அதிமுக கவுன்சிலர்கள் மீது திமுக வார்டு உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது!


மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த மன்ற கூட்டத்தில் அதிமுக திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் திமுக கவுன்சிலர், அதிமுக கவுன்சிலர்கள் மீது நாற்காலியை தூக்கி வீசி எறிந்ததால் பரபரப்பு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக நகர பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறபடுத்தாமல் உள்ளதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்து அதிமுக கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளிக்க வேண்டிய நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை நடத்த கூடாது அதிகாரிகள் வந்த பின் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். ஆனால் நகராட்சி தலைவர் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கூறியதால் இரு தரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் ஒரு கட்டத்தில் அது மோதலாக மாறியது.

அதிமுக கவுன்சிலர்கள் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 17 வார்டு கவுன்சிலர் ரவிக்குமார் திடீரென அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் விஜியலட்சுமி அகியோர் மீது கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதனால் வெகுண்டு எழுந்த அதிமுக கவுன்சிலர்களும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து நகராட்சி தலைவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றும் பிரச்சினை முடிவுக்கு வராததால் மன்ற கூட்டத்தில் வைக்க பட்ட 11 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஆல் பாஸ் என கூறிவிட்டு சென்றார். இதனால் கோபமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் ஒன்பது பேரும் திமுக கவுன்சிலர்கள் குண்டர்கள் போல நடந்துகொள்வதாக கூறி மன்ற கூட்டத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நாற்காலியை தூக்கி எரிந்த கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் ஸ்ரீராம் என்ற இரு கவுன்சிலர்கள் மீது அதிமுக கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Share on:

பொது இடத்தில் சாதி பெயரை சொல்லி திட்டிய போலீஸ்! பறந்து வந்த சஸ்பெண்ட் ஆர்டர்.. உயர்நீதிமன்றம் அதிரடி


பொது இடத்தில் சாதி பெயரை குறிப்பிட்டு கணவன் மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அவர்களை சாதி ரீதியாக திட்டி, கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தங்களை சாதி ரீதியாக திட்டி தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பரிவு செய்யக்கோரி ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, குடும்பத்தினரை தாக்கிய காவலர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து விசாரணை முடிந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கிய அவர், சாதி பெயரை குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட அவர், இழப்பீட்டு தொகையை காவலர்கள் மூன்று பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல காவலர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை அவர்களை பணியிட நீக்கம் செய்யவும் உத்தரவிட்டார். சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
Share on:

இன்று ’தமிழ்நாடு நாள்’; மாநிலம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் நினைவாக இன்று ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பள்ளிகளில் தமிழர்களின் தொன்மை, கலாச்சாரம் மற்றும் பெருமையினை உணர்த்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து கன்னட, தெலுங்கு மற்றும் மலையாள மொழி பேசும் பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட சமீபத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இத்தினத்தில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை உலக அரங்கில் உயர்த்தும் விதமாக, மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதற்காக போராடிய சங்கரலிங்கனார் உள்ளிட்ட தலைவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.
Share on:

பெரம்பலூர் கல் குவாரி ஏலத்தில் தகராறு!


பெரம்பலூரில் கிரானைட் கல் குவாரி ஏலம் எடுப்பதில் நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஆட்சியர் கு. கற்பகம் ஏலத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை உதவி இயக்குனர் (AD) அலுவலகத்தில் நேற்று (அக்.30) கிரானைட் கல் குவாரி ஏலம் நடைபெற்றது. குவாரிகளை குத்தகைக்கு எடுப்பதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.

இதையொட்டி நேற்று ஒரு பிரிவினர் விண்ணப்பம் தாக்கல் செய்ய வந்த நிலையில் மற்றொரு பிரிவினர் அவர்களை விண்ணப்பிக்க விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அடிதடியில் இறங்கி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஆட்சியர் கற்பகம் அடிதடி சத்தம் கேட்டு ஏ.டி அலுவலகத்திற்கு வந்தார். தகராறில் ஈடுபட்டவர்களை எச்சரித்த ஆட்சியர் அவர்களை உடனடியே வெளியேற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று நடைபெறவிருந்த ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.

மேலும், தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நேற்று மாலை வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கல் குவாரி ஏலம் இன்று(அக்.31) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
Share on:

எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் என்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்து பிரதமர் வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கு பதில் இல்லாததன் வெளிப்பாடா ?


எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் என்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்து பிரதமர் வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கு பதில் இல்லாததன் வெளிப்பாடா ? அல்லது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படுத்தும் யுக்தியா?

அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் அம்மாவை ஒரு தேசிய தலைவராகவும், பிரதம அமைச்சருக்கு தகுதியான தலைவராகவும் பார்த்தார்கள். அதற்குரிய திறமை, செல்வாக்கு ஆளுமைத்திறன் அவரிடம் இருந்தது. ஆனால் எடப்பாடி பற்றி பேசும் பொழுது எந்த ஒரு இந்திய பிரஜையும் தலைவர் ஆகலாம் என்கிற தகுதி மட்டுமே முன்வைக்கப்படுகிறது. ஆனால் அது மட்டுமே தகுதி அல்ல. இதுபோன்ற பிரச்சாரங்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் பாரம்பரிய வக்குவங்கியை குறைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. #EPS முதல்வர் ஆக இருந்தபொழுதும் கூட கட்சியும் ஆட்சியையும் அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எந்த தேர்தலிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அப்படி இருக்கையில் EPS-ன் எதிரிகள் அவரை வீழ்த்துவதற்கு உண்டான ஆயுதமாக தான் இதனை பார்க்க முடிகிறது .

மோடியா? லேடியா? என்று சந்தித்த 2014-தேர்தலுக்கு பிறகு வழக்குகளின் கடுமை தன்மையால் அம்மாவிற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.தேசிய அளவில் EPS- க்கு என்ன பார்வை இருக்கின்றது?

சமீபத்தில் கூட ஆரியம் #திராவிடம் என்னவென்று எனக்கு தெரியாது .அது எல்லாம் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தான் தெரியும் என்று சொன்ன அறிவாளி தான் EPS.

ஆனால் ஒன்று மட்டும் நடக்கும்.அவர் பிரதமர் ஆனால் ஒவ்வொரு MP-க்கும் மாதம் ஒரு கோடி கொடுத்து அவர்களை நன்றாக கவனித்து கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பார். இந்த ஒரு திறமையை தவிர அவரிடம் கருத்தியல் ரீதியாகவோ , ஆளுமை தன்மை ரீதியாகவோ, ஆட்சி அதிகார ரீதியாகவோ எந்தவொரு திறமையும் இருப்பதாக தெரியவில்லை.

பிரதமர் யார் என்று முடிவு செய்கின்ற இடத்தில் அதிமுக இருக்கும் என்பதுதான் சரியான நிலைப்பாடாக இருக்குமே ஒழிய, நான் தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி ஓட்டு கேட்கும் பொழுது அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வாங்கியே குறைந்து போய்விடும். இப்படித்தான் எடப்பாடியின் அடிவருடிகள் எல்லா தலைவர்களையும் முதலில் புகழ்வார்கள். அப்படி புகழ்ந்து பேசினால் புகழ்ச்சி அடைபவர்களுக்கு ஆபத்து நெருங்கிக்கொண்டு வருகிறது என்று அர்த்தம்.

இதனை உணர்ந்து கொண்டு அதிமுகவின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் .
Share on:

மோசமான நிலையில் தள்ளாடும் அரசு போக்குவரத்து கழகங்கள்.


தமிழக அரசு போக்குவரத்து கழகம் தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடந்த 2022 – 2023-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டவுன் பஸ்களை இயக்கிவருகிறது. விரைவு போக்குவரத்துக்கழகம், சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் எஸ்இடிசி (விரைவு பேருந்து) பேருந்துகளை இயக்கி வருகிறது.

லாப நோக்கமின்றி ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 2022-23ம் ஆண்டு நிலவரப்படி 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.70 கோடி பேர் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள், பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 35 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் கட்டணமின்றி பயணிக்கிறார்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 55 லட்சம் பெண்கள் பயணிக்கிறார்கள். இதுதவிர 40 லட்சம் பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு சிறப்பு திட்டங்கள் காரணமாக இலவமாக மக்கள் பயணிக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன

இதுபற்றி தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. “2022 – 2023-ம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், இயக்கம் மூலம் ரூ.6,705.69 கோடியும், இயக்கம் அல்லாதவைகள் மூலம் ரூ.5,256.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்த கால கட்டத்தில் ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,978.38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 வருடத்திற்கு முன்பு அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் போக்குவரத்து கழகங்களின் வருவாய் இழப்பு சற்று குறைந்த நிலையில், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், மூலப்பொருட்கள் விலை உயர்வால் தற்போது கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.அரசு பஸ்களில் தினமும் பொதுமக்கள் பயணம் செய்வதன் மூலம் ரூ.25 கோடி வருவாய் கிடைத்தாலும் செலவு அதைவிட அதிக அளவில் உள்ளது,.

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான் நஷ்டம் கணிசமாக குறையும் என்று போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர். ஏழை எளியோருக்காக இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதே போக்குவரத்து கழக ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போதைய நிலையில் புதிய பேருந்துகள் வாங்கினால் தான் மக்கள் பலர் அரசு பேருந்துகளில் பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அப்போதுதான் வருவாய் அதிகரிக்கும் என்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகிறார்கள். அரசு தான் அதிக அளவில் புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நஷ்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Share on:

கத்தாரில் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை.. ஏன் தெரியுமா?


இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் கத்தார் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிறுவனம், ஓமன் நாட்டின், ராயல் ஓமானி விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு சொந்தமானது. இந்த நிலையில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 8 பேரும் கத்தார் நாட்டின் அதிநவீன நீர் மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தண்னீருக்குள் சென்றுவிட்டால் எதிரி நாட்டினரால் கண்டுபிடிக்க முடியாதது போல் நவீன முறையில் அந்த நீர்மூழ்கி கப்பல் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பம்சம் கொண்ட அந்த நீர்மூழ்கி கப்பல் குறித்து இந்தியர்கள் 8 பேரும் உளவு பார்த்து இஸ்ரேல் நாட்டுக்கு கூறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர்களையும், அந்நிறுவனத்தின் உரிமையாளரையும் கத்தார் நாட்டு உளவுத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. தொடர்ந்து அந்நிறுவன உரிமையாளர் கடந்த காண்டு நவம்பரிலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார்.

ஆனால் இந்தியர்களின் ஜாமின் மனுவை மட்டும் பல முறை தள்ளுபடி செய்த கத்தார் அதிகாரிகள், அவர்களது காவலையும் தொடர்ந்து நீட்டித்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இதையறிந்த இந்திய அரசு சட்ட உதவிகள் செய்து இந்தியர்கள் 8 பேரையும் தாயம் அழைத்துவரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த சூழலில், இவ்வழக்கில் இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பைத்துள்ளது கத்தார் நீதிமன்றம்.

கத்தாரில் சிறை வைக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், “விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அந்த 8 பேரின் குடும்பத்தினருடனும் சட்டக் குழுவினருடனும் தொடர்பில் இருக்கிறோம். இந்த வழக்கில் அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்குவோம். அது போல் தூதரக உதவிகளும் அவர்களுக்கு கிடைக்கும். இந்த தீர்ப்பு குறித்து கத்தார் நாட்டு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துவோம்” என தெரிவித்துள்ளது.
Share on:

8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை!


வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இவர்கள் 8 பேரும் கத்தார் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக கத்தார் அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுடைய கைது குறித்து கத்தார் அரசு எந்த அறிக்கையையும் இந்திய அரசுக்கு அனுப்பவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் உளவு பார்த்ததாக 8 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு கத்தார் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வந்தது. இதன் விசாரணைகள் முடிவடைந்து இந்த மாத இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் கத்தார் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த 8 பேரின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களை விடுவிக்க தேவையான சட்ட உதவிகளை செய்வோம். கத்தார் அதிகாரிகளுடன் இந்த தீர்ப்பு குறித்து முறையிடுவோம். இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share on:

ஆளுநரை விமர்சிக்கத் தயங்குகிறாரா? அல்லது மத்திய பாஜகவை எக்காரணம் கொண்டும் எதிர்த்துப் பேசிவிடக்கூடாது என்று நினைக்கிறாரா?


ஆரியம்,திராவிடம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது அந்த அளவுக்கு தனக்கு அறிவு இல்லை. இதுபற்றி பேசிய ஆளுநரிடமே விளக்கம் கேட்டுக்கொள்ளுங்கள்.என்கிற எடப்பாடி பழனிசாமி பேச்சு பல முன்னாள் அமைச்சர்களின் மீதான வழக்குகளுக்கு அனுமதி கோரி கோப்புகள் ஆளுநரின் கையெழுத்துக்கு இருப்பதால் ஆளுநரை விமர்சிக்கத் தயங்குகிறாரா? அல்லது மத்திய பாஜகவை எக்காரணம் கொண்டும் எதிர்த்துப் பேசிவிடக்கூடாது என்று நினைக்கிறாரா?

லஞ்சம்,ஊழல்,சட்டம் ஒழுங்கு எல்லா காலத்திலும் எல்லா அரசாங்கத்தின் மீதும் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு தான் ஆனால் சித்தாந்த அரசியலே இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைக் கவர்வதற்கும் கட்சியை வலுப்படுத்துவதற்கும் கொள்கை ரீதியாக முன்னிறுத்தப்படும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சட்டமன்றத்தில் அதிமுக ஒரு திராவிட கட்சி திராவிட சித்தாந்தங்கள் அடிப்படையில் செயல்படும் என்று பதிவுசெய்தார். ஜெயலலிதா அம்மா அவர்கள் தான் பிராமணராக இருந்தாலும் திராவிட கட்சிக்குத் தலைமை ஏற்றுத் திராவிட வழியில் பயணிக்கிறேன் என்று கூறி திராவிட சித்தாந்தங்களின் வழியில் இந்த இயக்கத்தை நடத்தினார். சில நேரங்களில் அந்த சித்தாந்தங்களிலிருந்து விலகிய பொழுது அதிமுக தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் சித்தாந்தமே எனக்குத் தெரியாது என்று சொல்லுகிறவர் இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பிற்குத் தகுதியானவர் தானா? அரசியலில் மொத்தமாகப் பணம் சேர்த்து அதைப் பங்கிட்டுக் கொடுப்பதன் மூலமாகவே ஒரு அரசியல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வரமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறாரா?

இன்றைக்குப் பல குறைபாடுகளைக் கடந்து திமுகவும்,பாஜகவும் இந்துத்துவா VS திராவிடம் என்கிற சித்தாந்த மோதலை முன்வைத்து தமிழக அரசியல் மற்றும் தேர்தல் களத்தைக் கட்டமைக்கிறார்கள். நாம் பயணிக்கிற பாதை எது என்று தெளிவாக நாட்டு மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் தெரிவிக்கவேண்டிய தலைமை பொறுப்பிலிருந்துகொண்டு தனக்கு அவ்வளவு அறிவில்லை அதுகுறித்து ஆராய்ச்சிதான் செய்யவேண்டும் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறவர் தலைமையில் அதிமுக மீண்டும் வலுப்பெறுமா? பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க,திமுகவை எதிர்த்து வெற்றிகொள்ள அதிமுக தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது.
Share on:

ஆவடியில் தடம்புரண்ட மின்சார ரயில்!


சென்னை ஆவடி அருகே மின்சார ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து காரணமாக சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது.

கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்டரல்-அரக்கோணம் வழத்தடத்தில் உள்ள ஆவடியில் மின்சார ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது.

அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு சென்ற மின்சார ரயிலின் 4 பெட்கள் தடம்புரண்டுள்ளன. இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தை நோக்கி செல்ல இருந்தது. இப்படி இருக்கையில் ரயில் விபத்தில் சிக்கியதால், தடம்புரண்ட பெட்டிகளை மீட்க ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இது தொடர்பான முதல்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறுதான் விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விபத்தில் சிக்கிய ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட பெட்டிகளை மீண்டும் சரி செய்ய சில மணி நேரங்கள் கூட ஆகலாம் என்று சொல்லபடுகிறது.
Share on: