பொன்முடி தண்டனை நிறுத்திவைப்பா? – முடியவே முடியாது.. DVAC-க்கு அதிரடி உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம்!


திமுக ஆட்சி நடந்த 2006 – 2011 காலகட்டத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் பொன்முடி. இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கை விசாரணை செய்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு பல ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் விசாரனையில் இருந்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொன்முடி தரப்பு வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளது என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவியை குற்றவாளிகள் என அறிவித்து இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் பொன்முடி தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை உடனே இழந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி ஜனவரி 3ஆம் தேதி மேல்முறையீடு செய்தார். இதனிடையே பொன்முடி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறையில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்தது. இதனால் அவர் சிறைக்கு செல்வதில் இருந்து நிவாரணம் பெற்றார்.

மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அபய்.எஸ்.ஓஹா, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை மார்ச் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென அதிரடியாக உத்தரவிட்டார். அப்போது, பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பொன்முடி அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, தற்போது அவசரம் வேண்டாம்.. இப்போது தண்டனையை நிறுத்தி வைக்கப் போவதில்லை. முதலில் லஞ்ச ஒழிப்புத் துறை இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யட்டும். அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன், வழக்கு விசாரணையையும் மார்ச் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

3 மாதங்களுக்குள் பொன்முடி தடை உத்தரவை பெற்றால்தான் பதவி மீண்டும் கிடைக்கும் என்பதால், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விரைவில் பதில் மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் முடிவு இருக்கும் என கூறப்படுகிறது. எனினும், திமுக அரசு இருப்பதால் பொன்முடிக்கு சாதகமாகவே லஞ்ச ஒழிப்புத் துறையின் பதில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள் எதிர்க்கட்சிகள் தரப்பில்.
Share on: