அதிமுக கொடி, இரட்டை இலையை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது!
பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை தொடங்கியதில் இதே பிரச்சினைதான். இரட்டை குழல் துப்பாக்கிகள் போல செயல்பட்டு வந்த ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் பிரிந்தனர். நிர்வாகிகள், எம்எம்எல்ஏக்கள் பெரும்பாலோனோர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் நிற்கவே கட்சி, சின்னம், கொடி முடங்காமல் தப்பியது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியை விட்டு ஓ.பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினாலும் அதை ஏற்க தயாராக இல்லை. அதிமுக லெட்டர் ஹெட் பயன்படுத்தி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடுகிறார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக கொடி, சின்னத்தையும் பயன்படுத்தி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தி கட்சி உறுப்பினர்கள் என கூறி வருகின்றனர். மேலும், கட்சி லெட்டர்பேடை சட்டவிரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருவதாக வாதிடப்பட்டது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது, இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை, தன்னை பொது செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி அவகாசம் வாங்கினார்கள், ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தாகல் செய்த வழக்கு நம்பர் ஆகிவிட்டது, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம், குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி சதீஷ்குமார்,எத்தனை முறை இந்த விவகாரத்தில் இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனைமுறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தரப்பில் நான்கைந்து மாதங்களில் முக்கியமான எம்.பி தேர்தல் வரவுள்ளது, ஆனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக அதே பதவியை பயன்படுத்துகிறார், எங்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவிக்கிறார், பொதுமக்கள் மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்கிற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.