விஜயபாஸ்கர் வீடு, ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. பெரும் பரபரப்பு..!


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் ஜி ஸ்கொயர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சற்றுமுன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் புதுக்கோட்டை இலுப்பூர் என்ற பகுதியில் உள்ள அவரது வீட்டில் மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் சென்னையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய பத்து இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருவதாகவும் சென்னை அண்ணாநகர், எழும்பூர், நீலாங்கரை, அடையாறு, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளின் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுகிறது என்றும் அதேபோல் சென்னை நந்தனத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கிய இடங்களில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share on: