியாக பண அரசியலை தாண்டி நேர்மையான ஊழல் அற்ற, மக்கள் நலனில் கவனம் செலுத்துகிற, தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்கிற சிந்தனையை நோக்கி பயணிக்க வேண்டும். அண்ணாமலைக்கு நடுநிலை வாக்காளர்களிடமும், இளம் வாக்காளர்களிடமும் ஏற்படுகிற வரவேற்பு என்பது ஒரு மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு. ஆனால் அவர் அதற்க்கு தகுதியானவராக நடந்துகொள்ளவில்லை என்பது வேறு, ஆனால் அந்த எதிர்பார்ப்பை திராவிட சக்திகள் பூர்த்தி செய்ய முன்வரவேண்டும். அதிகார பலத்தாலும், பணபலதாலும் மட்டுமே அதை வெற்றிகொள்ள முயலாமல் மக்கள் சக்தியால் இளைஞர்கள், நடுநிலையாளர்கள் மனதை வெற்றிகொண்டு எதிர்வரும் தேர்தல்களை சந்திக்க திராவிட இயக்கங்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Share on:

மாமியார் பாஜக எம்எல்ஏ தெரிந்தும்.. EPS-ஆல் கொண்டுவரப்பட்ட ஈரோடு வேட்பாளர் இன்று விலைபோய்விட்டாரா?கேசி.பழனிசாமி


ஈரோடு தொகுதியில் அதிமுகவினரை முழுவதுமாக வேட்பாளர் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள கே.சி.பழனிசாமி, உங்கள் கட்சி, உங்கள் சின்னம் வெற்றிபெற வேண்டும் என்றால் நீங்கள் செலவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கட்சிக்காரர்களிடம் கூறி வருவதாக தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் ஈரோடு தொகுதி வேட்பாளர் தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி வெளியிட்ட சமூகவலைதள பதிவில், நம்பி ஏமாந்தாரா? அல்லது நம்பிக்கை துரோகம் செய்தாரா? எடப்பாடி பழனிசாமி என கேள்வி எழுப்பியுள்ளார்.

* ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு உறுதியாளிக்கப்பட்டு EPS-ஆல் கொண்டுவரப்பட்டவர் இன்று திமுகவிடம் விலைபோய்விட்டாரா?

* கடந்த 2 நாட்களாக கட்சிக்காரர்களை முழுமையாக புறக்கணித்தும் தான் மிகப்பெரிய தொகையை கொடுத்தே சீட்டு பெற்றதாக்கவும் அதனால் தேர்தல் செலவுகளுக்கு தன்னை யாரும் அணுக கூடாது உங்கள் கட்சி, உங்கள் சின்னம் வெற்றிபெற வேண்டும் என்றால் நீங்கள் செலவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கட்சிக்காரர்களிடம் ஏன் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக வேட்பாளர் கோபப்படுகிறார்.

* சரி செய்ய முயற்சித்த முன்னாள் அமைச்சர்களிடமும் எனக்கு அழுத்தம் கொடுத்தால் நான் மாவட்ட ஆட்சியரை சந்தித்து போட்டியிலிருந்து விலகி விடுவேன் என்று எச்சரித்ததாக செய்திகள் வருகிறது.இந்த வேட்பாளரின் தாயார் 1991 தேர்தலில் #அதிமுக சார்பாக MP-யாக இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று விட்டு பிறகு பாஜகவில் இணைந்துவிட்டார். இவரது மாமியார் தற்போதைய பாஜக MLA இது எல்லாம் தெரிந்தும் ஏன் எடப்பாடி பழனிசாமி இவருக்கு வாய்ப்பு வழங்கினார்?

* அடிப்படைக் கட்சி உணர்வும், விசுவாசமும், தலைவர்கள் மீதான அபிமானமும், சின்னம் மற்றும் தொண்டர்கள் மீது பற்றுதல் இல்லாமல் பொருளாதார அடிப்படையில் ஒரு வியாபாரம் போல சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தின் விளைவு! தன்னை ஒரு கொடைவள்ளலாக மக்கள் மத்தியில் உருவகப்படுத்தி விட்டு கடுமையான போட்டியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை என்றதும் இவர் வாய்ப்புக்காக கொடுத்ததையும் இதுவரை செலவு செய்ததையும் எதிர் தரப்பிடம் பெற்றுக் கொண்டதால் இந்த திடீர் மனமாற்றமா?

* கட்சிக்காரர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் கவனிப்பு வேலைகள் நடைபெறும் என்று அறிவித்துவிட்டு இப்போது வேட்பாளர் பின் வாங்குவதால் கட்சிக்காரர்கள் ஏதோ ஏமாற்றி விட்டார்களோ என்று அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் கெட்ட பெயர் வாங்குகிறார்கள். மேலும் வேட்பாளர் கொடுத்துவிடுவார் என்று நம்பி இதுவரை கடன் வாங்கி செலவு செய்த கட்சிக்காரர்களும் தற்பொழுது செலவு செய்ததை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். இது எதிர்காலத்தில் கட்சிக்கு ஒரு அவபெயரை ஏற்படுத்தும் அதே போல் இந்த செயல் இதை ஒட்டி இருக்கிற திருப்பூர், பொள்ளாச்சி, நாமக்கல், கரூர் போன்ற தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவது போல் இந்த வேட்பாளரின் செயல் அமைந்துவிட்டது.

* எடப்பாடி பழனிசாமியும் கே.சி.பழனிசாமியும் நின்று மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இதே நாடாளுமன்ற தொகுதியில் இன்று அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்பதற்கு காரணம் அரசியலில் வியாபார யுக்தியா? அல்லது கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்த தலைமையின் தவறான முடிவா? தகுதியானவர்கள் பலர் இருந்தும் தன்னுடைய சுயநலம் மற்றும் ஆணவப்போக்கால் கட்சியை வழி நடத்துகிற பக்குவம் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டதா? தங்களை திருத்திக்கொள்வார்களா ? எடப்பாடியும், தங்கமணியும், வேலுமணியும். என கேசி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on:

அதிமுகவிற்கு மறக்க முடியாத இரண்டு லோக்சபா தேர்தல்கள்.. எம்ஜிஆர் – ஜெயலலிதா- எடப்பாடி வரை வாக்கு சதவீதம்


எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, முதல் முதலாக லோக்சபா தேர்தலை சந்தித்த 1977 முதல் 2024 வரை சந்தித்த தேர்தல்களில் எத்தனை வாக்கு சதவீதம் வாங்கியது என்பது பற்றியும், வரலாற்றிலேயே குறைந்த வாக்கு சதவீதம் எப்போது வாங்கியது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, அவரது தலைமையில் 1977ம் ஆண்டு சந்தித்த முதல் லோக்சபா தேர்தலில், 30.04% வாக்குகள் பெற்றதுடன் 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து நடந்த 1980 தேர்தலில் 25.38 சதவீதம் வாக்குகள் பெற்று 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. 1984ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 12 இடங்களில் வென்று 18.36 சதவீதம் வாக்குகளை பெற்றது.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 17.2 சதவீதம் வாக்குகளை பெற்று 11 இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற காரணமும் இருக்கிறது.. ஜெயலலிதா முதல்வரான 1991 தேர்தல் வரை அதிமுக குறைவான இடங்களிலேயே காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு வந்தது. அதன் பின்பு மெல்லமெல்ல அதிமுக போட்டியிடும் தொகுதிகள் அதிகரித்த காரணத்தால் வாக்குசதவீதம் கூடியது. 1991ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 18.1 சதவீதம் வாக்குகளுடன் 11 இடங்களில் வென்றது..

ஆனால் 1996ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெறும் 7.84% வாக்குகள் மட்டுமே பெற்றதுடன் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்தது. இதுவே 1977ம் ஆண்டு தொடங்கி 2024 வரையிலான அதிமுக வரலாற்றில் பெற்ற குறைந்தபட்ச வாக்குசதவீதம் ஆகும்.

1998-ல் முதன்முறையாக பாஜக உடன் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி வைத்து தேர்தலில் வென்றது. அப்போது 18 இடங்களில் வென்றதுடன், 25.89 சதவீதம் வாக்குகளை அதிமுக பெற்றது. மத்திய அமைச்சரவையில் முதன்முறையாக அதிமுக பங்கெடுத்தது. ஆனால் ஓராண்டில் பாஜக ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்துவிட்டார்.. அதன்பின்பு 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் 10 இடங்களில் வென்ற அதிமுக 25.68 சதவீதம் வாக்குகளை பெற்றது. 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.. அதிமுக 2004ல் பெற்ற வாக்கு சதவீதம் 29.77 சதவீதம் வாக்குகளை பெற்றது.

2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 22.88 சதவீதம் வாக்குகளுடன் 9 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. 2014ம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தமாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக களம் கண்டது. ‘மோடியா லேடியா’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டில் தனித்து களம் கண்ட ஜெயலலிதா, 37 இடங்களில் வென்றதுடன் 44.92% வாக்குகள் பெற்றார். இதுவே தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக பெற்ற அதிகபட்ச வாக்கு சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை லோக்சபா தேர்தல் வரலாற்றில் எந்தவொரு கட்சியும் இவ்வளவு பிரமாண்ட வெற்றியை இதுவரை பெற்றதில்லை .

இந்நிலையில் 2016ல் ஜெயலலிதா மறைந்த நிலையில், 2019ல் பாஜக உடன் எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக கூட்டணி வைத்தது. அந்தத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. 19.39% வாக்குகள் பெற்று ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. 2024 தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொள்கிறது. இந்ததேர்தலில் எத்தனை இடங்களில் அதிமுக வெல்லும்.. எத்தனை சதவீதம் வாக்குகளை வாங்கும் என்பதை அறிய ஜூன் 4ம்தேதி வரை காத்திருக்க வேண்டும்.
Share on:

தமிழகத்தில் 19ஆம் தேதி காலை, மதியம் சினிமா காட்சிகள் ரத்து.. தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு.


தமிழகத்தில் லோக்சபா தேர்தலையொட்டி 19ஆம் தேதி காலை மற்றும் மதியம் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கிடையே 4 முனை போட்டி நிலவுகிரது. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

அது போல் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

தமிழகம், புதுவையில் ஒரே நாளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சியினர், தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் புதுவையில் ஒரு தொகுதியிலும் (இருப்பதே ஒன்றுதான்) வென்றது.

இது போன்றதொரு வெற்றியை எதிர்பார்த்து திமுக கூட்டணி காத்திருக்கிறது. இதை முறியடிக்க பாஜகவும் அதிமுகவும் போராடி வருகிறது. இந்த நிலையில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது போன்றதொரு வெற்றியை எதிர்பார்த்து திமுக கூட்டணி காத்திருக்கிறது. இதை முறியடிக்க பாஜகவும் அதிமுகவும் போராடி வருகிறது. இந்த நிலையில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விடுமுறை அறிவிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. அது போல் 100 சதவீத வாக்களிப்பை ஊக்குவிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அது போல் 100 சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்தும் நோக்கில் அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் 19ஆம் தேதி காலை, மதியம் காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
Share on:

செம்ம போட்டி! பறக்கப் போவது செங்கொடியா? திராவிட அதிமுக கொடியா? வலதுசாரி பாஜக கொடியா?


பின்னலாடை நகரமான திருப்பூர் தொகுதியில் திமுக- இடதுசாரிகள் மற்றும் அதிமுக வாக்கு வங்கி அதிகம். பாஜகவின் நம்பிக்கைக்குரிய தொகுதிகளில் ஒன்றாகவும் திருப்பூர் இருந்து வருகிறது.

திருப்பூர் லோக்சபா தொகுதியில் உள்ளடங்கிய சட்டசபை தொகுதிகள்: பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு. திருப்பூர் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களில் அதிமுகவும் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான சிபிஐ வென்றது.

திருப்பூர் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 15,98,443; ஆண்கள்- 7,86,475; பெண்கள்- 8,11,718; 3-ம் பாலினத்தவர் 250

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்: சிவசாமி(அதிமுக) 2,95,731 கார்வேந்தன் (காங்கிரஸ்) 2,10,385 பாலசுப்பரமணியன்(கொமுபே) 95,299 தினேஷ்குமார்(தேமுதிக) 86,933

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் சத்தியபாமா(அதிமுக) 4,42,778 செந்தில்நாதன்(திமுக) 2,05,411 தினேஷ்குமார்(தே.மு.தி.க) 2,63,463 ஈவிகேஎஸ் இளங்கோவன்(காங்கிரஸ்) 47,554

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

கே. சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்) 5,08,725 ஆனந்தன்(அதிமுக) 4,15,357 சந்திரகுமார்(மக்கள் நீதி மய்யம்) 64,657 செல்வம்(அமமுக) 43,816 ஜெகநாதன்(நாம் தமிழர் கட்சி)42,189

2024-ல் களம் காணும் வேட்பாளர்கள்

கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அருணாச்சலம் (அதிமுக) முருகானந்தம் (பாஜக) சீதாலட்சுமி( நாம் தமிழர் கட்சி)

திருப்பூர் தொகுதி நிலவரம்: பின்னலாடை நகரம் என புகழ்பெற்றது திருப்பூர். திருப்பூர் நகரத்தைத் தவிர இதர பகுதிகளில் விவசாயம்தான் பிரதானமாக உள்ளது. நெல், கரும்பு, வாழை, தென்னை, பருத்தி உள்ளிட்டவை பிரதான சாகுபடி. தயிர், வெண்ணெய் உற்பத்தி, விசைத்தறித் தொழிலும் இங்கு முதன்மையானவை. வட மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாவட்டத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் இங்கே குடியேறி உள்ளனர். திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள்தான் மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பு, திருப்பூர் தொகுதியை பொறுத்தவரை திமுக, சிபிஐ, அதிமுக வலுவான வாக்கு வங்கியைக் கொண்டவை. பாஜகவும் இங்கு கணிசமான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் நம்பிக்கைக்குரிய தொகுதிகளில் ஒன்றாக திருப்பூர் இருந்து வருகிறது. ஆனால் இந்த தேர்தலில் பாஜக பெறும் வாக்குகள்தான் இந்த நம்பிக்கையின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும். இடதுசாரி சிபிஐயும் வலதுசாரி பாஜகவும் நேரடியாக களம் காண்கின்றன. திமுக- இடதுசாரிக்கு இணையான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவும் சவால்விடுக்கும் வகையில் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறது. தமிழர் நலன் பிரச்சனைகள், சூழல் சார்ந்த பிரச்சனைகளை பேசுகிறது நாம் தமிழர் கட்சி.
Share on:

அதிமுகவை பற்றி பேச அண்ணாமலை யார்? பாஜகவை வளர்க்க அவர் கவனம் செலுத்தல.. பொங்கிய கேசி பழனிசாமி.


அதிமுகவை சிதைப்பதிலேயே அண்ணாமலையின் கவனம் இருப்பதாகவும், பாஜக வளர அவர் ஒன்றும் செய்யவில்லை என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி கே சி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்தமுடியவில்லை என்கிற விரக்தியில் தான் இப்படி அண்ணாமலை பேசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக கூட்டணி அமைக்காமல் அதிமுக இந்த லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. இதையடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை நேற்று பேசிய நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். இதனிடையே, இன்று தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலுகு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினரும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ அண்ணாமலையை விமர்சித்து கருத்து கூறினர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி கே சி பழனிசாமி, அதிமுகவை பற்றி பேச அண்ணாமலை யார்? என்றும், அண்ணாமலை அதிமுகவை சிதைப்பதிலேயே கவனம் செலுத்துவதாகவும், பாஜக வளர அவர் ஒன்றும் செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அண்ணாமலை இன்று அதிமுக -வை பற்றி கூறியுள்ளது!

* ஜூன் 4-க்கு பிறகு அதிமுக தினகரன் வசமாகும்.
* அதிமுக முன்பே தினகரன் பக்கம் சென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வராகி இருக்க மாட்டார்.
* அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பக்கமே இருக்கிறார்கள்.
* விரைவில் இ.பி.எஸ் தலைமையிலான அதிமுக இருக்காது.

அம்மா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சசிகலா, தினகரன் குடும்பத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திலிருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் தமிழக வாக்காளர்களும் குரல் கொடுத்தார்கள். நான் தேர்தல் ஆணையத்தில் அதற்கு வழக்கு தொடுத்திருந்தேன்.

ஓ.பி.எஸ் அதன் பிறகு தர்மயுத்தம் செய்தார். அம்மாவால் 2011-ல் வெளியேற்றப்பட்ட சசிகலாவின் குடும்பத்திடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று போராடி அதில் தொண்டர்கள் வெற்றிகண்டார்கள். அதற்கு பிறகு EPS & OPS இருவரும் இணைந்து தொண்டர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்கிற விதியை பாஜக ஆதரவோடு திருத்தி பொதுக்குழுவால் தலைமை, ஒற்றை வாக்கு இரட்டை தலைமை மற்றும் 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவேண்டும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவேண்டும் என்கிற எல்லா EPS & OPS நடவடிக்கைகளுக்கு பாஜக துணைபோனது.

ஆனால் இன்று அண்ணாமலை இந்த கருத்துக்களை சொல்வது யார் பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறார்களோ, அதிமுகவை பாஜகவிற்கு துணை அமைப்பாக கொண்டுசெல்ல யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்கள் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என்கிற பாஜகவின் முயற்சியை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் ஒன்றுபட்டு முறியடிப்பான்.

அண்ணாமலை யார்? அதிமுகவின் தலைமையை பற்றி பேசுவதற்கு, அதற்கு என்ன அருகதை இருக்கிறது அண்ணாமலைக்கு? அதிமுகவை சிதைப்பதிலேயே அண்ணாமலை கவனம் செலுத்துகிறாரே ஒழிய பாஜகவை வளர்ப்பதில் அல்ல. இந்த தேர்தலில் தலைகீழாக நின்றும் அதிமுக வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை. பாஜக வாக்கு வங்கியை உயர்த்தமுடியவில்லை என்கிற விரக்தியின் வெளிப்பாடு தான் அண்ணாமலையின் இந்த அர்த்தமற்ற பேச்சுக்கள்.

அதிமுகவை மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவோம். தொண்டர் பலத்தை உறுதிப்படுத்துவோம் தேர்தலுக்கு பிறகு தொண்டர்களால் ஒரு தலைமையை உருவாக்க முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share on:

அழியபோவது அதிமுகவா? அண்ணாமலையின் ஆனவமா? – KC Palanisamy


* பிரதமர் மோடி பல்லடத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும் அம்மா அவர்களையும் புகழ்ந்து பேசுகிறார் அப்பொழுது அண்ணாமலை மோடியிடம் சொல்ல வேண்டியது தானே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மாவும் தேவை இல்லை என்று. பிரதமருக்கு அவர்களின் அருமை தெரிகிறது ஆனால் அண்ணாமலைக்கு இன்னும் அந்த அரசியல் முதிர்ச்சி இல்லை.

* பாஜகவால் தான் அதிமுக சென்ற சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை வென்றது இல்லையென்றால் 30 தொகுதிகளுக்கு கீழ்தான் வென்றிருக்கும் என்கிறார் அண்ணாமலை அப்படி என்றால் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலையை ஏன் அந்த பாஜக வாக்காளர்கள் தோற்கடித்தார்கள்? அதிமுக கூட்டணியில் வென்ற 4 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை சந்தித்தால் பாஜகவின் பலம் தெரியும். இதுவரை திமுக மற்றும் அதிமுக தயவில் மட்டுமே சில தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

* அண்ணாமலையால் பாஜக வளரவில்லை! கோவையில் 2014- ல் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தார் என்று தானே அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

* கடைசி நிமிடம் வரை எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று கதவு திறந்து இருக்கிறது என்றெல்லாம் போராடியது பாஜக தேசிய தலைமை வேண்டுமானாலும் அண்ணாமலையை தலைமை பதவியில் இருந்து நீக்கி விடுகிறோம் என்கிற உத்தரவாதம் எல்லாம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிமுக தொண்டர்கள் வெற்றியோ தோல்வியோ பாஜகவோடு உறவு வேண்டாம் என்பதில் மிகத் தெளிவாக உறுதியோடு பயணிக்கிறார்கள்.

* தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம் மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவு கொடுக்கவில்லை என்கிறார். ஆனால் தமிழகத்திலிருந்து எவ்வளவு வரி மத்திய அரசுக்கு வந்தது அதற்கு உண்டான முறையான பங்கீடு வரவில்லை என்பதுதான் தமிழக மக்களின் குற்றச்சாட்டு இதில் மற்ற மாநிலங்களுக்கு கொடுத்தது பற்றி பேசுவது சரியான ஒப்பீடு அல்ல.

* தேர்தல் முடிந்து பாருங்கள் ஓ.பி.எஸ் கைக்கு கட்சி வந்துவிடும் என்கிறார். அண்ணாமலை யார்? அதிமுகவின் தலைமையை முடிவு செய்வதற்கு. தொண்டர்களால் தான் தலைமை என்ற புரட்சித்தலைவரின் விதியை மற்றிகொடுததே நீங்கள் தானே. ஓ.பி.எஸ் உடன் பயணித்தவர்கள் எவ்வளவு பேர் அவரது பாஜக நிலைப்பாட்டிற்காக இன்று அவருடன் தொடர்கிறார்கள்? அதிமுக உணர்வாளர்கள் அவரை விட்டு விலகி விட்டார்கள்.

* கட்சி முக்குலத்தோர் கவுண்டர் என சாதி ரீதியாக பிரிந்து இருக்கிறது என்கிறார் அண்ணாமலை ஆனால் அந்த பிரித்தாலும் சூழ்ச்சியை முன்னெடுத்ததே பாஜக தானே. ஒரு பிரதம அமைச்சரே “நல்ல சாதிய பின்புலம் உள்ளவர் அண்ணாமலை” என்று சொல்வதில் இருந்தே சாதிய அரசியல் செய்வது யார்? என்பது தெரிகிறது.

* முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்கிறீர்கள் அந்த ஊழல்வாதிகளை பாதுகாப்பதே நீங்கள் தானே. ADMK Files வெளியிடுவேன் என்றீர்களே ஏன் இன்றுவரை அதை வெளியிடவில்லை? அதற்காக பெறப்பட்ட தொகை எவ்வளவு? அந்த ஊழல்வாதிகள் மீது என்ன காரணத்தினால் இன்று வரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? உங்களுக்கும் அதில் பங்கு இருக்கிற காரணத்தால் தான் இன்று வரை அதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா? நீங்கள் மாட்டினிடம் பணம் வாங்கியது என்ன ஆனது மாநில தலைவராக இருந்து பெற்றுக் கொடுத்தது அண்ணாமலை தானே அது நேர்மையாக வந்த பணமா?

* திமுகவை எதிர்க்க மட்டுமே அதிமுக துவக்கப்பட்டது என்றால் தமிழக அரசியலின் அரிச்சுவடியே அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று தான் அர்த்தம். அண்ணா காலத்திலேயே அடித்தட்டு மக்களிடம் திராவிட உணர்வை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். திமுக திசை மாறிய பொழுது அண்ணா வழியிலான திராவிட இயக்கமாக அதிமுகவை உருவாக்கியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

* தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் கோவையில் போட்டியிடும் அண்ணாமலை பாஜக 10 ஆண்டுகளில் கோவைக்கு செய்த நலத்திட்டங்கள் என்ன? அண்ணாமலை வெற்றி பெற்றால் பாஜக ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்த போகும் திட்டங்கள் என்ன? இதுகுறித்து பேச எதுவுமே இல்லை என்பதால் அதிமுகவை குறைகூறி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார். அண்ணாமலை கோவையில் வெற்றிபெற்றால் கோவையில் மத ரீதியிலான மற்றும் சாதி ரீதியிலான பதற்றத்தை உருவாக்கிவிடுமோ என்கிற அச்சத்தை அண்ணாமலை மேலும் வழுபடுத்தியிருகிரார். சாதி, மத அரசியலை மட்டுமே கையிலேடுக்கிறார் வளர்ச்சிக்கான திட்டங்களை பற்றி பேச மறுக்கிறார்.
Share on:

தேர்தல் விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலையொட்டி ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது . இந்த விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

17வது லோக்சபாவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெற போகிறது. இதையொட்டி 18வது லோக்சபா உறுப்பினர்களை தேர்வு லோக்சபா தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற போகிறது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னமும் 10 நாட்களே வாரங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாக களம் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அனலுக்கும் வெயிலுக்கு நடுவே பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது.. ஒருபக்கம் வேட்பாளர்கள் செலவு செய்ய பணத்தை ரொக்கமாக கொண்டு செல்வார்கள் என்ற சந்தேகத்தில் மாநிலம் முழுவதும் பறக்கும்படை தீவிரமாக சோதனை செய்து வருகிறது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 50000 பணத்தை தாண்டி எடுத்த சென்றால், செங்கல்பட்டை கூட தாண்ட முடியாத அளவிற்கு கடுமையான சோதனைகள் நடக்கிறது. எல்லா மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. பல கோடி பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் தினமும் கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

தேர்தல் விதிமுறை என்ன: ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை நாள் எண். ECI/PN/23/2024 நாள் 16.03.2024-ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (16.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, “பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் ஓட்டு அளிக்க தூண்டுவதனை தடுத்திடும் பொருட்டும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள், போதைப்பொருட்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லும் நேர்வுகளில் மேற்படி குழுக்களால் ஆய்வின் பொழுது வாக்காளர்களைக் கவரும் வகையில் கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.

எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லும் போது பொதுமக்கள், வணிகர்கள் அதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் கொண்டு செல்லவேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் மேற்கண்ட இனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட இனங்களுக்கான நபர்கள் உரிய ஆதார ஆவணங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள அறை எண்: 186-இல் உள்ள மேல்முறையீட்டு அலுவலரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.

பறிமுதல் செய்யப்படும் பொழுது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இனங்களில் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே உரிய வழிமுறைகளை பின்பற்றி பணம், பொருட்கள் திரும்ப வழங்கப்படும். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மேற்சொன்ன விதிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலம் வரை ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும்.. அந்த வகையில் இந்த விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Share on: