தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் நலப்பணித்திட்டங்கள் என்று எதையும் தொடங்கவில்லை. தன் ஆட்சிக்கு அவப்பெயர் வரும் போதெல்லாம், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ரெய்டு ஏவி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் முதல்வர். இதனால் மக்களும் திசை திரும்பி விடுகிறார்கள். இதை ஒரு யுக்தியாக கொண்டு ஸ்டாலின், மாதம் ஒரு வருமான வரி சோதனையை முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து நடத்தி வருகிறார்.
வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை முழுமையாக நிவாரணம் போய் சேரவில்லை. பருவமழையின் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் சென்னை ஸ்தம்பித்து போனது. இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.5000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று நிர்பந்தித்தது. தற்போது ஆட்சியில் அமர்ந்த பின்பு பொங்கல் பரிசுத்தொகை வழங்கவில்லை. நிதி நெருக்கடியை காரணமாக சொன்னது. ஆனால் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. சரி பொங்கல் பரிசாவது தரமானதாக இருந்ததா? என்றால், அதுவும் இல்லை. இவை எல்லாம் மக்களுக்கு தி.மு.க. ஆட்சியின் மீது பெரும் ஏமாற்றத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சியின் போது களங்கம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ரெய்டு என்ற ஆயுதத்தை தனது யுக்தியாக பயன்படுத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்.