அதிமுகவை பற்றி பேச அண்ணாமலை யார்? பாஜகவை வளர்க்க அவர் கவனம் செலுத்தல.. பொங்கிய கேசி பழனிசாமி.


அதிமுகவை சிதைப்பதிலேயே அண்ணாமலையின் கவனம் இருப்பதாகவும், பாஜக வளர அவர் ஒன்றும் செய்யவில்லை என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி கே சி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்தமுடியவில்லை என்கிற விரக்தியில் தான் இப்படி அண்ணாமலை பேசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக கூட்டணி அமைக்காமல் அதிமுக இந்த லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. இதையடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை நேற்று பேசிய நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். இதனிடையே, இன்று தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, லோக்சபா தேர்தலுகு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினரும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ அண்ணாமலையை விமர்சித்து கருத்து கூறினர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி கே சி பழனிசாமி, அதிமுகவை பற்றி பேச அண்ணாமலை யார்? என்றும், அண்ணாமலை அதிமுகவை சிதைப்பதிலேயே கவனம் செலுத்துவதாகவும், பாஜக வளர அவர் ஒன்றும் செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அண்ணாமலை இன்று அதிமுக -வை பற்றி கூறியுள்ளது!

* ஜூன் 4-க்கு பிறகு அதிமுக தினகரன் வசமாகும்.
* அதிமுக முன்பே தினகரன் பக்கம் சென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வராகி இருக்க மாட்டார்.
* அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பக்கமே இருக்கிறார்கள்.
* விரைவில் இ.பி.எஸ் தலைமையிலான அதிமுக இருக்காது.

அம்மா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சசிகலா, தினகரன் குடும்பத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திலிருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் தமிழக வாக்காளர்களும் குரல் கொடுத்தார்கள். நான் தேர்தல் ஆணையத்தில் அதற்கு வழக்கு தொடுத்திருந்தேன்.

ஓ.பி.எஸ் அதன் பிறகு தர்மயுத்தம் செய்தார். அம்மாவால் 2011-ல் வெளியேற்றப்பட்ட சசிகலாவின் குடும்பத்திடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று போராடி அதில் தொண்டர்கள் வெற்றிகண்டார்கள். அதற்கு பிறகு EPS & OPS இருவரும் இணைந்து தொண்டர்களால் தான் தலைமை தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்கிற விதியை பாஜக ஆதரவோடு திருத்தி பொதுக்குழுவால் தலைமை, ஒற்றை வாக்கு இரட்டை தலைமை மற்றும் 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவேண்டும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவேண்டும் என்கிற எல்லா EPS & OPS நடவடிக்கைகளுக்கு பாஜக துணைபோனது.

ஆனால் இன்று அண்ணாமலை இந்த கருத்துக்களை சொல்வது யார் பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறார்களோ, அதிமுகவை பாஜகவிற்கு துணை அமைப்பாக கொண்டுசெல்ல யார் ஒத்துழைக்கிறார்களோ அவர்கள் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என்கிற பாஜகவின் முயற்சியை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் ஒன்றுபட்டு முறியடிப்பான்.

அண்ணாமலை யார்? அதிமுகவின் தலைமையை பற்றி பேசுவதற்கு, அதற்கு என்ன அருகதை இருக்கிறது அண்ணாமலைக்கு? அதிமுகவை சிதைப்பதிலேயே அண்ணாமலை கவனம் செலுத்துகிறாரே ஒழிய பாஜகவை வளர்ப்பதில் அல்ல. இந்த தேர்தலில் தலைகீழாக நின்றும் அதிமுக வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை. பாஜக வாக்கு வங்கியை உயர்த்தமுடியவில்லை என்கிற விரக்தியின் வெளிப்பாடு தான் அண்ணாமலையின் இந்த அர்த்தமற்ற பேச்சுக்கள்.

அதிமுகவை மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவோம். தொண்டர் பலத்தை உறுதிப்படுத்துவோம் தேர்தலுக்கு பிறகு தொண்டர்களால் ஒரு தலைமையை உருவாக்க முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share on: