பா.ஜ.கவை வலிமையோடு எதிர்க்க துணிவில்லையா? – EPS-யை கேள்வி கேட்கும் KCP!


பா.ஜ.கவை வலிமையோடு எதிர்த்து நிற்க துணிவு இல்லாத எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு ஏன் தலைமை ஏற்கிறார்? என்று முன்னாள் எம்.பியான கே.சி.பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் அவர் சில கேள்விகளை பதிவிட்டுள்ளார் KCP questions EPS.

ஜெயலலிதா அம்மா அவர்கள் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரதமர் மோடியும் அண்ணாமலையும் கச்சத்தீவு குறித்து பேசுகிற பொழுது அதில் அதிமுகவின் நிலைப்பாட்டையும் அம்மாவின் முயற்சி குறித்தும் சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்த தயக்கம்?

பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டு சென்றதற்கு “ஜெயலலிதா அம்மாவின் கனவுகளை சிதைத்து பாவம் செய்கிறார்கள்” என்கிறார் பிரதமர் மோடி. ஜெயலலிதா அம்மா தான், மோடியா? லேடியா? என்று பாஜகவையும் மோடியையும் எதிர்த்து களம் கண்டார் அந்த வழியில் நாங்கள் பயணிக்கிறோம் என்று மோடிக்கு பதில் சொல்ல பயப்படுவது ஏன்?

“ஜாதிகள் இல்லையடி பாப்பா , குலம் தாழ்த்தி , உயர்த்தி சொல்லல் பாவம் பாப்பா!” என்னும் பாரதியாரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி சொல்கிறார். ஆனால் பாரதியார் சொன்ன இந்த கருத்து அவருக்கு புரியவில்லையா? அல்லது தெரியவில்லையா? அண்ணாமலை, நல்ல சாதிய பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறார் என்றால் மற்ற சாதிகளெல்லாம் நல்ல சாதிகள் இல்லையா?சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம் அதிமுக. அதன் சார்பாக கருத்து தெரிவிக்க ஏன் எடப்பாடி கே.பழனிசாமி தயங்குகிறார்?

கருப்பு பணத்தை ஒழிக்க 2016-ல் “#Demonetisation” கொண்டுவந்தார் பிரதமர் மோடி அதன் மூலம் கருப்பு பணத்தை ஒழித்துவிட்டாரா? ஒவ்வொரு குடும்பமும் வீட்டில் சிறுகச் சிறுக சேர்த்துவைத்த பணத்தை ஒரே இரவில் செல்லாது என்று சொன்னார்.

இதில் ஏழைகளும் நடுத்தர குடும்பத்தினரும் தான் பாதிக்கப்பட்டார்கள் கார்ப்பரேட்களுக்கு இதில் பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று அவர்களின் கருப்பு பணத்தில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவும்,திமுகவும் பங்கு வாங்கியிருக்கிறது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 200 கோடி கறுப்புப்பணம் செலவிடப்படுகிறது.

அப்படி பார்த்தால் நாடுமுழுவதும் கருப்புப்பண புழக்கம் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடியாக உள்ளது. கருப்புப்பணத்தை ஒழிக்க தவறிய பாரதிய ஜனதா குறித்து பேசவும் EPS தயங்குகிறார்.

“அண்ணாமலைக்கு பணம் சம்பாரிக்க ஆசை இல்லை என்பதால் தான் பாஜகவில் இணைந்துள்ளார் என்கிறார் மோடி” ஆனால் ஒரு IPS அதிகாரி கட்சியில் இணைந்ததும் தலைவராக்கப்படும் அளவிற்கு திராவிட கட்சிகளில் தலைமைக்கு பஞ்சம் ஏற்படவில்லை என்பதை உணர்த்த தவறிவிட்டார்கள்.

“தான் செய்கிற செயல் எல்லாமே வாக்குக்காகவும், ஆட்சிக்காகவும் தான் செய்கிறேனா” என்கிறார் பிரதமர் மோடி. கடந்த 4 மாதங்களில் மட்டும் 7 முறை தமிழகம் வந்திருக்கிறார். ஆனால் இந்த 10 வருட ஆட்சியில் எத்தனை முறை தமிழகம் வந்திருக்கிறார்?

இந்த 10 ஆண்டு ஆட்சியில் பாஜக அரசால் தமிழகத்திற்கு என்று தனித்துவமிக்க பெரிய திட்டங்கள் என்ன கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழகம் பல வகைகளில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது மற்றும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவை சேர்ந்த ராம ஸ்ரீனிவாசனுக்கு பதில் சொல்லும் வேகத்தையும், ஆக்ரோசத்தையும் எடப்பாடி கே.பழனிசாமி, மோடியிடம் காட்ட வேண்டும் அப்பொழுது தான் நீங்கள் பாஜகவை எதிர்த்து களம் காணுகிறீர்கள் என்று மக்கள் நம்புவார்கள்.

இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Share on: