பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவு!


சென்னை, செங்குன்றத்தில் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளை, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மேற்கொண்டது.

இந்நிலையில் நேற்று காலை, தெருக்களில் தேங்கியிருந்த குப்பை, கழிவுகளை அகற்றி, கிருமிநாசினி ‘பவுடர்’ துாவும் பணியை, துாய்மை பணியாளர்கள் செய்தனர். இதனால் கொசுத்தொல்லை குறைந்து பூரான்,பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் அச்சுறுத்தல் இருக்காது என, மக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஆனால் செங்குன்றம், டாக்டர் வைத்தீஸ்வரன் தெரு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுவட்டாரங்களில்.துாவப்பட்ட பவுடர் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதை கையில் எடுத்து பார்த்த போது, எந்த.உறுத்தலுமின்றி இருந்தது. அதை முகர்ந்து பார்த்த போது, மைதா மாவின் வாசம் தெரிந்தது.

துாய்மை பணியாளர்கள் கொண்டு வந்த மூட்டையை சோதித்த போது, அதில் ‘பேக்கரி’களில் பிஸ்கட்,ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மைதா மாவு இருந்தது. அவர்களிடம் விசாரித்த போது, பேரூராட்சி அதிகாரிகள் கொடுத்ததை தான் துாவி வருவதாக கூறினர்.

‘பிளீச்சிங்’ பவுடருக்கு மாற்றாக, மைதா மாவு தெளித்த நாரவாரிக்குப்பம் பேரூராட்சியின் காமெடியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பினர்.
Share on: