தேர்தல் விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலையொட்டி ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது . இந்த விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

17வது லோக்சபாவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெற போகிறது. இதையொட்டி 18வது லோக்சபா உறுப்பினர்களை தேர்வு லோக்சபா தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற போகிறது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னமும் 10 நாட்களே வாரங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிரமாக களம் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அனலுக்கும் வெயிலுக்கு நடுவே பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது.. ஒருபக்கம் வேட்பாளர்கள் செலவு செய்ய பணத்தை ரொக்கமாக கொண்டு செல்வார்கள் என்ற சந்தேகத்தில் மாநிலம் முழுவதும் பறக்கும்படை தீவிரமாக சோதனை செய்து வருகிறது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 50000 பணத்தை தாண்டி எடுத்த சென்றால், செங்கல்பட்டை கூட தாண்ட முடியாத அளவிற்கு கடுமையான சோதனைகள் நடக்கிறது. எல்லா மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. பல கோடி பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் தினமும் கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

தேர்தல் விதிமுறை என்ன: ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை நாள் எண். ECI/PN/23/2024 நாள் 16.03.2024-ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (16.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, “பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் ஓட்டு அளிக்க தூண்டுவதனை தடுத்திடும் பொருட்டும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள், போதைப்பொருட்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லும் நேர்வுகளில் மேற்படி குழுக்களால் ஆய்வின் பொழுது வாக்காளர்களைக் கவரும் வகையில் கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.

எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லும் போது பொதுமக்கள், வணிகர்கள் அதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் கொண்டு செல்லவேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் மேற்கண்ட இனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட இனங்களுக்கான நபர்கள் உரிய ஆதார ஆவணங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள அறை எண்: 186-இல் உள்ள மேல்முறையீட்டு அலுவலரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.

பறிமுதல் செய்யப்படும் பொழுது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இனங்களில் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே உரிய வழிமுறைகளை பின்பற்றி பணம், பொருட்கள் திரும்ப வழங்கப்படும். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மேற்சொன்ன விதிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலம் வரை ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும்.. அந்த வகையில் இந்த விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Share on:

கோவையில் பிரபல மருத்துவமனையில் நடந்த ஐடி ரெய்டு.. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்?


கோவையில தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பிரபல மருத்துவமனை ஒன்றில் ஐடி ரெய்டு நடந்தது.. இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில், பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு தொகுதிகளல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2-ந் தேதி சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் தென்காசி, திருப்பூர், செய்யாறு ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், பணம் பதுக்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து வருமான வரித்துறையினர் நேற்று மீண்டும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்..

இந்நிலையில் கோவையில் ஒரே குழுமத்தின் மருத்துவமனைகள் சரவணம்பட்டி மற்றும் சிங்கநல்லூரில் செயல்படுகிறது. இதேபோல் மதுக்கரையில் செட்டிபாளையம் பிரிவில் இந்த குழுமத்திற்கு நர்சிங் கல்லூரி ஒன்றும் நடத்தி வருகிறார். இந்த கல்லூரி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் ஏராளமான பணம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அந்த மருத்துவமனை உரிமையாளரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை குழும்மத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுக்கட்டமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் எவ்வளவு என்பது குறித்து வருமான வரித்துறை விவரங்களை வெளியிடவில்லை.. இதுகுறித்து வருமான வரித்துறையிடம் தேர்தல் ஆணையம் பல்வேறு விவரங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Share on:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை சோதனை: ரூ. 4 கோடி பறிமுதல்


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சி நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னையில் விருகம்பாக்கம், ஓட்டேரி, சேலம், திருச்சி, தென்காசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Share on:

ராணுவ வீரர்கள் தபாலில் எப்படி வாக்களிக்க வேண்டும்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட விதிமுறை.


லோக்கபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், ராணுவ வீரர்கள் தபாலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ராணுவ வீரர்களின் தபால் வாக்குப்பதிவு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக வெளியிட்டிருக்கிறது. அதனை இப்போது பார்ப்போம்..

1.தபால் வாக்கு சீட்டு, அறிவிப்பு படிவம், வாக்குச் சீட்டுகளை அனுப்புவதற்கான கவர், மற்றும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும்.

2.இந்த ஆவணங்களை, ராணுவ முகாமின் யூனிட் அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரி அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஓடிபி மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

3. பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த தபால் வாக்குகள் தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட ராணுவ வீரரிடம் அளிக்க வேண்டும்.

4.இது தொடர்பாக ஒரு பதிவேட்டை சம்பந்தப்பட்ட யூனிட் அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரி பராமரிக்க வேண்டும்.

5.சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் வாக்கு சீட்டில் தனது வாக்கை பதிவு செய்து அதற்கான ஆவணங்களுடன் விரைவு தபால் மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

6.தபால் மூலம் அனுப்புவதற்கு எந்தவித ஸ்டாம்ப்பும் ஒட்ட தேவையில்லை. இதற்கான கட்டணம் தலைமை தேர்தல் அதிகாரி மூலம் செலுத்தப்படும். இதில் முறைகேடு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு வாக்குச்சீட்டுக்கும் ‘கியு-ஆர் கோடு’ (QR Code Sticker) ஸ்டிக்கர் இருக்கும்.

7.வாக்கு எண்ணிக்கையின் அந்த கியு-ஆர் கோட்டை ஸ்கேன் செய்த பிறகு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரியின் முன்புதான் என்ன வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் உள்ள அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்” இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Share on:

பா.ஜ.கவை வலிமையோடு எதிர்க்க துணிவில்லையா? – EPS-யை கேள்வி கேட்கும் KCP!


பா.ஜ.கவை வலிமையோடு எதிர்த்து நிற்க துணிவு இல்லாத எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு ஏன் தலைமை ஏற்கிறார்? என்று முன்னாள் எம்.பியான கே.சி.பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் அவர் சில கேள்விகளை பதிவிட்டுள்ளார் KCP questions EPS.

ஜெயலலிதா அம்மா அவர்கள் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரதமர் மோடியும் அண்ணாமலையும் கச்சத்தீவு குறித்து பேசுகிற பொழுது அதில் அதிமுகவின் நிலைப்பாட்டையும் அம்மாவின் முயற்சி குறித்தும் சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்த தயக்கம்?

பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டு சென்றதற்கு “ஜெயலலிதா அம்மாவின் கனவுகளை சிதைத்து பாவம் செய்கிறார்கள்” என்கிறார் பிரதமர் மோடி. ஜெயலலிதா அம்மா தான், மோடியா? லேடியா? என்று பாஜகவையும் மோடியையும் எதிர்த்து களம் கண்டார் அந்த வழியில் நாங்கள் பயணிக்கிறோம் என்று மோடிக்கு பதில் சொல்ல பயப்படுவது ஏன்?

“ஜாதிகள் இல்லையடி பாப்பா , குலம் தாழ்த்தி , உயர்த்தி சொல்லல் பாவம் பாப்பா!” என்னும் பாரதியாரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி சொல்கிறார். ஆனால் பாரதியார் சொன்ன இந்த கருத்து அவருக்கு புரியவில்லையா? அல்லது தெரியவில்லையா? அண்ணாமலை, நல்ல சாதிய பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறார் என்றால் மற்ற சாதிகளெல்லாம் நல்ல சாதிகள் இல்லையா?சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம் அதிமுக. அதன் சார்பாக கருத்து தெரிவிக்க ஏன் எடப்பாடி கே.பழனிசாமி தயங்குகிறார்?

கருப்பு பணத்தை ஒழிக்க 2016-ல் “#Demonetisation” கொண்டுவந்தார் பிரதமர் மோடி அதன் மூலம் கருப்பு பணத்தை ஒழித்துவிட்டாரா? ஒவ்வொரு குடும்பமும் வீட்டில் சிறுகச் சிறுக சேர்த்துவைத்த பணத்தை ஒரே இரவில் செல்லாது என்று சொன்னார்.

இதில் ஏழைகளும் நடுத்தர குடும்பத்தினரும் தான் பாதிக்கப்பட்டார்கள் கார்ப்பரேட்களுக்கு இதில் பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று அவர்களின் கருப்பு பணத்தில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவும்,திமுகவும் பங்கு வாங்கியிருக்கிறது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 200 கோடி கறுப்புப்பணம் செலவிடப்படுகிறது.

அப்படி பார்த்தால் நாடுமுழுவதும் கருப்புப்பண புழக்கம் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடியாக உள்ளது. கருப்புப்பணத்தை ஒழிக்க தவறிய பாரதிய ஜனதா குறித்து பேசவும் EPS தயங்குகிறார்.

“அண்ணாமலைக்கு பணம் சம்பாரிக்க ஆசை இல்லை என்பதால் தான் பாஜகவில் இணைந்துள்ளார் என்கிறார் மோடி” ஆனால் ஒரு IPS அதிகாரி கட்சியில் இணைந்ததும் தலைவராக்கப்படும் அளவிற்கு திராவிட கட்சிகளில் தலைமைக்கு பஞ்சம் ஏற்படவில்லை என்பதை உணர்த்த தவறிவிட்டார்கள்.

“தான் செய்கிற செயல் எல்லாமே வாக்குக்காகவும், ஆட்சிக்காகவும் தான் செய்கிறேனா” என்கிறார் பிரதமர் மோடி. கடந்த 4 மாதங்களில் மட்டும் 7 முறை தமிழகம் வந்திருக்கிறார். ஆனால் இந்த 10 வருட ஆட்சியில் எத்தனை முறை தமிழகம் வந்திருக்கிறார்?

இந்த 10 ஆண்டு ஆட்சியில் பாஜக அரசால் தமிழகத்திற்கு என்று தனித்துவமிக்க பெரிய திட்டங்கள் என்ன கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழகம் பல வகைகளில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது மற்றும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவை சேர்ந்த ராம ஸ்ரீனிவாசனுக்கு பதில் சொல்லும் வேகத்தையும், ஆக்ரோசத்தையும் எடப்பாடி கே.பழனிசாமி, மோடியிடம் காட்ட வேண்டும் அப்பொழுது தான் நீங்கள் பாஜகவை எதிர்த்து களம் காணுகிறீர்கள் என்று மக்கள் நம்புவார்கள்.

இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Share on:

வசமாக சிக்கிய எடப்பாடி! தன்னைவிட வயதில் பெரியவரா சசிலா! கோர்த்துவிட்ட கேசிபி!


பெரியவர்கள் காலிதான் தான் விழுந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், எடப்பாடி பழனிசாமியை விட சசிகலா வயதில் இளையவர் என அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கூறி உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சியும் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரையில் எய்ம்ஸ் செங்கலை காண்பித்து பரப்புரை செய்து கொண்டிருந்தார்.

திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய ஈபிஎஸ், “நாடாளுமன்றத்திற்கு சென்று செங்கலை காட்ட முடியுமா?, ஸ்கிரிப்ட மாத்தப்பா” என கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் கல்ல காட்டுறன்; ஆனால் ஈபிஎஸ் பல்லை காட்டுகிறார்” என்று கூறி மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா அன்று பிரதமர் மோடி உடன் சிரித்துக் எடப்பாடி பழனிசாமி இருக்கும் புகைப்படத்தை காட்டி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி உடன் இருக்கும் படத்தையும், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜாபர் சாதிக் உடன் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் புகைப்படங்களையும் காட்டி உதயநிதிக்கு பதிலடி கொடுத்து இருந்தார்.

இதற்கு எதிர்வினையாக சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிசாமி விழும் புகைப்படத்தை காட்டி உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

இன்றைய தினம் மதுரை வந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ”பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதில் தவறில்லை” என கூறி இருந்தார்.

இந்த நிலையில் சசிலா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பிறந்த தேதிகளை ஒப்பிட்டு அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி ட்வீட் செய்துள்ளர். அதில், எடப்பாடி பழனிசாமி பிறந்த தேதி (20.03.1954) , சசிகலா பிறந்த தேதி (18.08.1954). சசிகலா EPS-ஐ விட இளையவர்.

எந்த பொதுத்தேர்தலை சந்தித்து @EPSTamilNadu முதல்வரானார்? எந்த தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் ஆனார்? இரண்டும் இல்லையே.

போட்டியிடுபவர்கள் யாரும் மிட்டா மிராசு அல்ல சாதாரண தொண்டர்கள் என்று கூறும் @EPSTamilNadu, 600 கோடி சொத்து உள்ள, மூன்று மாதங்களுக்கு முன் பாஜகவில் இருந்து வந்து அதிமுகவில் இணைந்த ஈரோடு வேட்பாளரிடம் எவ்வளவு வாங்கிக்கொண்டு சீட்டு கொடுத்தார்? ஜெயலலிதா அம்மாவால் ராவணோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராவணனின் பினாமி நாமக்கல் வேட்பாளர் தமிழ்மணிக்கு எதற்கு சீட்டு கொடுத்தார்? பல தொகுதிகளில் காண்ட்ராக்டர்களும் , கமிசன் ஏஜென்ட்களும் , வேறு கட்சியில் இருந்து சமீபத்தில் மாறிவந்தவர்களுக்கு தான் சீட்டுகொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட_அதிமுக உருவாக்க வேண்டும் என்பது தான் தொண்டர்கள் விருப்பம். ஆனால் அதிமுகவை தன் குடும்பச்சொத்து ஆக்குவது தான் EPS-ன் விருப்பமாக உள்ளது. எதற்கு தொண்டர்கள் மீது பழிபோடுகிறீர்கள் இன்றைய #அதிமுக வேட்பாளர்கள் களத்தில் திணறுவது அதிமுக ஒன்றுபட்டு இல்லை என்பதால் தான் அது உங்கள் சுயநலத்தின் காரணமாக உங்களுக்கு புரியவில்லை. தேர்தல் முடிவுகள் அதை உங்களுக்கு உணர்த்தும் என கேசி பழனிசாமி கூறி உள்ளார்.
Share on:

ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி கணேச மூர்த்தி உயிரிழந்தார்!


ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தவர் கணேச மூர்த்தி. 2019-ம் ஆண்டு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 72 மணி நேர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கணேச மூர்த்தி காலமானார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 24 -ந்தேதி கணேச மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது கணேச மூர்த்தி மயக்க நிலையில் இருந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
Share on:

ஒன்றுபட்ட அதிமுகவாக இல்லாதது பொதுமக்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை அதிமுகவிற்கு வாக்களிக்க யோசிக்க வைக்கிறது – கே.சி.பழனிசாமி


* 2014-ல் மோடியா? லேடியா? என்று களம் அமைத்து 40-ல் 38 தொகுதிகளை வென்றார் அம்மா. 2016-ல் அதிமுக தனித்து ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்து பத்து மாதங்களில் (பிப்ரவரி, 2017) எடப்பாடி பழனிசாமி பொறுப்பெடுத்துக்கொண்டார். அதிமுக ஆளுகிற கட்சியாகவும், 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாகவும் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சிப்பொறுப்பும்,கட்சிப்பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் அடுத்தடுத்து 8 தொடர் தோல்விகளை மட்டும் தான் EPS-ஆல் பெறமுடிந்தது. அதற்கு இதுவரை கூறப்பட்ட காரணங்கள் பாஜக கூட்டணி மற்றும் இரட்டை தலைமை ஆனால் இந்த தேர்தலில் பாஜக கூட்டணி இல்லை மற்றும் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளார். அப்படி இருந்தும் கள நிலவரம் சாதகமாக உள்ளதா?

* தமிழக அரசியலில் அதிமுக வாக்கு வங்கி 35, திமுக வாக்கு வங்கி 30%, பாஜக உட்பட பிற கட்சிகள் சேர்ந்து 15%, வேட்பாளர்களை பார்த்து தேர்தலுக்கு தேர்தல் முடிவெடுப்பவர்கள் 20% என்பதாக தான் களம் இருந்தது. தற்பொழுது தேர்தல் களம் என்பது 4% இருந்த பாஜக வாக்கு வங்கி 10-12% ஆக உயர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. திமுக கூட்டணி பலத்தால் 45% வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் அதிமுக தன்னுடைய 35% வாக்கில் இருந்து இன்று 20% – 25% வாக்குகளுக்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. பாஜக வளர்ச்சிக்கு என்ன காரணம்?, அதிமுக வாக்கு வங்கி வீழ்ச்சிக்கு என்ன காரணம்? திமுகவின் வாக்கு வங்கி உயர்வுக்கு என்ன காரணம் என்று EPS எண்ணிப்பார்க்கவேண்டும்.

* நேற்றைய திருச்சி கூட்டத்தில் 11மருத்துவ கல்லூரி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்கிற தன்னுடைய இரண்டு சாதனைகளை மட்டுமே முன்னிறுத்தி பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த இரண்டுமே கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே முன்வைத்து பேசப்பட்டது அப்படி இருந்து ஆட்சிப்பொறுப்பிற்கு வர முடியவில்லை. இது வாக்கு கேட்கப்போகிற வேட்பாளர்கள் பேசவேண்டிய கருத்துக்கள். தலைமை திமுகவை கடுமையாக எதிர்த்து போதைப்பொருள் புழக்கம், தேர்தல் பத்திரம் விவகாரம், தலைவிரித்தாடுகிற லஞ்சம் & ஊழல், சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதில்லை.மக்கள் மத்தியில் ஏற்கனவே 90 நாட்களில் முன்னாள் அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுப்பேன் என்ற ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் தான் நடுநிலையாளர்கள் இதை எதோ மறைமுக ஒப்பந்தம் என்று நினைக்கிறார்கள்.

* அதே போல் பாஜகவையும் கெஜ்ரிவால் கைது, தேர்தல் பத்திரம் விவகாரம், மாநில உரிமைகள், தமிழகத்திற்கான நிதிப்பங்கீடு, மத்திய அரசின் திட்டங்கள் சரிவர தமிழகத்திற்கு கிடைக்காமல் இருப்பது, மதவாதம், சாதியவாதம் போன்ற விசயங்களில் கடுமையான எதிர்ப்பு நிலையை எடுப்பதில்லை. மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு “டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்” என பெயர் மாற்றம் செய்ய முன்வைத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் அதை கூட EPS கண்டித்து பேசவில்லை. அதனால் தான் இன்னும் பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

* கடுமையான திமுக எதிர்ப்பால் திமுக எதிர்ப்பு வாக்குகளை பெறவேண்டும். அதேபோல் கடுமையான பாஜக எதிர்ப்பால் பாஜக எதிர்ப்பு வாக்குகளையும் பெறவேண்டும். இந்த இரண்டையும் செய்யாமல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-க்கும், ஜெயலலிதா அம்மாவுக்கும், இரட்டை இலை சின்னத்திற்கும், அதிமுக என்கிற கட்சிக்கும் இருக்கிற வாக்கு வங்கி 25 சதவீதத்தை மட்டுமே குறிவைத்து தக்கவைத்துக்கொள்ள பார்க்கிறார் EPS. மேலும் பணபலம் மட்டுமே உள்ள கட்சிக்கு புதியவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தி வருகிற வாக்குகளை தனக்கான வாக்குகளாக காட்ட முற்படுகிற இந்த செயல் எந்த அளவுக்கு கைகொடுக்கும்?

* வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் மாறி மாறி வாக்களிப்பார்கள். திமுக மீது இருக்கும் அதிருப்தியால் அதிமுக தானாக ஆட்சிக்கு வந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கிடுகிறார். ஆனால் அந்த மாற்று சக்தியாக வளரும் முயற்சியில் இன்று பாஜக தீவிரமாக உள்ளது. இந்த சூழலில் வருகிற தேர்தலில் ஒரு நல்ல வெற்றியைப் பெற்று பாஜக வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால் மட்டும் தான் 2026-ல் அதிமுக ஆட்சி சாத்தியமாகும்.

* அதிமுக கட்சிக்குள் நடக்கிற உட்கட்சி பிரச்சனைகள் கட்சிக்குள் ஒற்றுமையில்லாதது மற்றும் ஒன்றுபட்ட அதிமுகவாக இல்லாதது பொதுமக்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை அதிமுகவிற்கு வாக்களிக்க யோசிக்க வைக்கிறது. பாஜகவை விட்டு விலகியதில் தவறில்லை ஆனால் சில உறுதியான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும். அதே போல் பிரச்சார களத்தில் ஈடுகொடுக்கக்கூடிய அளவிற்கு EPS-ன் செயல்பாடுகளும் பேச்சுக்களும் இல்லை. அப்படி தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

* இன்னும் காலம் கடக்கவில்லை சில விஷயங்களை எடப்பாடி பழனிசாமி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்த தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்றால் தான் 2026 நமக்கான தேர்தலாக அமையும். அப்படி தவறினால் விளைவு எடப்பாடி பழனிசாமியின் தலைமை கேள்விக்குறியாகும்.
Share on:

வடசென்னை அலுவலகத்தில் என்ன நடந்தது? ஜெயக்குமார் – சேகர்பாபு பரபர பேட்டி.


வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் திமுக அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவை கண்டித்து அதிமுகவினர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி ஜெயக்குமார், சேகர்பாபு பேட்டியளித்துள்ளனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி இன்று மதிய வேளையில், அதிமுக சார்பில் வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ராயபுரம் மனோ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதேபோல், திமுக சார்பில் வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியும் வந்திருந்தார். அப்போது இருவரும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளனர்.

இதனால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்று வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக சார்பில் வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், திமுகவின் அமைச்சர் சேகர்பாபுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முதலில் வந்தது அதிமுகதான் என தேர்தல் அதிகாரி கூறியும் சேகர் பாபு ஏற்க மறுத்து வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய அங்கு வந்தார். இதனால், வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் பரபரப்பாக காட்சி அளித்தது. சுமார் 45 நிமிடமாக இந்த வாக்குவாதம் நீடித்தது. இதன் பின்னர் திமுகவை கண்டித்து அதிமுகவின் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “முதலில் அலுவலகத்திற்கு வந்தது நாங்கள் தான். நான் தான் முதலில் வந்தேன். அப்போது வேட்பாளர் வரவில்லை என்று என்னை வெயிட் பண்ண சொன்னார்கள். 4 நிமிடம் கழித்து மனோ வந்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றோம். ஆனால் அங்கே எங்களுக்கு முன்பு 2 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துகொண்டு இருந்தார்கள்.

நாங்கள் வெளியே வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென திமுகவினர் திபுதிபுவென உள்ளே வந்துட்டாங்க.. வேக வேகமாக உள்ளே சென்று முன் வரிசையில் போய் உட்கார்ந்து விட்டார்கள். திரைப்படத்தில் பார்ப்பதுபோல், எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் திமுகவினர் திபுதிபுவென வந்தனர். வேட்புமனு தாக்கலின் போது திமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.

எங்களுக்கு 7 ஆம் நம்பர் டோக்கன் கொடுத்தனர். அவரது பினாமி தான் 2 ம் நம்பர் டோக்கன் வாங்கியிருந்தனர். திமுகவும் பினாமி. வேட்பாளரிலும் பினாமி தான். 8 ம் நம்பர் டோக்கனில் தான் அவர்கள் 2வது டோக்கன் வாங்கினர். இது தொடர்பாக தேர்தல் அலுவலரே சொல்கிறார் அதிமுகவினர் தான் முதலில் வந்தனர் என்று. அதிமுக தான் முதலில் வந்ததாக கூறிய தேர்தல் அலுவலர்களையும் திமுகவினர் மிரட்டினர். அதிமுக சார்பில் 5 பேர் தான் உள்ளே சென்றோம். ஆனால் திமுகவின் தரப்பில் இருந்து 8 பேர் உள்ளே வந்தனர்” என்றார்.

இதற்கிடையே அமைச்சர் சேகர்பாபு, திமுக வேட்பாளர் தான் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டோக்கனை பெற்றதாக கூறினார். சேகர்பாபு கூறியதாவது:- அவதூறு வார்த்தைகளை அதிமுகவினர் தேர்தல் அலுவலர் முன்பே பேசினர். கலாநிதி வீராசாமியின் மாற்று வேட்பாளரான ஜெயந்தி கலா அவர்கள் காலை 9 மணிக்கே வேட்பு மனுவிற்கான டோக்கனை பெற்றுவிட்டார். இந்த பிரச்சினையால் அவரை திரும்ப அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும், ஒட்டுமொத்தமாக எப்படி சொன்னாலும் சரி வென்றது உதயசூரியன் தான். டம்மி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு தான் அதிமுக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இப்படி நாள்பட நாள்பட தோல்வி பயத்தால் இப்படி கட்டவிழ்த்து விடுவார்கள்.

பால் கனகராஜ் உள்ளே இல்லவே இல்லை. அவர் தோல்வி பயத்தால் எதை எதையோ பேசுகிறார். தேர்தல் அதிகாரியை மிரட்ட வேண்டிய வேலை என்ன இருக்கு சொல்லுங்க? இங்கே என்ன வாக்குப்பதிவா நடக்கிறது. எதையாவது ஒன்றை கற்பனையாக ஜோடித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்கள். தேர்தல் நடக்கும் வரை இப்படி தான் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்கள். இவ்வாறு சேகர்பாபு கூறினார். முன்னதாக இருவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டனர்.
Share on:

இவருக்கு பதிலாக இவர்! நெல்லை வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம்!


நெல்லை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும், கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து வியாழன் அன்று, மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் இறுதி பட்டியலாக அதிமுக அறிவித்தது. அதில் நெல்லை தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

சிம்லா முத்துச்சோழன் திமுகவில் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதிருப்தியால் கடந்த மார்ச் முதல் வாரத்தில் தான் அதிமுகவில் இணைந்தார்.திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன். இவர் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்டவர். வழக்கறிஞராக உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் களமிறக்கப்பட்டார். அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். ஜெயலலிதாவை எதிர்த்து நின்று தோற்ற சிம்லாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும் என திமுக சார்பில் உறுதியளித்த நிலையில் அவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே விஞ்சியது.

இதனால் அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சீட் தரப்படும் என உறுதி அளித்த நிலையிலேயே அவர் அதிமுகவில் இணைந்திருந்தார். அதன்படியே, எடப்பாடி பழனிசாமியும், சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை லோக்சபா தொகுதியில் சீட் வழங்கினார்.

ஆனால், சிம்லா முத்துச்சோழன் நெல்லை தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுகவில் பெரும் அதிருப்தி கிளம்பியது. ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி இருப்பது அதிமுக கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் வரை இந்த அதிருப்தி எதிரொலித்தது.

இந்நிலையில், சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணியை நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நெல்லை புறநகர் மாவட்ட இணை செயலாளராகவும், திசையன்விளை பேரூராட்சி தலைவராகவும் ஜான்சி ராணி உள்ளார்.

அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முறையாக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share on: