ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை என்ன ஆனது?

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை என்ன ஆனது?

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அதிமுக பொதுச்செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.திடீரென இறந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலராலும் சந்தேகிக்கப்பட்டது.அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் அதை ஆமோதிக்கும் வகையில், அதில் தொடர்புடைய “சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்” எனப்பேசினார்.தொடர்ந்து ஓபிஎஸ் கடந்த 2017 மார்ச் 17 ஆம் தேதி ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக்கோரி தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதமும் இருந்தார்.

மத்திய அரசின் துணையுடன் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த ஓபிஎஸ் அதிமுகவின் துணை முதலமைச்சரானார்.ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணையை தீவிரப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையத்தை 2017 செப்டம்பர் 25-ல் அமைத்தனர்.

3 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய ஆறுமுகசாமி ஆணையம் பலமுறை கால நீட்டிப்பு பெற்றுக்கொண்டே இருந்தது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8 முறை சம்மன் அனுப்பியும் பல்வேறு காரணங்களை கூறி விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக்கு ஆஜராகி பல்வேறு விளக்கங்களை அளித்தார்.

5 ஆண்டுகள் கழித்து இறுதியாக ஆறுமுகசாமி ஆணையம் முழு விசாரணையையும் நிறைவு செய்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்பித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா மரணத்தில் இபிஎஸ், சசிகலா,டிடிவி தினகரன்,விஜய பாஸ்கர் என பலருக்கும் தொடர்புள்ளதாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

அதன்பிறகு அந்த அறிக்கையின்படி எந்த நடவடிக்கையும் தமிழக அரசால் எடுக்கப்படவில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைபடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடப்பட்டது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழ்நாடு அரசே முடிவெடுக்க முடியும் என்று கூறி அவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு,திமுக தாமாக முன்வந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரணை செய்வதாக தேர்தல் வாக்குறுதியாகவே அளித்தது. ஆனால் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கைக்கு பிறகு இன்னும் மேல் விசாரணை நடத்த உத்தரவிடாமல் கிடப்பில் போட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதா மரணத்தில் இபிஎஸ், விஜயபாஸ்கர்,டிடிவி,சசிகலா உள்ளிட்டோர் முக்கிய நபர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால் ஆளுங்கட்சி மறைமுகமாக இவர்களிடம் ஒப்பந்தம் செய்து காப்பாற்ற முனைகிறதா?என்று அதிமுகவின் முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Share on: