பஸ் ஸ்டிரைக் 19ம் தேதி வரை ஒத்திவைப்பு.. கைவிட்ட தொழிற்சங்கங்கள்.. கோர்ட்டில் என்ன நடந்தது?


அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது 8 ஆண்டு கால கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், போராட்டத்தை 19ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, நேற்று முதல் (ஜனவரி 9) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவர் பால் கிதியோன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஜெ.ரவீந்திரன் பேச்சுவார்த்தை பல கட்டங்களிலும் நடந்து முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது நிலையில் தற்போது சட்டவிரோதமாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

அப்போது தொழில் சங்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருந்தாலும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி மாதத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சட்டபடி முன்னரே நோட்டீஸ் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், போராட்டம் நடத்த உரிமை இல்லை என நாங்கள் கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் நாங்கள் கூறுகிறோம். பண்டிகை நேரத்தில் இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அவசியமா? என கேள்வி எழுப்பினார். இந்த போராட்டம் மூலம் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என கேட்டனர்.

பின்னர் ஓய்வூதியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு பிற்பகலில் 2.15 க்கு பதில் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தனர்.

உணவு இடைவேளைக்கு பின்னர் நீதிமன்றம் கூடிய நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “அரசு, தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. எனவே போராட்டத்தை கைவிட்டு ஜனவரி 19ம் தேதி தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு வரும்படி தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் 7000 தொழிலாளர்களா? பொதுமக்களா? என்ற நிலை உள்ளது. அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 6ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. நேற்று அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இன்று அதிகாரிகளை வேலைக்கு செல்ல அனுமதிக்காமல் மிரட்டல் விடுப்பதால் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அண்ணா தொழிற்சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “கடந்த டிசம்பர் 19ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான நோட்டீஸ் அளிக்கப்படும் அரசு கண்டுகொள்ளாமல், புறக்கணித்துள்ளது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 2014ம் ஆண்டு முதல் நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படி வழங்க வேண்டும், ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை” என்று கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி, “தமிழகத்தின் முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை வருவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை ஜனவரி 19ம் தேதி வரை ஏன் நிறுத்தி வைக்க கூடாது?” என தொழிற்சங்கங்களுக்கும்? “92 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு தற்காலிகமாக ரூ.2,000 ஏன் வழங்கக் கூடாது?” என்று அரசுக்கும் கேள்வி எழுப்பினார்.

ஆனால், அரசும், தொழிற்சங்கங்களும் இதற்கு பதிலளிக்க முன்வரவில்லை. இதையடுத்து, இரு தரப்பினரும் பிடிவாதமாக இருப்பதாக நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து தொழிற்சங்கங்கள் தரப்பு வழக்கறிஞர்கள், ஜனவரி 19ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்தி வைக்க ஒப்புதல் தெரிவித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து நாளை பணிக்கு திரும்ப தொழிற்சங்கத்தினருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், பணிக்கு திரும்பும் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
Share on:

பாதி வழியிலேயே நிற்கும் அரசு பஸ்கள்! அனுபவமில்லாத டிரைவர்களால் பயணிகள் அவதி! விபத்துக்கள் அதிகரிப்பு?


போக்குவரத்து தொழிலாளர்கள் 8 ஆண்டுக்கால கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இப்படி இயக்கப்படும் பேருந்துகள் விபத்தில் சிக்குவதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

தேசிய அளவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழக மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதியை போக்குவரத்து கழகங்கள் வழங்கி வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான இணைப்பு என தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வில் போக்குவரத்து கழகங்கள் மிக சிறப்பான் பங்களிப்பை செய்து வருகின்றன. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு தரப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. எனவே நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓடும்போது, போக்குவரத்து கழகங்கள் ஏன் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற தவறான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. போக்குவரத்து கழகங்கள் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமுல்படுத்தப்படுகிறது. இதனால் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டுவது கிடையாது.

தமிழக மின்வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்றவற்றிற்கு முழுமையான இழப்பை ஈடுகட்டும் அரசு, தினமும் 2 கோடி மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களைப் புறக்கணிக்கின்றது. அவசரத் தேவைக்காக போக்குவரத்து கழகங்களுக்கு அவ்வப்போது அரசு வழங்கும் பணத்திற்குகூட வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து கழகங்களை சிறப்பாக செயல்படுத்த வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.

கடந்த 2017ஆம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. இதே 2018ஆம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை. சுமார் 20.000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில் பணியாளர் பற்றாக்குறையால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை. ஓட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்களின் பயண உரிமை மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பேருந்துகள் சீராக இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், சில இடங்களில் அனுபவம் இல்லாதவர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆங்காங்கே பாதி வழியில் பேருந்துகள் நின்றுவிடுகின்றன. சேலத்தில் ஐந்து ரோடு பகுதியில் அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றிருக்கிறது. கடைசியில் பயணிகள் அனைவரும் சேர்ந்து அரசு பேருந்தை தள்ளி ஓரமாக நிறுத்தியிருக்கின்றனர்.

திண்டிவனத்தில் மழை வெள்ளமாக ஓடும் பாலத்தை கடக்க முயன்றபோது அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றிருக்கிறது. பேருந்தில் இருந்த பயணிகள் வெள்ளத்தில் இறங்கி நடந்தே சென்று பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளனர். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில், பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்த கடை மீது பேருந்து லேசாக மோதியுள்ளது. இதில் கடையின் கண்ணாடி கதவுகள் உடைந்திருக்கின்றன. சில இடங்களில் பேருந்துகள் சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கியிருக்கின்றன.

எனவே தொடர் விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும், தற்காலி மற்றும் அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
Share on:

ரயில்வே மருத்துவமனைகளில் உதவியாளர்கள் நியமனம்.. சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு


ரயில்வே மருத்துவமனைகளில், ஒப்பந்த அடிப்படையில் புதிதாக உதவியாளர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 202 உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் கோரி தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், கோரிக்கையை நிராகரித்து, கடந்த டிசம்பர் 19ம் தேதி உத்தரவிட்டது.

இந்த 202 ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய தொழிலாளர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ப்ய்திய ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என கடந்த டிசம்பர் 20ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 202 ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஒப்பந்த ஊழியர்களை நியமித்தால், அது இந்த வழக்கை பயனற்றதாக்கி விடும் என்பதால், புதிதாக ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சங்கத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில், மனுதாரர் சங்க உறுப்பினர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதில் நியமிக்கப்பட உள்ளவர்களின் தேர்வு நடவடிக்கைகள் 2023ம் ஆண்டு மார்ச் மாதமே துவங்கி விட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால், அவர்களை நீக்கி விட்டு, புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்களுக்கு என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே நிர்வாகம் தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் மீறியுள்ளதாக சுட்டிக்காட்டினர். புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், அந்த இடங்களில், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அப்படி மறுநியமனம் வழங்கினால், அதன் மூலம் அவர்களுக்கு எந்த உரிமையும் கோர முடியாது என உத்தரவிட்டனர். மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
Share on:

திருவண்ணாமலை விவசாயி மீதான குண்டர் சட்டம் ரத்து.


திருவண்ணாமலையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து போராடிய விவசாயி அருள், குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், அவர் மீதான குண்டாஸ் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட்-ன் 3வது அலகை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்தது. இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிட்டிருந்தது.

அரசை பொறுத்தவரையில் இந்த நிலம் தரிசு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு நெல், மணிலா, கரும்பு, கேழ்வரகு, பூக்கள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அரசி திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்துதான் வருகிறது.

அரசு சொல்வதை போல இது தரிசு நிலம் கிடையாது என்றும், இது வேளாண் நிலம் என்று கூறி திருவண்ணாமலை மக்கள் ‘மேல்மா சிப்காட்’ விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் தொடர்பாக 72 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்படி இருக்கையில் 126வது நாளாக கடந்த நவம்பர் 4ம் தேதியன்று இவர்கள் பேரணி நடத்தியபோது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் என 7 பேர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் மேலெழுந்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர். திமுகவின் கூட்டணி கட்சிகளும், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், விவசாயி அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
Share on:

விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம்; பின்வாங்கிய அமலாக்கத்துறை?


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஆண்டு ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டது. இதையொட்டி,சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தங்களது ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்று குறிப்பிட்ட தேதியில் ஆஜராகியுள்ளனர்.

இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக வந்த எழுதப் படிக்கத் தெரியாத பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக நுங்கம்பாக்கம் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மூலம் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அமலாக்கத்துறை மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த புகார் குறித்து வழக்கறிஞர் பிரவீனாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை நடத்தினர். அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 2ஆம் தேதி புகார் மனு அளித்தனர். எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியிருந்ததையொட்டி, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து விவசாயிகள் மீதான வழக்கைக் கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share on:

விடை காணாமலே விடைபெறும் கோயம்பேடு..15 வருடத்திற்கு ஒரு முறை சென்னையில் பஸ் ஸ்டாண்டுகள் மாறுவது ஏன்?


விடை காணாமலேயே சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் விடை பெறுகிறது… 15 வருடத்திற்கு ஒரு முறை சென்னையில் பேருந்து நிலையங்கள் மாறிகொண்டே இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

சென்னைக்கு வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையம் சென்னை பாரிஸ் கார்னரில் இருந்தது. இந்த பேருந்து நிலையத்திற்கு அன்றைக்கு அண்ணா சாலை வழியாகவே அனைத்து பேருந்துகளும் சென்று வந்தன. அப்போது அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையின் முக்கிய வணிகப்பகுதியாக அண்ணா சாலை திகழ்ந்ததால், மக்கள் பயணிக்கவே முடியாத அளவிற்கு அண்ணா சாலை இருந்தது.. இதையடுத்து 2003ல் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு அமைக்கப்பட்டது.

கோயம்பேட்டை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்றால், அண்ணா சாலை வரவேண்டியது இல்லை. தாம்பரத்தில் இருந்து பைபாஸ் மூலம் நேரடியாக மதுரவாயல் சென்று அப்படியே கோயம்பேடு போக முடியும் என்பதால், வரவேற்பு கிடைத்தது. மேலும் கோயம்பேடுக்கு மணி மகுடமாக கொத்தவால் சாவடி மார்க்கெட்டும் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. அதேநேரம் வடசென்னை, தென்சென்னை என இருபகுதி மக்களும் பயணிக்க கூடிய வகையில் கோயம்பேடு மையப்பகுதியில் இருந்ததால், அந்த பகுதி அசுர வளர்ச்சி அடைந்தது. இதனால் அண்ணா சாலை போலவே வடபழனி, அசோக் நகர் செல்லும் ஜவஹர்லால் நேரு சாலை நெரிசலில் சிக்கி திணற தொடங்கியது.

இது ஒருபுறம் எனில், 2000க்கு பிறகு வேளச்சேரி பகுதிகளில் ஐடி கம்பெனிகள் வேகமாக வளர்ந்ததால், அதனை சுற்றியுள்ள கந்தன்சாவடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பல்லாவரம், குராம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம் போன்ற பகுதிகளில் தாங்க முடியாத அளவிற்கு மக்கள் நெருக்கம் ஏற்பட்டது. இதனால் வடபழனி சாலையை விட கடுமையான நெரிசலை ஜிஎஸ்டி சாலை சந்தித்தது. குறிப்பாக பெருங்களத்தூர் முதல் ஆலந்தூர் வரை எத்தனை பாலம் போட்டாலும் மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

குரோம்பேட்டை டூ துரைப்பாக்கம் (ஓஎம்ஆர், திருவான்மியூர், வேளச்சேரி) செல்ல மேம்பாலம் அமைக்கப்பட்ட போதும், மேம்பாலத்திலேயே சிக்னல் போட வேண்டிய அளவிற்கு வாகன நெருக்கம் அதிகரித்துள்ளது. சென்னை நகரத்தைவிட தாம்பரம் டூ வேளச்சேரி, தாம்பரம் டூ ஆலந்தூர் பகுதிகளில் வாகன நெருக்கம் அதிகரித்துள்ளது. காலை, மாலை வேளைகளில் வாகனம் ஒட்டவே முடியாத அளவிற்கு நெரிசல் அதிகமாகி உள்ளது. இந்த சூழலில் ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் இந்த வழியாகவே தினமும் பயணிப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பிய தமிழக அரசு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்தது. 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இன்று திறக்கப்படுகிறது.

இந்த கிளாம்பாக்கம் என்பது சென்னையின் மிக முக்கியமான நுழைவு வாயிலாக உள்ளது. துறைமுகம் செல்லும் லாரிகள், மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தாம்பரம் பெருங்களத்தூர் சாலை, காஞ்சிபுரம் வண்டலூர் சாலை, கேளம்பாக்கம் சாலை, வண்டலூர் பூங்கா, செங்கல்பட்டு திருச்சி சாலை ஆகியவை இணையும் இடத்தில் இருக்கிறது. சென்னைக்கு இங்கிருந்து எந்த பகுதிக்கும் போக முடியும் என்பதால் கிளாம்பாக்கத்தை தேர்வு செய்துள்ளார்கள். ஆனால் இதில் ஒரு சிக்கலும் உள்ளது. இன்னமும் கிளாம்பாக்கம் பேருந்துகள் நேரடியாக உள்ளே வர மேம்பாலம் அமைக்கப்படவில்லை. ரயில் நிலையமும் அமைக்கப்படவில்லை. வண்டலூரில் அல்லது ஊரப்பாக்கத்தில் இறங்கி மாறித்தான் வர வேண்டும்.

இது ஒருபுறம் எனில், பாரிஸ் கார்னருக்கு மாற்று என ஆரம்பிக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் விடை காணாமலேயே விடை பெறுகிறது.. ஒவ்வொரு 15 வருடத்திற்கு ஒருமுறை சென்னையில் பஸ் ஸ்டாண்டுகள் மாறுவது தொடர்கதையாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கிளாம்பாக்கமும் இதேபோல் அசுர வளர்ச்சி அடைய போகிறது. அதன் காரணமாக வாகன நெருக்கமும் அதிகரிக்கவே போகிறது என்பதே எதார்த்தமான உண்மை.
Share on:

சினிமா நடித்து வருஷமாச்சு. கர்ஜனை பேச்சை கேட்டு காலம் பல ஆச்சு.ஆனாலும் அலை அலையாய் மக்கள் வெள்ளம்!


தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளதை பார்க்கும் போது இதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம் என்பது நிரூபணமாகிறது

ஒரு மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை அவருடைய இறப்பிற்கு வந்த கூட்டம்தான் சொல்லும். பொது வாழ்வில் இருந்த அந்த மனிதர் எப்படியெல்லாம் மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் என்பதும் தெரியும்.

இது நிறைய அரசியல் கட்சியினர், பிரபலங்கள் இறப்பில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அந்த வகையில் விஜயகாந்த் அரசியல் கட்சியில் இருந்தாலும் அவருக்கு எதிரி என யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் நன்மை செய்துள்ளார். விஜயகாந்த் நடித்து பெரிய ஸ்டாராக வந்த காலத்தில் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களின் படங்களிலேயே முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்களாம்.

ஆனால் விஜயகாந்த் அந்த பாணியை மாற்றி 54 புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளாராம். அது போல் ஷூட்டிங்கில் ஹீரோ, ஹீரோயினுக்கு ஒரு வகையான உணவு, டெக்னீசியன்களுக்கு ஒரு மாதிரியான உணவு என இருந்தது. அதிலும் டெக்னீசியன்களுக்கு ஒரு வேளைதான் உணவு என இருந்தது.

ஆனால் இதை மாற்றி 3 வேளையும் உணவு அளிக்க ஏற்பாடு செய்தவர் விஜயகாந்த். மேலும் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் கட்டாயம் அசைவ சாப்பாடு போட வேண்டும் என்றாராம். அது போல் ஹீரோ, ஹீரோயின் முதல் லைட் பாய் வரை அனைவருக்கும் ஒரே சாப்பாடுதான் என்ற நிலையையும் கொண்டு வந்தார்.விஜயகாந்தின் ஆபிஸில் 24 மணி நேரமும் உணவு கொடுத்து கொண்டே இருப்பார்களாம்.

அது மட்டுமல்லாமல் யாராவது இல்லை என்று கேட்டால் அவர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்று கூட விசாரிக்காமல் உடனே கையில் இருக்கும் பணத்தை கொடுத்துவிடுவாராம். மேலும் தனது கல்லூரியில் நிறைய ஏழை எளியவர்கள் படிக்க இலவசமாக சீட்டு கொடுத்துள்ளார்.

இப்படி பல உதவிகளை செய்த விஜயகாந்த் இன்று காலை நிமோனியா தொற்றால் காலமானார். இந்த செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்கள் கதறி அழுகிறார்கள். இதையடுத்து கட்சி அலுவலகம் முன்பு அவர்கள் கூடினர். விஜயகாந்தின் உடல் காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் 4 கி.மீ., தூரத்தை கடக்க 4 மணி நேரம் ஆனது.

கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தை சுற்றிலும் மக்கள் தலைகள் காட்சியளிக்கின்றன. மேம்பாலத்திற்கு மேல் மக்கள் தலைகளாக உள்ளன. கீழேவும் இப்படித்தான் கடல் அலை போல் மக்கள் திரண்டுள்ளார்கள். கட்சி அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் வந்து கொண்டிருப்பதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

விஜயகாந்த் அண்மைக்காலமாக கட்சி பணிகளில் ஈடுபடவில்லை, படங்களில் கூட நடிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி கூடியிருக்கிறார்கள். இதுதான் அவர் வாழ்ந்த வாழ்கையின் அடையாளம்.
Share on:

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் பரவும் புதிய வகை கொரோனா JN 1 பரபரக்கும் ஆய்வுகள்!


தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புதுவகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் ஜே.என். 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது வேகமாக பரவி வந்தாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாததால் பயப்பட தேவையில்லை என்கிறார்கள்.

அது போல் இந்த புதிய வகையான வைரஸ் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் தெரிவிக்கிறார்கள். இது கேரளாவில் பரவி வந்த நிலையில் இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 200க்கு மேல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இத்தனை நாட்களாக ஜே.என். 1 வைரஸ் பரவல் இல்லை என சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது 4 பேருக்கு புதிய வகை கொரோன வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த 4 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டன. அவர்கள் 4 பேருக்கும் புது வகையான கொரோனா பரவியது தெரியவந்தது.

அந்த 4 பேரும் மதுரை, திருவள்ளூர், கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர். இந்த வகை கொரோனா வீரியம் குறைந்தது. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இந்த புதிய வகை கொரோனாவுக்கும் இருக்கும்.

கொரோனாவுக்கு அளிக்கும் சிகிச்சையே இந்த புதிய வகைக்கும் அளிக்கப்படுகிறது. மக்கள் கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் , கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே நோய் தீவிரமாகாமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Share on:

தற்போதைய அதிமுக தலைமையானது, களத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அதன் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!


1997 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி மாநிலம் முழுவதும் அமோக வெற்றி பெற்றது. அப்போதைய திமுக பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆரின் வெற்றிகளுக்கு ‘திரைப்பட கவர்ச்சியே காரணம்’ என்றார். ஆனால் சிறிது காலத்தில் நாவலர் நெடுஞ்செழியன் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

நாஞ்சில் கே.மனோகரன் உள்ளிட்ட சில முதல் கட்டத் தலைவர்கள், எம்.ஜி.ஆரை விட்டு திமுகவுக்குச் சென்றபோது, முக்கிய கூட்டணி கட்சிகள் இல்லாமல், பொருளாதார சிக்கலில் இருந்துகொண்டு, எம்.ஜி.ஆர் துணிச்சலுடன் போராடினார். 1980 மே மாதம் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார்.

1972-ல் எம்.ஜி.ஆர் உருவாக்கியதை விட இன்றைய அதிமுக ஒரு திடமான அமைப்பையும், தீவிர திமுக எதிர்ப்பு தொகுதியையும் கொண்டுள்ளது.

அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கை மூலம் அமைச்சர் ஒருவரை சிறையில் இருக்கிறார். மற்றொருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார்.சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளமும், தென் மாவட்டங்களில் பெய்த மழையும் திமுக அரசின் தொலைநோக்கு பார்வை மற்றும் திட்டமிடல் இன்மையை காட்டிக் கொடுத்துள்ளது.

இருப்பினும் இதை பயன்படுத்தி களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதிமுகவின் எதிர்க்கட்சி செயல்பாடுகள் அரிதாகவே உணரப்பட்டது. தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி வெறும் சில நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்துவிட்டு சேலம் திரும்பிவிட்டார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மாவும் வேண்டிய நேரத்தில் மக்களிடம் சென்றார்கள். திமுக மற்றும் எதிர்க்கட்சிகளை கேள்வி எழுப்புவதில் ஜெயலலிதா அவர்கள் சிறந்து விளங்கினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இன்னும் பிரகாசிக்கவில்லை.1980ல் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, எம்.ஜி.ஆர் விவசாயிகள் சங்கம், கம்யூனிஸ்டுகள் போன்றோரை அணுகினார் அவர்களை தன் பக்கம் இழுத்தார். ஆனால் தற்போதைய அதிமுக தலைமை அனைத்து திமுக எதிர்ப்பு சக்திகளையும் ஒன்று திரட்டி மாற்று அணியை உருவாக்க தவறுகிறது. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கட்டி கட்சியை ஒருங்கிணைக்க தவருகிறார் எடப்பாடி பழனிசாமி.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தலைமைக்கு பிறகு இன்று அதிமுக திடமான தொண்டர்பலம் உள்ள அமைப்பாக உள்ளது. ஆனால் அதன் நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற வலிமையான தலைவர்கள் இல்லை, எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட அவரோடு பயணித்த அவரது மரபைச் சுமந்து செல்பவர்கள் அதிமுகவை வழிநடத்தினால் மட்டுமே மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்.
Share on:

100 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி..இதே டிசம்பர் 16-18-ல் இதே இடங்களில் வரலாறு காணாத வெள்ளம்-ஆச்சரியம்!


தற்போது திருநெல்வேலியை புரட்டிப் போட்ட தாமிரபரணி பெருவெள்ளம் இதே தேதிகளில் இதே இடங்களில் இதே பாதிப்புகளுடன் 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923-ம் ஆண்டு நிகழ்ந்தது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று ஆச்சரியம்!

குமரிக் கடல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. இப்பெருமழை வெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் திருநெல்வேலி மாவட்டம் மீள முடியவில்லை.

வரலாற்றில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923-ம் ஆண்டு டிசம்பர் 16, 17 தேதிகளிலும் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் இதே பெருவெள்ளத்தை எதிர்கொண்டது. அதுவும் இப்போது எப்படியெல்லாம் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதோ அதே இடங்களில் அதே மாதிரியான பாதிப்புகள் நிகழ்ந்தன என்பதை 1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வெளியான இந்து நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி இந்து நாளிதழில் “Madura Floods” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

-தாமிரபரணி நதியில் கடந்த 4 நாட்களாக பெருவெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

– திருநெல்வேலியின் பெரும் குளங்கள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்தோடியது

-திருநெல்வேலி நகரத்தின் சன்னியாசி கிராமம், கைலாசபுரம், வீரராகவபுரம், சிந்துபூந்துறை பகுதிகளில் 3 முதல் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

– திருநெல்வேலி பாலம் ஶ்ரீ வைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட ரயில் நிலையங்களை 3 நாட்களாக வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன

– ரயில் நிலையங்களின் ஆவணங்கள், ஊழியர் குடியிருப்புகள், ரயில்வே சொத்துகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

– ஶ்ரீவைகுண்டம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டது. – ரயில்வே தடத்தில் தந்தி கம்பங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

– ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன

– தென்காசி முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதையில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு 1923-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி நாளிட்ட தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

தற்போதைய பெருவெள்ளத்திலும் சிந்துபூந்துறை, வீரராகவபுரம் உள்ளிட்ட திருநெல்வேலியின் பல பகுதிகள் பல அடி உயர வெள்ளத்தில் மூழ்கின. ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் 3 நாட்களாக வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்டது. ஶ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 700க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தவியாய் தவித்து ராணுவம் வந்து மீட்கும் நிலைதான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on: