17 வயதில் FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழக வீரர் குகேஷ் சாதனை!


கனடாவில் நடைபெற்ற FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் டி குகேஷ் 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் சாம்பியன் வென்ற 2 ஆவது வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கனடாவில் டொரண்டோவில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, இதில், இந்தியாவின் சார்பில் இளம் கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி ஆகியோரும் பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆர் வைஷாலி, ஹொனேரு ஹம்பி ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில், 14 சுற்றுகள் கொண்ட தொடரின் இறுதிப் போட்டியில் 17 வயதான குகேஷ், அமெரிக்காவின் கிஹாரு நகமுராவை எதிர்கொண்டார். இந்தப் போட்டி டிராவில் முடியவே இருவரும் ½ புள்ளிகள் பெற்றனர். இதே போன்று மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவும், ரஷ்யாவின் இயான் நெப்போம்னியாச்சியும் மோதினர். இந்தப் போட்டியும் டிராவில் முடிந்தது.

இதன் காரணமாக புள்ளிகள் அடிப்படையில் குகேஷ் 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, 2024 FIDE கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் சாம்பியனாக வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியை வென்ற 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நகமுரா 8.5 புள்ளிகள் பெற்று 2ஆவது இடம் பெற்றார். இந்த வரிசையில் இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5ஆவது இடம் பெற்றார். இதன் மூலமாக முதல் முறையாக குகேஷ் கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளார்.

இளம் வயதில் சாம்பியனான குகேஷிற்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இளம் வயதில் சாம்பியனானதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் எப்படி விளையாடி கடினமான சூழ்நிலைகளைக் கையாண்டீர்கள் என்பதில் நான் தனிப்பட்ட முறையில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
Share on: