அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள் குறித்தும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் தற்போது அறிவித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியுடன் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அக்கட்சித் தலைவர் நெல்லை முபாரக் உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. எஸ்டிபிஐக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

வடசென்னை – ராயபுரம் மனோ
தென்சென்னை – ஜெயவர்த்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்
ஆரணி – கஜேந்திரன்
விழுப்புரம் – பாக்யராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – தமிழ்மணி
ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
கரூர் – கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் – சந்திரஹாசன்
நாகை – சுர்ஜித் சங்கர்
மதுரை – சரவணன்
தேனி – நாராயணசாமி
ராமநாதபுரம் – ஜெயபெருமாள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் தேமுதிக-க்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக தேமுதிக – அதிமுக இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி தேமுதிகவிற்கு மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி அல்லது மயிலாடுதுறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

மேலும் தேமுதிக தரப்பில் ராஜ்யசபாவில் ஒரு இடம் வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாகவும் இதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Share on: