ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமை; அமித் ஷா உட்பட 7 பேர் – குழுவில் யார் யார்?!


செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் என்ற அறிவிப்பு வெளியானபோதே, இந்தக் கூட்டத்தொடரில் `ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பா.ஜ.க அறிமுகப்படுத்தப்போவதாக பேச்சுகள் எழுந்தன. அதற்கேற்றவாறு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், `ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியங்கள் தொடர்பாக ஆராயக் குழுவும் அமைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்தபோதும், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது தேர்தல் செலவுகள் உட்பட பல்வேறு வேலைகளைக் குறைக்கும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்றும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறிவருகின்றன.

மேலும், குழு அமைக்கப்பட்டது குறித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி விவாதிக்க இப்போதைக்கு குழு மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு அறிக்கையைத் தயார் செய்ததும், அது பொதுத்தளத்துக்குக் கொண்டுவரப்பட்டு விவாதம் நடத்தப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்திலும் விவாதங்கள் நடைபெறும். எனவே, இதில் விவாதங்கள் நடைபெறும் என்பதால், பதற்றப்பட வேண்டாம்” என்று நேற்று கூறினார்.

இந்த நிலையில், `ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்தக் குழுவில் ராம்நாத் கோவிந்த் உட்பட, எட்டுப் பேர் இடம்பெற்றிருக்கின்றனர். அதில் ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-ம் நிதிக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், சுபாஷ் காஷியப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
Share on: