நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை.


தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகிறது.

சட்டவிரோதமாக ஆயுதம் தயாரிக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு தொடர்பாகவே இந்த சோதனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் பிப்ரவரி இரண்டாம் தேதி அதிகாலை முதல் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் என்பவர் வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இவர் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

சோதனையின் முடிவில் 3 செல்போன்கள், புத்தகங்களை கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் வரும் 7ஆம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு மதிவாணனுக்கு சம்மன் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனின் வீட்டிற்கு அதிகாலையில் வந்த என்ஐஏ அதிகாரிகள், சில மணி நேரம் சோதனை நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகரான விஷ்ணு பிரதாப் என்பவரது வீட்டிலும் அதிகாலை ஐந்து மணி முதல் என்ஐஏ சோதனை நடத்திவருகிறது. இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். யு டியூப் சானல் ஒன்றையும் நடத்திவருகிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் ஆலாந்துறை ஆர்.ஜி. நகரில் வசிக்கும் ரஞ்சித் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. காளப்பட்டியில் முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி அலுவலக முகவரிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
Share on: