அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை எப்படியாவது அப்ரூவராக்கிவிட அவரை அமலாக்கத் துறை தீவிரமாக தேடி வருகிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன.அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 2011 – 2016ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 1.62 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறும் கணேஷ்குமார் புகார் அளித்துள்ளார்.
அமலாக்கத் துறையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும்,சிபிஐயும் தனித்தனியே 3 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு பல்வேறு சம்பவங்களை தொடர்ந்து அவர் புழல் சிறையில் உள்ளார்.
கடந்த வாரம் அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் தெரியாது, நினைவில்லை, ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன் உள்ளிட்ட பதில்களையே கொடுத்துவந்தார்.
ஒரு கட்டத்தில் உங்கள் செல்வாக்கு இல்லாமல் 30 கோடி ரூபாய் கரூர் நிலத்தை வெறும் ரூ 10 லட்சத்திற்கு எப்படி வாங்க முடியும் என கேட்டதற்கு செந்தில் பாலாஜி எல்லாம் என் தம்பிக்குத்தான் தெரியும் என கூறிவிட்டார். இதையடுத்து கரூரில் புதிதாக அசோக்குமார் கட்டி வரும் வீட்டின் டாக்குமென்ட்டுகளுடன் வருமாறு அசோக்குமாரின் மாமியாருக்கும் மனைவிக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
ஏற்கெனவே 4 முறை சம்மன் அனுப்பப்பட்ட அசோக்குமாரோ தலைமறைவாக இருந்து வருகிறார்.
செந்தில் பாலாஜி எதை கேட்டாலும் தம்பிக்குத்தான் தெரியும் என கூறி வருவதால் அவரை கைது செய்ய அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த வாரம் அசோக்குமாரின் கால அவகாசம் முடிவடைவதால் வழக்கறிஞர் கூறியது போல் அப்போது அவரே சரணடைகிறாரா என அமலாக்கத் துறை காத்திருக்கிறது.
ஒரு வேளை சரணடையாவிட்டால் எப்படியாவது அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக அவருடைய இருப்பிடத்தை அமலாக்கத் துறை தேடி வருகிறது. அவரை எப்படியாவது அப்ரூவராக்கிவிட அமலாக்கத் துறை முயற்சித்து வருகிறது
ரேசன் கடைகளில் இலவச அரிசி.. மலிவு விலையில் எண்ணெய், பருப்பு, கோதுமை மாவு, ராகி மாவு போன்றவை கொடுப்பதே மக்கள் ஏழ்மையாலும் வறுமையாலும் வாடக்கூடாது என்பதற்காகத்தான். வறுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மதுரையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உண்ண உணவு கூட இல்லாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்துள்ளது ஒரு குடும்பம். இனியும் வாழ முடியாது என்று நினைத்து ஆண் பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் அந்த குடும்பத்தில் இருந்தவர்களோ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வாசுகி, கோதண்டபாணி, உமாதேவி ஆகிய மூன்று பேரையும் விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார் பாண்டியன். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனது குடும்பம். வேலைக்கும் செல்லாமல் செலவுக்கும் பணமில்லாமல் போகவே, நகைகளை அடகு வைத்து செலவு செய்யத் தொடங்கினர்.
அக்கம் பக்கத்திலும் யாருடனும் பேசுவதில்லையாம். நகையை அடகுவைப்பதற்காக மட்டுமே கோதண்டபாணி வெளியே சென்று வருவாராம். வீடு தேடி வரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தியுள்ளனர்
வீட்டில் இருந்த அனைத்துப்பொருட்களையும் விற்று சாப்பிட்ட நிலையில் மாடிப்படி கம்பி, குழாய் பைப் போன்றவற்றையும் அறுத்து எடைக்குப்போட்டு செலவு செய்தனர். கடைசியில் எதுவுமே இல்லாமல் போகவே, குடிநீர் மட்டுமே வீட்டில் இருந்தது. கடந்த ஒரு வாரமாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தனர்.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போய் பார்த்தனர். படுக்கை அறையில் கோதண்டபாணி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். வாசுகியும் உமாதேவியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருந்தனர். மூவரின் உடலுமே அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியிருந்தது. வறுமை காரணமாகவே மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்றைய சூழ்நிலையில் 100 நாட்கள் பணிக்கு சென்றால் கூட மாதம் 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. சாதாரண வேலைக்கு சென்றால் கூட தினசரியும் 300 ரூபாய் சம்பாதிக்க முடியும் அப்படி இருக்கையில் உண்ண கூட உணவின்றி தண்ணீரை மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த மூன்று பேர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
அதன்பின்னர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.
எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
கோவை மாநகராட்சி தி.மு.க மேயர், கவுன்சிலர் உள்ளிட்ட அனைவரும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிவருகின்றனர். `தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து சென்னையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் என்று குறிப்பிடத்தக்க திட்டங்களை நிறைவேற்றினாலும், இந்த இரண்டு ஆண்டுகளில் கோவைக்கு எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பணிகளும் மந்தமாக இருக்கின்றன’ என்ற புகார் எழுந்துவருகிறது. `இதையெல்லாம் தட்டிக் கேட்கவேண்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் சைலன்ட் மோடில் இருக்கிறார்கள்’ எனக் கொந்தளிக்கிறார்கள் கோவை பொதுமக்கள்.
இது குறித்து கோவை மூத்த வழக்கறிஞர் லோகநாதன் கூறுகையில், “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கோவையும், கேரள மாநிலத்திலுள்ள கொச்சியும் ஒரே போன்ற நிலையில்தான் இருந்தன. இன்று அதன் வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. இத்தனைக்கும் கோவைக்கும் கொச்சிக்கும் ஒரே நேரத்தில்தான் மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மெட்ரோ ரயில் வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்து, அங்கு அடுத்து வாட்டர் மெட்ரோ திட்டத்தையும் நிறைவேற்றிவிட்டனர். அதேபோல திருவனந்தபுரத்துக்கு அடுத்து, மிகப்பெரிய விமான நிலையமாக கொச்சி ஏர்போர்ட் வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பலர் வெளிநாட்டுக்குச் செல்ல, சென்னை விமான நிலையத்துக்கு பதிலாக கொச்சியைத் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த தொழில்துறை அதிகமுள்ள கோவையில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை.
நீண்டகாலமாகவே கோவைக்கு வலுவான அரசியல் தலைவர் இல்லை. இங்கு அதிகாரிகளின் ஆதிக்கம்தான் அதிகம். கோவையின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலைச் சார்ந்தவர்கள். முதலீடு, லாபம் என்ற நோக்கத்திலான வணிகத்தில் ஈடுபடுபவர்கள். இவர்களாலேயே கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி பல ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது. இதில் மத்திய அரசின் பங்கும் இருக்கிறது. அங்குள்ள பாதுகாப்புத்துறை நிலத்துக்கு மாற்று இடம் வழங்குவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கோவை விமான நிலையமும் வளர்ச்சியடையவில்லை. பொதுவாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள்தான் எந்தச் சர்ச்சையிலும் சிக்கக் கூடாது என்று அமைதியாக இருப்பார்கள். ஆனால், எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் அமைதியாக இருப்பது கோவையில் மட்டும்தான்” என்றார்.
அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வும், எம்.பி-யுமான கே.சி.பழனிச்சாமி கூறுகையில், “தமிழ்நாடு அரசின் வருவாயில் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், திட்டங்களில் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கோவையில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மேற்கு புறவழிச்சாலைத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டனர். மேம்பாலப் பணிகளெல்லாம் முழுமையடையாமல் இருக்கின்றன. அவிநாசி – அத்திக்கடவு உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் பணிகள் முடங்கியிருக்கின்றன. மின்கட்டண உயர்வால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் கோவையின் அடையாளமும் மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஊடகங்களில் அவர்களின் வழக்கு தொடர்பான பிரேக்கிங் செய்திகளில்தான் பார்க்க முடிகிறது. தேர்தல் நேரத்தில், `ஆட்சிக்கு வந்தவுடன் முதல் ஆளாக வேலுமணியைக் கைது செய்வோம். சூயஸ் திட்டத்தை ரத்துசெய்வோம்’ என்றார்கள் தி.மு.க-வினர். ஆனால், இதுவரை எதையும் செய்யவில்லை” என்றார்.
கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ (அ.தி.மு.க) அம்மன் அர்ச்சுனன் கூறுகையில், “தி.மு.க அரசு புதிய திட்டங்களைக் கொண்டுவரவில்லை என்பதுடன், நாங்கள் கொண்டுவந்த திட்டங்களையும் முடக்கிவிட்டது. எப்படி கலெக்ஷன் செய்யலாம் என்றுதான் யோசிக்கின்றனர். மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆருக்கு எங்கள் ஆட்சியிலேயே நிதி ஒதுக்கிவிட்டோம். இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. கோவை சார்ந்து சட்டசபையில் வைக்கும் கோரிக்கைகளுக்கும் பதில் இல்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. தங்களுக்கு வாக்களிக்காத மக்களும் பொறாமைப்படும் அளவுக்குச் செயல்படுவோம் என முதல்வர் கூறினார். இப்போது வாக்களித்தவர்கள்கூட, `ஏன் வாக்களித்தோம்?’ என்று யோசிக்கின்றனர். நாங்கள் மக்களுக்காகப் போராட எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்றார்.
இது குறித்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமியிடம் விளக்கம் கேட்டோம். “கோவையை நாங்கள் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. சில திட்டங்களின் பணிகள் அ.தி.மு.க ஆட்சியிலேயே மந்தமாகின. காத்திருப்பிலுள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திவருகிறோம். விரைவில் மேற்கு புறவழிச்சாலை திட்டப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இதேபோல அடுத்தடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படும். முதல்வர் என்னை பொறுப்பு அமைச்சராக நியமித்தபோது கட்சிப் பணிகளைவிட, பொது வேலைகள் பற்றித்தான் அதிகம் சொன்னார். கோவை வளர்ச்சிக்காக எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
வாக்களிக்காத மக்கள் பொறாமைப்படுகிறார்களோ இல்லையோ… பொறுமையிழக்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம் முதல்வரே?
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேசியக்கொடி அறுந்து விழுந்ததால் ஆத்திரமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், அருகில் நின்ற ஊழியரை எல்லோர் முன்னிலையிலும் அடிக்கப் பாய்ந்தார்.
சுதாரித்துக் கொண்ட அந்த ஊழியர் கையை தேக்கி, கொடியை தாம் கொடிமரத்தில் கட்டவில்லை என்றும் வேறொருவர் கட்டியதாகவும் எடுத்துக்கூறி அடியிலிருந்து எஸ்கேப் ஆனார். இருப்பினும் பொதுவெளியில் சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. தன்னை அடிக்க கை ஓங்கியதை அந்த ஊழியர் அவமானமாகவே கருதினார்.
கொடியை ஏற்றுவதற்காக கயிற்றை பிடித்து மேலே இழுத்த போது பறக்க வேண்டிய கொடி, கயிற்றிலிருந்து அறுபட்டு கீழே விழுந்தது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அன்பழகன் எம்.எல்.ஏ., கவனக்குறைவாக ஊழியர்கள் செயல்பட்டதை எண்ணி அவர்கள் மீது தனது கோபத்தை கொட்டினார். ஒரு கட்டத்தில் அடிக்கவும் கையை ஓங்கிவிட்டார்.
கும்பகோணத்தை போலவே தமிழ்நாட்டின் இன்னும் பல்வேறு இடங்களில் கொடியேற்று நிகழ்வின் போது இதேபோன்று களேபரங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வை உடனடியாக தடை செய்ய வேண்டும் என சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் உருக்கமாக கேட்டுக் கொண்டார்.
நீட் தேர்வால் மருத்துவ கனவை இழந்த குரோம்பேட்டை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மகனை இழந்த தந்தை செல்வசேகரும் இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மறைந்த ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் நீட் தேர்வை உடனடியாக தடை செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நீட் தகுதித் தேர்வு காரணமாக செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவராகும் நிலை இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, நடுத்தர அடித்தட்டு சமூக மக்களின் மருத்துவக் கனவுகளை நீட் தேர்வு சிதைப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அடுத்த விக்கெட் யார் என்பதுதான் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பரபரப்பான விவாதமாக நடைபெற்று வருகிறது
செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மருத்துவமனை, நீதிமன்ற போராட்டங்களைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்தது.
செந்தில் பாலாஜி வழக்கில் அவரது சகோதரர் அசோக் தேடப்பட்டு வந்தார். அசோக்கின் சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் கேரளாவின் கொச்சியில் இருந்த அசோக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவ்வழக்கில் அடுத்து யார் கைது செய்யப்படக் கூடும் என்பதுதான் கரூர், வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே நடந்து வரும் விவாதம்.
பிஞ்சு மனங்களில் நஞ்சா….
சிரத்தில் அறிவை இழந்து கரத்தில் அரிவாளை ஏந்துவதா….
சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஔவை மூதாட்டி எழுதியது பொய்யா….
கற்காலத்தில் சாதி இல்லை…
தற்காலத்தில் மனிதநேயமே இல்லை….
எங்கே போகிறது என் நாடு…..
என்ன சொல்வது என்றே புரியவில்லை..
நாங்குநேரி மாணவன் மீதும் அவரது சகோதரி மீதும் நடந்த தாக்குதலை கனத்த இதயத்தோடு வன்மையாக கண்டிக்கிறேன்….
இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உயிரிழந்தவருக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!
இனி வரும் காலத்தில் இவ்வாறு நிகழா வண்ணம் சட்டம் தன் கடமையை கடுமையாக செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்….
சின்னதுரையும் அவரது சகோதரியும் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன். – கே.சி.பழனிசாமி
இரு சக்கர வாகனத்தில் பயணித்த அரசு ஊழியர் ஒருவர் சாலையோர பள்ளத்தில் தடுமாறி விழுந்து கம்பிகள் குத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த திருவாரூர் காவல்துறையினர் சாலை பணி ஒப்பந்ததாரர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த கம்பிகள் குத்தி குமார் உயிரிழந்ததாக தெரிகிறது. குமாரின் உடலை மீட்ட திருவாரூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
நண்பர்கள் 5 பேரும் விடுமுறை தினம் என்பதால் அவரது காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
6 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல சாலையோர பள்ளங்களினால் இன்று இரண்டு உயிர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனம் ரூ.225 கோடி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக இன்று சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்
சென்னையை சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நிறுவனத்துக்கு தொடர்புடைய 13 இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் வால்டர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் சோதனை