பொது இடத்தில் சாதி பெயரை சொல்லி திட்டிய போலீஸ்! பறந்து வந்த சஸ்பெண்ட் ஆர்டர்.. உயர்நீதிமன்றம் அதிரடி


பொது இடத்தில் சாதி பெயரை குறிப்பிட்டு கணவன் மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அவர்களை சாதி ரீதியாக திட்டி, கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தங்களை சாதி ரீதியாக திட்டி தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பரிவு செய்யக்கோரி ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, குடும்பத்தினரை தாக்கிய காவலர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து விசாரணை முடிந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கிய அவர், சாதி பெயரை குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட அவர், இழப்பீட்டு தொகையை காவலர்கள் மூன்று பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல காவலர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை அவர்களை பணியிட நீக்கம் செய்யவும் உத்தரவிட்டார். சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
Share on: